Thursday, October 9, 2025

28. சிறைக்குப் போகும் கண்டம்!

விமானம் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. விமான நிலைய லவுஞ்ச்சில் உட்கார்ந்திருந்த கோபாலன், சுற்றுப்புறத்தைப் பற்றிய பிரக்ஞையை மறந்து, சிந்தித்துக் கொண்டிருந்தார்.

நேற்று ஏதோ நேரம் இருந்தது என்று தமது பழைய நண்பர் ராமனைப் பார்க்கப் போனதால் வந்த வினைதான் எல்லாம். கை ரேகை நிபுணரான ராமன் சும்மா இல்லாமல், விளையாட்டாக கோபாலனின் கையைப் பார்க்க ஆரம்பித்தார். 

முதலில் அசிரத்தையாகப் பலன் கேட்டு வந்த கோபாலன், சில விஷயங்களை ராமன் கண்ணால் பார்த்தது போல் நுணுக்கமாக, கச்சிதமாக விவரிக்க ஆரம்பித்ததும், வியப்பில் ஆழ்ந்து விட்டார். ஆர்வம் பெருக மேலும் கேட்டு வந்த போதுதான், ராமன் அந்த வெடியை எடுத்து வீசினார். 

கோபாலா, நான் கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காதே! நீ என்ன பிசினஸ் பண்ற?” 

மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்.” 

சட்ட விரோதமா ஏதாவது செய்யறியா?” 

சேச்சே!” 

வருமான வரி ஏய்ப்பு ஏதாவது செஞ்சிருக்கியா?” 

“100 சதவீதம் நேர்மையான இன்கம் டாக்ஸ் ரிட்டர்னுக்கு ஒரு சாம்பிள் வேணும்னா, என் ரிடர்னைத்தான்  காட்ட முடியும். ஆமாம், என்ன இது? எதுக்கு இப்படி எல்லாம் கேக்கற?” 

ராமன் முகத்தைக் கவிழ்த்தபடி, சற்று நேரம் யோசனை செய்தார். 

கோபாலா, ஐ ஆம் சாரி. இந்தத் தொழில்ல உண்மையைச் சொல்லிடணும். எதையும் மறைக்கக் கூடாது. உன் கை ரேகைப்படி, உன்னைச் சிறைக்கு அனுப்பக் கூடிய கண்டம் ஒண்ணு இருக்கு!” 

வாட்?” 

அதனாலதான் கேட்டேன். நீ ஏதாவது தப்புக் காரியம் செஞ்சிருக்கியான்னு! வேற ஏதாவது, மது மாது இது மாதிரி?” 

ஸ்டாப் இட்! உனக்குத் தெரியும், என்னைப் பத்தி. என் வாழ்க்கையில ஒரே லட்சியம் நேர்மை, தூய்மை, உண்மை இதுதான். நேர்மையா இருந்தும், நான் வசதியா இருக்கிறது கடவுளோட கருணை.” 

இரு, இரு. நான் உன்னை சந்தேகப்படல ஆனா, ரேகை பொய் சொல்லாதே!”

அப்படின்னா, நான் ஜெயிலுக்குப் போவேன்னு சொல்றியா? 

"அதைத்தான் சொல்ல வரேன். போவேன்னு நிச்சயமா சொல்ல முடியாது. சில விஷயங்கள்ள பிராபபிலிடிதான் இருக்கும். நிச்சயம் நடக்கும்னு சொல்ல முடியாது. இந்த சமயத்தில உனக்குச் சிறைக்குப் போற கண்டம் இருக்கு அப்படின்னு தான் சொன்னேன். ஆனா, போகத்தான் வேணும்னு அவசியமில்லை.” 

குழப்பற!” 

குழப்பல. தெளிவாச் சொல்றேன். கண்டம் என்கிறது ஒரு அபாயம்தான். நான் உனக்குச் சொன்னது ஒரு அபாய அறிவிப்புதான். நீ எச்சரிக்கையா இருந்தா, உன்னால  அபாயத்தைத் தவிர்க்க முடியும்.” 

எப்படி?” 

மின்சாரக் கம்பின்னு தெரியாம தொட்டா, ஷாக் அடிக்கும். ஆனா, அபாயம்னு போர்டு இருந்தா, விலகிப் போயிடுவோம், இல்ல? அது மாதிரிதான்.” 

ஓ! அப்படின்னா, சிறைக்குப் போற மாதிரி காரியம்  எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்ற. அப்படித்தானே?” 

எக்ஸாக்ட்லி.”  

நான் ஏற்கனவே அப்படித்தானே இருக்கேன்!”  

