Saturday, September 17, 2016

20. இரண்டு கொலை ஒரு விடுதலை

 "இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?" என்றான் ராம்கி.

ஆனந்த், ராம்கியிடமிருந்து பேப்பரை வாங்கிப் பார்த்தான்.

ரசிகர் தற்கொலை 
பிரபல நடிகை நளினாவின் மர்மச்  சாவைத் தொடர்ந்து அவரது மற்றொரு ரசிகர் நேற்று இன்னமும் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின்  மொட்டை மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பே ஒரு பெண் ரசிகை தன் அபிமான நடிகையின் மறைவைத் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தது தெரிந்ததே. நளினாவின் மறைவைத் தொடர்ந்து நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை ஆகும் இது.

"இதைப்  பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்றான் ராம்கி.

"விவரமாக ஒன்றும் போடவில்லையே! இறந்தவர் ஆண் என்பதால் அவர் புகைப்படத்தைக் கூடப்  பிரசுரிக்கவில்லை! நடிகையின் மரணத்தை மர்மச்சாவு என்பதும், மற்ற இரண்டு மரணங்களையும் தற்கொலை என்று எழுதுவதும், புலன் விசாரணைக்கு முன்பே, அனுமானத்தின் அடிப்படையில், இவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதைத்தான் காட்டுகிறது."

"ஒரு பிரைவேட் டிடக்டிவ்  என்ற முறையில் நளினாவின் மரணத்தைப் பற்றி நீங்கள் ஆராய்ந்து வருகிறீர்களே, உங்கள் விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் உண்டா?"

"இல்லை. ஒன்றும் நிச்சயமாகச்  சொல்ல முடியவில்லை. போலீஸ் தரப்பில் தற்கொலை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. வேறு மாதிரி நினைப்பதற்கான தடயம் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை."

" உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?"

"போலீசுக்கே கிடைக்காதபோது எனக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்கள் இடத்தைக் காலி செய்த பிறகுதானே நான் அங்கு போனேன்!  நளினாவின் அண்ணன் வற்புறுத்தியதால்தான் இந்தக் கேஸை எடுத்துக் கொண்டேன். அவர் என்னவோ ரொம்பப் பிடிவாதமாக இது கொலைதான் என்று நம்புகிறார். போலீசில் இதை ஒரு தற்கொலை என்று முடிவு செய்து கேஸை முடித்து விடுவார்கள் என்று  பயந்துதான் என்னிடம் வந்தார்."

"ஜனங்கள் கொலை என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்."

"ஒரு இயல்பான சாவைக் கூட கொலை என்று சொல்வதில்தான்   ஜனங்களுக்கு ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கும். ஜனங்கள் பேசிக்கொள்வதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. எனக்கு வேண்டியவை தடயங்களும், உண்மையும்தான்."

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால், இந்தக் கேஸில் இதுவரை நீங்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?"

தன்னுடைய அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இருக்கும் இன்னொரு  அலுவலகத்தில் டைப்பிஸ்டாகப் பணி புரியும் அந்த இளைஞனுக்கு, துப்புத் துலக்குவதில் உள்ள ஆர்வத்தையும், தன்னிடம் இருக்கும் மதிப்பையும் நினைத்துக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொண்டான் ஆனந்த். 'இவன் கூட நாளை ஒரு பெரிய டிடக்டிவாக வரலாம், யாருக்குத் தெரியும்?'

"ஓ, சொல்கிறேன். அதற்கு முன்னால் நளினாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் கொஞ்சம் சொல். அந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு நான் மேலே சொல்கிறேன்."

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த இரண்டு வருடங்களாக, என்னுடைய எல்லா இரவுகளும் 'அவளோடராவுகள்'தான்* - கனவுகளில்! சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே அவர்தான் கனவுக்கன்னி. அழகு, எளிமை, திறமை மூன்றும் அபூர்வமாக இணைந்திருந்த அற்புத நடிகை அவர். குறுகிய காலத்திலேயே, நடிப்பில் பல சிகரங்களை அனாயாசமாகத் தொட்டு விட்டார். இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு முடிவு அவருக்கு வந்திருக்க வேண்டாம். கனவுகள் எல்லாம் பாதியிலேயே கலைந்து விட்டன."

"சரி. நளினாவின் திருமணத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'

"அது திருமணமே இல்லை சார்! அது ஒரு மோசடி. அந்த ரத்னசபாபதிதான் நளினாவைத் தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகும் பல படங்களில் வாய்ப்புக் கொடுத்து அவரை ஒரு பெரிய நடிகையாக உருவாக்கினார். ஆனால் திருமண வயதில் மகன், மகள் எல்லாம் உள்ள அந்த அறுபது வயதுக் கிழவரை நளினா திருமணம் செய்து கொண்டதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் என்னவென்றால் நளினாவுக்காகத் தான் தன்  குடும்பத்தையே துறந்து விட்டு வந்ததாகப் பெரிய தியாகி போலப் பேசுகிறார்! திருமணத்துக்கு ஆறு மாதம் முன்பு, ஒரு விழாவில், நளினா ரத்னசபாபதியைத் தன் திரையுலகத் தந்தை என்று வர்ணித்தார்.அவரும் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் நளினாவைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தார். ஆனால் ஏதோ நடந்து விட்டது. நளினாவை மிரட்டித்தான் அவரைத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்திருப்பார் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்."

"ரைட். நளினாவின்  அண்ணன் ரமேஷ்பாபுவும் இப்படித்தான் சொல்கிறார். சரி. சம்பவம் நடந்த அன்றைக்கு வருவோம். இரவு ஷூட்டிங்கில் இருந்து காலை ஏழு மணிக்கு நளினா வீடு திரும்பியிருக்கிறார். சமையற்காரி ஃபிளாஸ்க்கில் காப்பி கொண்டு வந்து வைத்திருக்கிறார். நளினாவுக்கு அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. அத்துடன் அவர் தனிமையை விரும்புபவர். அதனால் அடிக்கடி சமையற்காரி நளினாவின் அறைக்கு வருவதைத் தவிர்க்கவே  ஃபிளாஸ்க்கில் காப் பி வைக்கும் ஏற்பாடு. நளினா  காப்பியைக் கொஞ்சம் ருசி பார்த்து விட்டு, காப்பி கழுநீர் மாதிரி இருப்பதாகக் கோபமாகப் பேசி சமையற்காரியை வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கிறார். சமையற்காரி தயங்கியபோது, "உன் மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொள். சமையலை நான் பார்த்துக்கொள்கிறேன்." என்று கத்தியிருக்கிறார். சமையற்காரி வேறு வழியில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டாள். வீட்டில் வேறு வேலைக்காரி கிடையாது. வீட்டு வேலை முழுவதையும் அந்த சமையற்காரிதான் பார்த்துக்
கொண்டிருந்தாள். பன்னிரண்டு மணிக்கு ரத்னசபாபதி வந்து பார்த்தபோது  நளினா இறந்து கிடந்தார் என்பது அவருடைய வாக்குமூலம். ஃபிளாஸ்குக்குக் கீழே நளினாவின் கையெழுத்தில் தன் மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை என்றும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்த கடிதம். தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  ஃபிளாஸ்க்கில் மீதியிருந்த காப்பியை சோதனை செய்து பார்த்ததில், அதில் 'பினோபார்பிடோன்' என்ற தூக்க மாத்திரை கலந்திருந்தது தெரிந்தது. ஃபிளாஸ்க்கின் அடியில் மாத்திரைத் துகள்கள் கொஞ்சம் கரையாமல் இருந்தன. நளினாவுக்குத் தூக்க மாத்திரை உபயோகிக்கும் பழக்கம் உண்டு. விரும்பிய நேரத்தில் தூங்க வேண்டும் என்பதற்காக டாக்டரிடம் கேட்டுத் தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்திருந்தார். அவர் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர் அறையிலிருந்த தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்துதான் மாத்திரைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாட்டிலில் நளினாவின் கைரேகை மட்டும்தான் இருக்கிறது."

"அப்படியானால் திட்டமிட்டே சமையற்காரியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நளினா  காப்பியில் தூக்க மாத்திரையைக் கலந்து அருந்தியிருக்கிறார் என்றுதானே தோன்றுகிறது?"

"அப்படித் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது!"

"எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை சார்! இது ஒரு தற்கொலை என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?'

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, நளினா எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் தூக்க மாத்திரையை உட்கொண்டிருக்கிறார். நிச்சயமாக .எட்டு மணிக்கு முன்னால் இல்லை. அப்படியானால், ஏழு மணிக்கு வேலைக்காரியை அனுப்பிய நளினா எட்டு மணி வரை ஏன் தாமதித்திருக்க வேண்டும்?"

"ஒரு வேளை தற்கொலை செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று அவர் சற்று நேரம் யோசித்திருக்கலாம்."

"பாஸிபிள். மாத்திரையை அப்படியே விழுங்காமல் ஃபிளாஸ்க்கில் இருந்த காப்பியில் கலந்து ஏன் அருந்த வேண்டும்?"

"ஒரு மாத்திரை என்றால் அப்படியே விழுங்கி விடலாம். ஐந்தாறு அல்லது ஏழெட்டு மாத்திரைகளை அப்படியே விழுங்குவது கஷ்டம் ஆயிற்றே!"

"இந்த விளக்கமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு யாரோ காப்பியில் மாத்திரையைக் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது அல்லவா? மாத்திரையை தம்ளரில் கரைக்காமல் ஃபிளாஸ்க்கில் ஏன் கரைக்க வேண்டும்? அப்புறம், அந்தக் கடிதம்!"

"அதற்கென்ன? அது நளினாவின் கையெழுத்து இல்லையா?"

"அவள் கையெழுத்துதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கையெழுத்து நிபுணர்கள் கூட இதை உறுதி செய்து விட்டார்கள். ஆனால், கடிதத்தில் காப்பி சிந்தியதால், 'நளினா' என்ற கையெழுத்தில் முதல் இரண்டு எழுத்துக்கள் அழிந்து 'னா' மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது. அத்துடன்..."

"அத்துடன்?"

"இல்லை. அதை அப்புறம் சொல்கிறேன். கையெழுத்துப் போட்ட இடத்தில் மட்டும் காப்பி சிந்தி முதல் இரண்டு எழுத்துக்கள் அழிந்திருப்பதை என்னால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னொரு விஷயம். நளினாவின் மேஜையின் மீது இருந்த மூன்று பேனாக்களில் எவற்றின்   இங்க்குமே  கடிதம் எழுதப்பட்ட  இங்க்குடன் ஒத்துப்போகவில்லை."

"ஒருவேளை கடிதத்தை வெளியிலிருந்து எழுதி எடுத்து வந்திருக்கலாம் இல்லையா?"

"பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளப்போகும் முன்புதான் கடிதம் எழுதுவார்கள். கடிதத்தை முன்பே எழுதி வைக்க வாய்ப்பு இல்லை. அப்படி எழுதி வைத்திருந்தால் அது யார் கண்ணிலாவது பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் இப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். மேலும், இரண்டு வரிக் கடிதத்தைக் கடைசி நேரத்தில் எழுதுவது ஒன்றும் கடினம் இல்லையே! அதை ஏன் முன்பே எழுதி வைத்திருக்க வேண்டும்?"

"ஒருவேளை ஸ்டூடியோவில் தற்கொலை செய்து கொள்ள நினைத்துக் கடிதம் எழுதிய பிறகு, ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்."

"ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நீ விளக்கம் சொல்வதைப்  பார்த்தால், நீதான் நளினாவைக் கொலை செய்திருப்பாயோ என்று தோன்றுகிறது. அதனால்தான் இதைத் தற்கொலை என்று சாதிக்க முயல்கிறாயா?"

"சார்!"

"பயப்படாதே! விளையாட்டுக்குச் சொன்னேன். பொதுவாக, தவறு செய்தவர்கள்தான் இது போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இது போன்ற விளக்கங்கள் உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்!"

"சார், இது ஒரு கொலையாக இருந்தால்தான் எனக்கு இதில் ஒரு ஆர்வம் இருக்கும். தற்கொலை என்று முடிவானால் சப்பென்று போய் விடும்!"

"பார்க்கலாம். உன் ஆர்வத்துக்காகவாவது இது ஒரு கொலையாகவே இருக்கும் என்று நம்புவோம்!"

"கைரேகைகள் ஏதாவது கிடைத்தனவா சார்?"

"ஃபிளாஸ்க்கிலும், தம்ளரிலும் நளினா, சமையற்காரி ஆகிய இருவரின் கைரேகைகள் மட்டுமே இருக்கின்றன. அறைக்குள் ரத்னசபாபதி உட்படப் பலரின் கைரேகைகள் இருக்கின்றன. நளினா தன் வீட்டுக்கு வருபவர்களைத் தன் அறைக்குள் அழைத்துப் பேசும் வழக்கம் கொண்டவர் என்பதால் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை."

"நீங்கள் என்ன சார் நினைக்கிறீர்கள்? இது தற்கொலைதானா?"

"வெல். எனக்கு இது தற்கொலையாக இருக்காது என்று தோன்றியதால்தான் நளினாவின் அண்ணன் கேட்டுக்கொண்டபடி இந்தக் கேஸை எடுத்துக்  கொண்டேன். இது கொலையாக இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்கள் இருக்கின்றனவே தவிர, இதுவரை வேறு தடயமோ, சாட்சியமோ கிடைக்கவில்லை. ரத்னசபாபதி மீது சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் அவர்தான் நளினவைக் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது இம்பாஸிபிள் - கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சி யாராவது இருந்தால் ஒழிய! ஆனால் இப்போது உன்னிடம் பேசியதில் எனக்கு ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. அதை வைத்து முயற்சி செய்யப்போகிறேன்."

"என்னிடம் பேசியதை வைத்தா? அது என்ன சார் க்ளூ? உங்களிடம் பேசியபிறகு, எனக்குக் குழப்பம்தான் அதிகமாகி இருக்கிறது?"

"அப்படித்தான் இருக்க வேண்டும்! கதைகளில் எல்லாம் அப்படித்தானே வருகிறது? ஒவ்வொரு உரையாடலின்போதும் துப்பறிபவருக்கு எதாவது க்ளூ கிடைக்கும். அவருடைய உதவியாளர் அல்லது நண்பருக்குக் குழப்பம்தான் மிஞ்சும்!"

"என்ன க்ளூ சார் அது? நான் அதைத் தெரிந்து கொள்ளலாமா?'

"அந்த க்ளூவைக் கொடுத்ததே நீதானே? நீ என்னவெல்லாம் சொன்னாய் என்று நினைத்துப் பார்த்தால் உனக்கே அது விளங்கும். சரி, நான் இப்போது நளினாவின் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"

"ஓ எஸ்." என்றான் ராம்கி உற்சாகமாக. "அங்கே எதாவது தடயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?'

"அப்படி எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை. போலீஸ் அங்கே ஒரு தூசியைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கொலை நடந்த இடத்தைப் போய்ப் பார்ப்பதில் எதாவது பலன் கிடைக்கலாம். நம்மை அறியாமலேயே சில எண்ணங்கள் நமக்குத் தோன்றலாம். உனக்கு எதாவது தோன்றினால், அதை என்னிடம் சொல். அதற்குத்தான் உன்னை அழைத்துப் போகிறேன்" என்றார் ஆனந்த்.

"எனக்கென்ன சார் தெரியும்? உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்குத் தெரியப்  போகிறது?"

"அப்படி இல்லை. நாம் இருவரும் ஒரு வீட்டுக்குப் போகிறோம். அங்கே சில நிமிடங்கள் இருந்து விட்டு வெளியே வருகிறோம். வீட்டுக்குள் நாம் என்ன பார்த்தோம் என்று நாம் இருவரும் தனித் தனியே ஒரு பட்டியல் போட்டால், என் பட்டியலில் இல்லாத சில பொருட்கள் உன் பட்டியலில் இருக்கும். அதாவது நான் கவனிக்காத சில விஷயங்களை நீ கவனித்திருக்கலாம். இப்போது கூட யதார்த்தமாக நீ சொன்ன ஒரு விஷயம்தான் எனக்கு க்ளூவாகத் தோன்றியது."