ராமனிடம் ஜம்பமாகப் பேசிவிட்டாரே தவிர, அவர் விடுத்த ‘அபாய எச்சரிக்கை’ ஒரு லேசான பயமாக கோபாலனின் மனதில் செலோடேப் மாதிரி ஒட்டிக் கொண்டது - அகற்ற முடியாமல், எப்போதும் உறுத்திக் கொண்டே. 

ராமனின் சோதிடம் தவறாக இருக்க முடியாது ஆனால், தான் எதற்காகச் சிறைக்குப் போக வேண்டும்? 

முதல் நாள் ராமனிடமிருந்து விடைபெற்றது முதல், பம்பாய்க்குப் போக விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்த நேரம் வரை, அந்தக் கேள்வி ஒரு வண்டாக அவர் மனதைச் சுற்றி வந்து, அவரை நிலை கொள்ளாமல் அடித்து வந்தது.

அவர் விமானத்தில் ஏறி, விமானமும் கிளம்பி விட்டால், மனம் வேறு திசையில் திரும்பி விடும். அதுவரை நேரத்தைத் தள்ள வேண்டுமே! 

பக்கத்தில் கிடந்த செய்தித்தாளை எடுத்துக் கண்களை வலுக்கட்டாயமாகச் செய்திகளின் மீது செலுத்தினார் கோபாலன். 

அமெரிக்கப் பயணக் கைதிகள் விடுதலை!’ 

செய்தியை விரிவாகப் படித்தவருக்கு, சுருக்கென்று ஏதோ உரைத்த மாதிரி இருந்தது. 

ஒரு வருடத்துக்கும் மேலாக ஈரானில் சிறைப்பட்டிருந்த அமெரிக்கர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.’ 

சிறைப்பட்டிருந்த!’ 

ராமன் சொன்ன ‘எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்பதற்கு அவருக்குப் புது அர்த்தங்கள் புரிந்தன. அவர் செல்லப் போகும் இந்த விமானம் கூடக்  கடத்தப்பட்டு, அவர் ஒரு பணையக் கைதியாக பல நாட்கள், ஏன் பல மாதங்கள் கூட, வைக்கப்பட்டும் நிலை வரலாம்! 

சிறைக்குப் போகும் கண்டம்! 

பம்பாய்க்கு ரயிலிலேயே போய்விடுவது என்று முடிவு செய்து, விமான டிக்கெட்டை கேன்சல் செய்ய எழுந்து போனார் கோபாலன்.

 

27. போகாதே, போகாதே, என் தலைவி!

 (1981-இல் எழுதப்பட்டது. அன்றைய அரசியலின் சாயல் இதில் பிரதிபலிக்கக் கூடும்!)


ஆரம்ப எழுத்தாளர் அண்ணாமலை நிறைய சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிப் பார்த்தார். எதுவும் பிரசுரம் ஆகவில்லை. அதன் பிறகு, புராணக் கதைகள் எழுதிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார் அதன் விளைவுதான் இந்தக் கதை.

ஒரு விஷயம் -  அண்ணாமலைக்குப் புராண அறிவு அவ்வளவாக இல்லை. அத்துடன் அவரது கற்பனையும், அன்றாட அரசியல் செய்திகளும் அவர் எழுத்தை பாதித்திருக்கின்றன.

லட்சிய உறவு கொண்ட சிவபெருமானுக்கும், அன்னை பராசக்திக்கும் இடையே, சிறிது காலமாகவே இடைவெளி அதிகரித்து வந்தது. சிவபெருமான் எவ்வளவுதான் பணிந்து போகத் தயாராக இருந்தாலும், அம்மையார் அவரை அலட்சியம் செய்வது அதிகரித்து வந்தது.

அன்னையின் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட குறுநிலம் ஒன்றை ஆண்டு வந்த தட்சன், ஒரு பெரிய வேத மாநாடு நடத்தத் திட்டமிட்டு, அதற்கு அம்மையாரையும் அழைத்திருந்தான்.

ஆனால் சிவபெருமான், தனக்குச் சரியான அழைப்பு இல்லை என்று பொருமிக் கொண்டிருந்தார். வேத முதல்வனான தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வேத மகாநாடா என்ற ஆத்திரத்தில் அவர் தட்சனை ஏசிப் பேச, தட்சனும், அவரது சகாக்களும் சிவபெருமானைக் கிண்டல் செய்து பேசி வந்தனர். 

தன்னை ஆதரித்து நிற்க வேண்டிய அம்மையார் மாநாட்டுக்குப் போவதா என்று வெதும்பிய சிவபெருமான், அம்மையாரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்:

சிவபெருமான்: பராசக்தி! தட்சனுக்கு  வேதத்தைப் பற்றி என்ன தெரியும்? வேதவழி வந்தவனே இல்லையே அவன்! நான்தானே வேத முதல்வன்?