"அது என்ன வென்று சொல்ல மாட்டீர்கள். சரி விடுங்கள். ஆனால் நளினாவின் வீட்டில் போலீஸ் ஒரு தூசியைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்களே? "

"ஆமாம். ஆனால் அந்த அறை, மேஜை, கட்டில், மற்ற விஷயங்கள் எல்லாம் அப்படியேதானே இருக்கும்? அவற்றைப் பார்த்தால் எதாவது தோன்றலாம். ஏன், நளினாவின் ஆவி கூட அங்கே இருக்கலாம்!"

"அப்படி இருந்தால் கவலையே இல்லை. என்ன நடந்தது என்று அந்த ஆவியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு விடலாமே!"

"என்ன பிரயோசனம்? ஆவியால் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்ல முடியாதே!"

ளினாவின் அறையில் விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனந்த் ராம்ஜியிடம் சம்பவம் நடந்த தினத்தன்று இருந்த அமைப்பை விளக்கினான்.

"உனக்கு ஏதாவது வித்தியாசமாகத் தென்படுகிறதா பார்!"

"அப்படி எதுவும் தெரியவில்லை. இதற்கு முன்னால் இந்த அறையை நான் பார்த்ததில்லையே! ஜன்னல் கண்ணாடிதான்  புதிதாக இருக்கிறது" என்றான் ராம்ஜி.

ஆனந்த் விரலைச் சொடுக்கினான். 'இதை ஏன் யாரும் கவனிக்கவில்லை?' இது எந்த விதத்தில் புதிரை விடுவிக்கும் என்று அவனுக்குப் புலப்படாவிட்டாலும், சிக்கலின் பிரதான முடிச்சு தன் விரல்களுக்குள் சிக்கி விட்டதாக அவனுடைய உள்ளுணர்வு கூறியது.

ரண்டு நாட்கள் கழித்து ஆனந்தின்  வீட்டில் அந்தச் சிறிய மாநாடு நடந்தது. ஆனந்த், ராம்கி, நளினாவின் அண்ணன் ரமேஷ் பாபு, நளினாவின் கணவர் ரத்னசபாபதி ஆகிய நால்வர் அங்கே குழுமியிருந்தனர்.

"மிஸ்டர் ரமேஷ் பாபு! உங்கள் தங்கையின்  மரணம் கொலையா, தற்கொலையா என்று நான் சொல்வதற்கு முன்,  நான் எப்படி இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொல்லி விடுகிறேன். இருட்டில் துழாவிக் கொண்டிருந்த எனக்கு ஒரு சிறிய வெளிச்சத்தைக் காட்டியது இந்த ராம்கிதான்" என்று ஆரம்பித்தான்  ஆனந்த்.

"சார்!" என்றான் ராம்கி எதுவும் புரியாமல்.

"குறுக்கே பேசுவது எனக்குப் பிடிக்காது" என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆனந்த் தொடர்ந்தான். "நளினாவின் அறைக்கு நானும் ராம்கியும் சென்று பார்த்தபோது, ராம்கிதான் அந்த அறையின் ஜன்னல் கண்ணாடி புதிதாகப் போடப்பட்டிருப்பதை கவனித்துச் சொன்னான். அதைக்கேட்டதும் வழக்கின் முடிச்சு அவிழ்ந்து விட்டதாக என் உள்ளுணர்வு கூறியது. மிஸ்டர் ரத்னசபாபதியை நான் இது பற்றிக் கேட்டபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார்."

"அது உண்மைதான், மிஸ்டர் ஆனந்த்" என்று இடைமறித்தார் ரத்னசபாபதி. "இது போன்ற விஷயங்களையெல்லாம் நளினாதான் கவனித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் என்ன ரிப்பேர் வேலைகள் நடக்கின்றன என்று கூட நான் கவனிப்பதில்லை."

"உங்கள் கூற்றை நான் சந்தேகிக்கவில்லையே!" என்றான் ஆனந்த். "நீங்கள் அப்படிச் சொன்னதும், நான் நளினாவின் டைரி, ஃபைல்கள், கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பார்த்தேன். உடைந்து போன ஜன்னல் கண்ணாடியை மாற்றுவதற்காக 'டோர்ஸ்டெப் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தை அவர் அணுகியிருக்கிறார் என்று தெரிந்தது. அந்த நிறுவனத்தில் விசாரித்ததில், நளினா இறந்த தேதியில்தான் கண்ணாடி மாற்றப்பட்டிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணாடியை மாற்றச் சொல்லி பரமசிவம் என்ற கான்ராட்க்ட்  தொழிலாளியிடம் சொல்லியிருக்கிறார்கள். அவன் காலை ஏழு மணிக்கே கண்ணாடியை மாற்றி விடுவதாகச் சொல்லி, முதல் நாள் மாலையே நிறுவனத்துக்கு வந்து கண்ணாடியை வாங்கிச் சென்றிருக்கிறான்.

" 'நளினாவின் மரணம் ஒரு கொலை என்றால் அதை நிரூபிக்கக் கண்ணால் பார்த்த சாட்சி யாராவது இருந்தால்தான்  முடியும்' என்று நான் ராம்கியிடம் விளையாட்டாகச் சொன்னேன். உண்மையாகவே ஒரு சாட்சி கிடைத்து விட்ட உற்சாகத்தில் பரமசிவத்தின் விலாசம் கேட்டபோது, இன்னொரு அதிர்ச்சித் தகவல்! இரண்டு நாட்கள் முன்பு, நளினாவின் ரசிகர் ஒருவர் ஒரு புதிய கட்டிடத்தின் மொட்டை  மாடியிலிருந்து  கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வெளியானதே, அந்த 'ரசிகர்'தான் பரமசிவம்!

"பரமசிவத்தின் 'தற்கொலை'க்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டிய வேலையும் என் தலையில் விழுந்து விட்டது. நளினாவின் கொலையை பரமசிவம் நேரில் பார்த்திருக்கக் கூடும் என்பதால், அவன் கூடக்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. நளினாவின் மரணத்தினால் மனமுடைந்துதான் பரமசிவம் தற்கொலை செய்து கொண்டிருப்பான் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. முதலில் பரமசிவம் நளினாவின் ரசிகன் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை."

"ஏன் இல்லை? அவன் பர்ஸில் நளினாவின் புகைப்படம் இருந்ததே!" என்றார் ரத்னசபாபதி.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ம்ம்.. அதுதான் பத்திரிகைகளில் போட்டிருந்தார்களே!"

"ஓ! சரி. ஆனால் நான் விசாரித்துப் பார்த்ததில், பரமசிவத்தைத் தெரிந்தவர்கள் யாருமே அவனை நளினாவின் ரசிகன் என்று சொல்லவில்லை. அதுவும் நளினாவின் மரணத்தினால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போகக்கூடியவன் என்று யாரும் நம்பவில்லை. அதனால் பரமசிவத்தின் மரணம் ஒரு கொலையாகத்தான் இருக்க வேண்டும், அவன் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அவன் நளினாவின் கொலையை நேரில் பார்த்ததுதான் என்ற முடிவுக்கு நான் வந்தேன்."

"அப்படியானால் நளினாவைக் கொலை செய்தவன்தான் பரமசிவத்தையும் கொலை செய்திருக்க வேண்டும்!" என்றான் ராம்கி.

அவன் கூறியதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டி விட்டு, ஆனந்த் தொடர்ந்தான்: "இப்படிப் பார்ப்போம். ஷூட்டிங்கிலிருந்து வந்த நளினா இரவு முழுவதும் கண் விழித்த களைப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த கொலையாளி ஃபிளாஸ்க்கில் தூக்க மாத்திரைகளைக் கரைக்கிறான். அப்போது வீட்டுக்கு வெளியில் இருந்து கொண்டு அறையின் ஜன்னலுக்குக் கண்ணாடி மாற்றிக்கொண்டிருந்த பரமசிவத்தைப் பார்க்கிறான். கொலையாளி தூக்க மாத்திரையைக் காப்பியில் கலந்ததைப் பரமசிவம் பார்த்தானா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவன் பார்த்திருந்தாலும், பார்க்காமல் இருந்திருந்தாலும், பார்த்திருப்பானோ என்ற சந்தேகம் கொலையாளிக்கு வந்திருக்கும். அதனால்தான், இரண்டு நாட்கள் கழித்து அவனையும் ஒரு புதிய கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்திருக்கிறான். பரமசிவம் நளினாவின் ரசிகன், நளினாவின் மரணத்தினால் மனமுடைந்துதான் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, அவன் பையில் நளினாவின் புகைப்படம், பத்திரிகையில் வந்த  நளினாவின் மரணச் செய்தி அடங்கிய பத்திரிகையிலிருந்து கிழிக்கப்பட்ட பகுதி ஆகியவற்றைச் செருகியிருக்கிறான். இந்த 'ஆதாரங்களை' வைத்துப் பத்திரிகைகளும் 'நளினாவின் ரசிகர் தற்கொலை' என்ற சுவாரஸ்யமான கதையைச் செய்தியாக வெளியிட்டு விட்டன!"

"பரமசிவம் அந்தக் கட்டிடத்தில் என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று கேட்டான் ரமேஷ் பாபு.

"எதோ ஒரு வீட்டில், ஜன்னல்களுக்கு கண்ணாடி பொருத்திக் கொண்டிருந்தான் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அது உண்மையில்லை. முதலில் அது ஒரு புதிய கட்டிடம். கண்ணாடி பொருத்தும் வேலையில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருப்பார்கள். மின்  இணைப்பு பெறப்படாத நிலையில், இரவில் அங்கே வேலைகள் நடப்பதில்லை. கொலையாளி சொல்லித்தான் அவன் அங்கே வந்திருப்பான்."

"கொலையாளி சொன்னதற்காகப் பரமசிவம் ஏன் அங்கே வர வேண்டும்?" என்றார் ரத்னசபாபதி.

நளினாவின் கொலை நடந்த சமயத்தில், கொலையாளி பரமசிவத்திடம் பேசி, அங்கே நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பணம் தருவதாகச் சொல்லி இருக்கலாம். கொலையாளி பரமசிவத்தை இந்தக் கட்டிடத்துக்குக் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் வரச்  சொல்லியிருக்கலாம். மொட்டைமாடிக்குப் போய்ப் பேசினால்தான் ரகசியமாக இருக்கும்  என்று கொலையாளி சொன்னதை நம்பிப் பரமசிவம் அங்கு போயிருக்கிறான்."

"கொலையாளிக்கும் அந்தக் கட்டிடத்துக்கும் எதாவது தொடர்பு இருக்குமா சார்?" என்றான் ராம்கி.