அம்மையார்: அதை பற்றி எனக்கென்ன? உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் நான்தான் எல்லோருக்கும் தலைவர்.. என்னை வணங்கி நிற்பவர்களுக்கு நான் அருள் புரிவேன். அவ்வளவுதான்

சிவபெருமான்: நாம் இணைவதை அவன் எதிர்த்ததை மறந்து விட்டாயா?

அம்மையார்: தட்சன் எதிர்த்தது உங்களைத்தானே தவிர, என்னை அல்ல என்பது எனக்குத் தெரியாதா? ஏன், உங்களுடன் இணைவதற்கு முன் நானும் தட்சனும் ஒரே குடும்பமாகத்தானே இருந்தோம்? 

சிவபெருமான்: அவன் மோசமானவன். நாராயணனைச் சிறையில் வைத்தானே!

அம்மையார்: நான்தான்  வைக்கச் சொன்னேன்.

 சிவபெருமான்: என்ன, நீயா? நாராயணன் உன் உடன்பிறப்பு இல்லையா? 

அம்மையார்: இந்த உடன்பிறப்பு, ரத்தம் இதெல்லாம் உங்களுக்குத்தான்! எனக்கு இல்லை.

சிவபெருமான்: நாராயணனை ஏன் சிறை வைக்கச் சொன்னாய்?

அம்மையார்: என்னை எதிர்ப்பவர்கள் சிலருக்கு அவர் தலைமை தாங்கி நடத்த முயன்றார். 

சிவபெருமான்: என்ன இருந்தாலும், அவர் நமது நண்பர் இல்லையா?

அம்மையார்: நண்பராக இருந்தால், தட்சனை எதிர்த்து நாம் போரிட்டபோது, நடுநிலை வகித்து நம்மைக் கவிழ்த்திருப்பாரா?

சிவபெருமான்: நடுநிலை வகித்தவரைப் பகைக்கிறாய். எதிரியுடன் இணைகிறாயே!

அம்மையார்: என் எதிரியே ஆனாலும், எனக்கு அடிமை செய்தால், அவர்களுக்கு நான் துணை புரிவேன். 

சிவபெருமான்: அப்படியானால், மாநாட்டுக்குப்  போகத்தான் போகிறாயா?

அம்மையார்: ஆமாம்.

சிவபெருமான்: அங்கே என்னை அவதூறு பேசுவார்கள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறாயா.?

அம்மையார்: என்னைப் போற்றுவார்களே! அதைக்  கேட்டுக் கொண்டிருப்பேன்

சிவபெருமான்: அம்மையாரே! நீ என்னைக் கைவிட்டு விடுவாய் என்று அஞ்சுகிறேன். 

அம்மையார் பதில் சொல்லாமல் சிரித்தார்

சிவபெருமான்: என் துணையால்தான் உனக்கு ஒரு முறை வெற்றி கிடைத்தது என்பதை மறந்து விடாதே

அம்மையார்: இப்படி நீங்கள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது என்பதற்காகத்தான், உங்களோடு சேர்ந்ததால்தான்  ஒரு முறை எனக்குத் தோல்வி கிடைத்தது என்று முன்பே சொல்லி விட்டேன்

சிவபெருமான்: உன் பிள்ளை சுப்பிரமணியனைக் கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும்.  அவர் ரொம்பவும் ‘எம்பி’க்  குதிக்கிறார் பெரிய பிள்ளை கரிமுகத்து மூத்தனார் பரவாயில்லை. 

அம்மையார்: மூத்தனாருக்கு நான் அதிக  இடம் கொடுத்தால், உங்கள் கை ஓங்கும் என்று பார்க்கிறீர்களா?

சிவபெருமான்: எப்போதும் உன் ‘கை’ தானே ஓங்கி இருக்கிறது!

அம்மையார்: சரி, நேரமாகிறது நான் மாநாட்டுக்குக்  கிளம்புகிறேன்.

சிவபெருமான்: அப்புறம், இன்னொரு விஷயம். என்னுடைய குதிரைகளை அந்த தட்சன் மாநாட்டில் காட்சிப் பொருளாக வைக்கப் போகிறானாமே!

அம்மையார்: அஸ்வமேத யாகம் செய்யப் போகிறானோ, என்னவோ!

சிவபெருமான்: நீ மாநாட்டுக்குப் போகத்தான் போகிறாய்! போய்விட்டு வந்ததும், உன்னிடம் தட்சன் மீது ஒரு புகார் மனு கொடுக்கிறேன். அதையாவது கவனி

அம்மையார்: நேரம் இருந்தால் பார்க்கிறேன்.

சிவபெருமான்: என் நேரம் நன்றாக இருந்தாலா?

(இருவரும் சிரிக்கிறார்கள்.)