"அப்படி இருக்க வேண்டும் அன்று அவசியமில்லை. பாதி முடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் சென்னையில் இருக்கின்றன. நாம் தெருவில் நடந்தோ வாகனத்திலோ போகும்போது இவற்றைப் பார்த்திருக்கலாம். சில கட்டிடங்களில் ஒப்புக்கு ஒரு வாட்ச்மேனைப் போட்டிருப்பார்கள். சிலவற்றில் வாட்ச்மேன் யாரும் இருக்க மாட்டார்கள். கட்டிடத்துக்குள், தண்ணீர்க்  குழாய், மின்விளக்கு போன்றவை நிறுவப்பட்டிருந்தாலொழிய, அவற்றில் திருடிக்கொண்டு போவதற்கு எதுவும் இல்லை என்பதால் சில கான்ட்ராக்டர்கள்  அலட்சியமாக இருப்பார்கள். அது போன்ற ஒரு கட்டிடம்தான் இது.  கொலையாளி பரமசிவத்தைப் பிடித்துக் கீழே தள்ளிக் கொலை செய்திருக்கிறான். பரமசிவம் நளினாவின் ரசிகன் என்று காட்ட அவன் பையில் நளினாவின் மரணச் செய்தி அடங்கிய பேப்பர் கட்டிங்கையும், நளினாவின் ஃபோட்டோவையும் திணித்திருக்கிறான். கொலையாளி தன்  பாக்கெட்டில் பண நோட்டுக்களைத் திணிக்கிறான் என்று கூடப்  பரமசிவம் நினைத்திருக்கலாம்!"

"இதெல்லாம் என்ன சார் கதை? நளினாதான், தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்திருக்கிறாளே!" என்றார் ரத்னசபாபதி.

"கதையே அங்கேதானே  இருக்கிறது? அந்தக் கடிதம் பற்றி ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கையெழுத்தின் முதல் பகுதியில் மட்டும் காப்பி சிந்தி இங்க் கலைந்திருந்ததும், அந்தக் கடிதம் எழுதப்பட்ட இங்க் அங்கிருந்த மூன்று பேனாக்களில் ஒன்றின் இங்க்கோடு கூட ஒத்துப்போகாமல் இருந்ததும், எனக்கு சந்தேகத்தை உண்டாக்கின. இதை நான் குறிப்பிட்டபோது, கடிதத்தை  வெளியிலிருந்து எழுதிக்கொண்டு வந்திருக்கலாமே என்று ராம்கி கேட்டான். வெளியிலிருந்தென்றால், ஒருவேளை ஸ்டுடியுவிலிருந்தா (அங்கிருந்துதானே  நளினா  வீட்டுக்கு வந்தார்!)  என்று தோன்றியதும், உடனே ஒரு பொறி தட்டியது.

"நளினா  இறப்பதற்கு முந்திய இரண்டு மூன்று தினங்களில் ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் பற்றி விசாரித்தேன். அவர் இறந்ததற்கு இரண்டு நாட்கள் முன்பு எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் கதாநாயகி இதே போன்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். கதாநாயகியாக நடித்தது நளினாதான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கடிதத்தின் வாசகமும், நளினா  எழுதி வைத்திருந்த கடிதத்தின் வாசகமும் ஒன்றுதான். வாசகம் மட்டும் அல்ல, கடிதமும் ஒன்றுதான்! படப்பிடிப்பின்போது கடிதத்தை நளினா தானே தன்  கைப்பட எழுதியிருக்கிறார்.  கொலையாளி அந்தக் கடிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அதை நளினாவின் தற்கொலைக் கடிதமாக மாற்றி விட்டான்!"

"ஆனால் திரைப்படத்தில் கதாநாயகியின் பெயர் வேறாக இருந்திருக்குமே?" என்றான் ராம்கி.

"ஆமாம். அதிலும் கொலையாளிக்கு அதிர்ஷ்டம்தான். கதாநாயகியின் பெயர் புவனா.அதனால்தான் அதை நளினா  என்று தோன்றும்படி செய்ய முதல் இரண்டு எழுத்துக்களில் மட்டும் காப்பி சிந்தும்படி செய்திருக்கிறான் அவன். தன் விரலைப் பயன்படுத்தித்தான் கொலையாளி இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் விரல் ரேகை அந்த இடத்தில் பதிந்திருக்காது.என்னுடைய யூகம் என்னவென்றால், கொலையாளி நளினாவை எப்படிக் கொல்வது என்ற யோசனையில் இருந்திருக்கிறான். இந்தக் கடிதத்தைப்  பார்த்ததும், அவரைக் கொலை செய்து விட்டு, அதைத் தற்கொலை என்று ஜோடிக்க ஒரு நல்ல வழி கிடைத்து விட்டது அவனுக்கு!"

"அப்படியானால், நீங்கள் குறிப்பிட்ட காட்சி படம் பிடிக்கப்பட்டபோது  கொலையாளி  அங்கே இருந்திருக்கிறான்." என்றான் ரமேஷ்பாபு, ரத்னசபாபதியைப் பார்த்தபடி. ரத்னசபாபதி இது எதையும் கவனிக்காத்தவர் போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.

"நிச்சயமாக! பின்னே, நளினாவா அந்தக் கடிதத்தை வீட்டுக்கு எடுத்து வந்திருப்பார்?"

"சார், இந்தக் கடிதத்தைப்  பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தபோது, அதில் இன்னொரு விஷயம் இருப்பதாகவும், அதை அப்புறம் சொல்வதாகவும் சொன்னீர்கள்!"

"ஆமாம். கடிதத்தில் கையெழுத்து தமிழில் இருக்கிறது. நான் நளினாவின் ஃபைல்களைப் பார்த்த வரையில், அவர் பொதுவாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்துப் போட்டு வந்திருக்கிறார். ரசிகர்களுக்கு அனுப்பும் புகைப்படங்களில் வேண்டுமானால் தமிழில் கையெழுத்துப் போட்டிருக்கலாம். எனவே, அவர் தன்னுடைய 'தற்கொலைக் கடிதத்தில்' தமிழில் கையெழுத்துப் போட்டிருப்பது, எனக்கு சற்று விசித்திரமாகத் தோன்றியது."

"சரி. நளினாவுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இல்லாவிட்டால், அவர் ஏன் சமையற்காரியை வீட்டுக்குப் போகச் சொன்னார்?" இதைக் கேட்டதும் ராம்கிதான்.

"அப்படி யார் சொன்னது?"

"சமையற்கரிதானே அப்படிச் சொல்லியிருப்பதாக நீங்கள் சொன்னீர்கள்?'

"ஆமாம். ஆனால் சமையற்காரி சொன்னது உண்மையா பொய்யா என்று எப்படித் தெரியும்? அதைப் பொய் என்று சொல்லக்கூடிய ஒரே நபர் நளினாதானே?"

"அப்படியானால் சமையற்காரி பொய் சொல்லியிருக்கிறாளா? அவளும் இந்தக் கொலைக்கு உடந்தையா?" என்றான் ரமேஷ் பாபு கோபத்துடன்.

"உடந்தையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சமையற்காரி வழக்கம் போல் 8 மணிக்கு வீட்டுக்குப்  போயிருக்கலாம். அதற்குப் பிறகு கொலை நடந்திருக்கலாம். கொலையாளி பணம் கொடுத்தோ, மிரட்டியோ சமையற்காரியை இப்படிச் சொல்லச் சொல்லியிருக்கலாம். நளினாவின் மரணம் தற்கொலை என்பதற்கு ஒரு வலுவான சாட்சியாக அமைந்து விட்டதே சமையல்காரியின் வாக்குமூலம்!"

"வெரி  குட்  மிஸ்டர் ஆனந்த்!" என்றான் ரமேஷ்பாபு "ஆனால் கொலையாளி யார் என்று நீங்கள் இதுவரை சொல்லவேயில்லையே?"

"நான் ஏன் சொல்ல வேண்டும்? அதுதான் மிஸ்டர் ரத்னசபாபதியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே!" என்றான் ஆனந்த்.

"நான் எங்கே ஒப்புக்கொண்டேன்? நான் எ ந்தக் குற்றமும் செய்யவில்லை, எதையும் செய்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை. உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போலிருக்கிறது" என்றார் ரத்னசபாபதி.

"அப்படியா? சற்றுமுன், பரமசிவம் நளினாவின் ரசிகன் இல்லை என்று நான் சொன்னதற்கு, அவன் பர்ஸில்  நளினாவின் புகைப்படம் இருந்ததே என்று சொன்னீர்கள். அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று நான் கேட்டதற்கு, பத்திரிகையில் போட்டிருந்ததாகச் சொன்னீர்கள். எ ந்தப் பத்திரிகையிலும் புகைப்படத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நளினாவின் கொலைச்செய்தி வந்த பத்திரிகையின் க்ளிப்பிங் இருந்தது என்று மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார்கள். புகைப்படத்தைப் பற்றிப் பத்திரிகைகள் குறிப்பிடாததற்கு காரணம், போலீசார் இது பற்றிப் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. போலீசார் தெரிவிக்காததற்குக் காரணம் அந்தப் புகைப்படம் பற்றி அவர்களுக்கு இருந்த சந்தேகம்தான்!"

"என்ன சந்தேகம் சார் அது?" என்றான் ரமேஷ் பாபு.

"சொல்கிறேன். மிஸ்டர் ரத்னசபாபதி. நளினா  ரசிகர்களுக்குத் தான் கையெழுத்துப் போட்ட புகைப்படத்தைத்தானே அனுப்புவார்?"

"ஆமாம்."

"ஆனால் பரமசிவத்தின் பர்ஸில் இருந்த புகைப்படத்தில் அவர் கையெழுத்து இல்லை."

ரத்னசபாபதி பெரிதாகச் சிரித்தார். "இது ஒரு விஷயமா சார்? நளினா வரிசையாகப் பல புகைப்படங்களில் கையெழுத்துப் போடுவாள். அப்படிப் போடும்போது, ஒரு புகைப்படத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டிருக்கலாம். இது மிகவும் இயல்பான விஷயம். இதையெல்லாம் ஒரு பாயின்ட் என்று எடுத்துப்  பேசுகிறீர்களே!"

"நான் சொன்ன பாயின்ட் மிகவும் பலவீனமானது என்று தெரிந்ததும் உங்களுக்கு எவ்வளவு நிம்மதி! இத்தனை நேரம் டென்ஸாக இருந்த நீங்கள் ஒரு கணத்தில் ரிலாக்ஸ் ஆகி விட்டீர்களே! ஆனால், இது என்னுடைய சந்தேகம் இல்லை. போலீசின் சந்தேகம். ஏனெனில், சமீபத்தில், ரசிகர்களுக்கு அனுப்புவதற்காக, தன் புதிய ஸ்டில் ஒன்றை 1000 பிரதிகள் எடுத்து வைத்திருந்தார் நளினா. இது ஒரு புதிய தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஆயிரத்திலிருந்து வந்ததுதான் பரமசிவம் பர்ஸிலிருந்த புகைப்படம்."

"அதனால் என்ன?" என்றார் ரத்னசபாபதி.

"என்னவா? இந்தப் புகைப்படத்தின் பிரதிகளை நளினா அவர் கொலையுண்ட அன்று காலை படப்பிடிப்பிலிருந்து வந்தபோதுதான் எடுத்து வந்திருக்கிறார். மேஜை மீது அட்டைப் பெட்டியில் அந்தப் புகைப்படங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றைக்கூட நளினா யாருக்கும் அனுப்பியிருக்க முடியாது. போலீசார்  கொலை நடந்த அன்றே இந்தப் புகைப்படங்களை கவனித்திருக்கிறார்கள். இரண்டு நாள் கழித்து இறந்த பரமசிவத்தின் பர்ஸில் அந்தப் படங்களில் ஒன்று இருந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது. அதனால் அந்தப் புகைப்படம் பற்றிப் பத்திரிகைகளுக்குச் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் மிஸ்டர்  ரத்னசபாபதி, பத்திரிகையில் வெளிவராத இந்தச் செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?"

ரத்னசபாபதி மௌனமாக இருந்தார்.

ஆனந்த் தொடர்ந்தார். "உங்களுக்கு இது எப்படித் தெரியும் என்றால், பரமசிவத்தின் பர்ஸில் இந்தப் புகைப்படத்தை வைத்தவரே நீங்கள்தான்! பரமசிவத்தைப் பார்க்கப் போகும்போது அவனை நளினாவின் ரசிகனாகக் காட்டி அவன்தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதையை ஜோடிக்கலாமே என்ற யோசனை தோன்றியிருக்கிறது. அவசரத்தில் மேஜை மீதிருந்த அட்டைப்பெட்டியிலிருந்து ஒரு படத்தை உருவிக்கொண்டு கிளம்பி விட்டீர்கள். அது புதிய புகைப்படம், அதில் நளினா கையெழுத்திடவில்லை என்ற விவரங்களை நீங்கள் கவனிக்கவில்லை."

"இவையெல்லாம் உங்கள் ஊகம்தான். இதற்கெல்லாம் எந்த வித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது. உங்களுடைய அபத்தமான கற்பனைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை" என்றார் ரத்னசபாபதி கோபமாக.

"ஏன் ஆதாரம் இல்லை? பரமசிவத்தைச் சந்திக்க நீங்கள் போனபோது உங்கள் காரைத் தெருக்கோடியிலேயே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறீர்கள். உங்கள் காரை அங்கே பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்."

"இருக்கவே முடியாது. நான் அங்கே காரில் போகவில்லையே! நடந்துதானே..." ரத்னசபாபதி தனது தவறை  உணர்ந்து நிறுத்திக்கொண்டார்.

ஆனந்த் எழுந்தான். "ரமேஷ் பாபு, நான் என் ரிப்போர்ட்டை நாளை  கொடுத்து விடுகிறேன். விரும்பினால், நீங்கள் அதைப் போலீசிடம் கொடுக்கலாம். மேலே என்ன செய்வது என்று அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்" என்றான்.

"ஒரு நிமிஷம் சார்!" என்றான் ரமேஷ்பாபு "என் தங்கையை இந்த வெறிநாய் ஏன் கடித்துக் குதறியது என்று எனக்குத் தெரிய வேண்டும்."

"ரமேஷ். உன்னுடைய கோபம் எனக்குப் புரிகிறது. அதனால் உன்னுடைய தரக்குறைவான வார்த்தைகளை நான் பொறுத்துக் கொள்கிறேன்" என்றார் ரத்னசபாபதி. அவர் குரலில் ஒரு அமைதி இருந்தது. "ஆல்ரைட். நான் சொல்ல வேண்டாம் என்று நினைத்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். ரமேஷ் ,நீ நினைப்பது போல், உன்தங்கை ஒன்றும் உத்தமி இல்லை. எல்லோரும் நினைத்துக் கொ ண்டிருப்பது போல் அவள் ஒன்றும் நான் விரித்த வலையில் விழுந்து என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நான்தான் அவள் விரித்த வலையில் விழுந்து விட்டேன்."

"உங்கள் கொலையை நியாயப்படுத்த என் தங்கை மீது அவதூறு கூறப்போகிறீர்களா?" என்றான் ரமேஷ்.

ரத்னசபாபதி அவன் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாதது போல் எல்லோரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார். "தன்னைப் பல நடிகர்களும், டைரக்டர்களும் தொந்தரவு செய்வதாகவும், தனக்குத் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லையென்றும், தான் கடைசி வரை நடித்துக்கொண்டே இருக்க விரும்புவதாகவும் சொல்லி, நான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் அவளால் நிம்மதியாக இருக்க முடியும் என்று நளினா என்னிடம் மன்றாடினாள். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இருப்பதையும், நான் அவர்களிடம் இணக்கமாகவும், பாசமாகவும் இருப்பதாகவும் சொல்லி மறுத்து விட்டேன். ஆனால் அவள் விடாமல் என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தாள் . எங்கள் திருமணம் வெளி உலகை ஏமாற்றத்தான் என்றும், திருமணத்துக்குப் பிறகு, நான் என் குடும்பத்துடனேயே இருக்கலாம் என்றும் சொன்னாள். அப்போதும் நான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருநாள், படப்பிடிப்பின்போது, ஒரு மூத்த நடிகர் அவளிடம் பலர் முன்னிலையில் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், தான் தப்பி ஒடி வந்து விட்டதாகவும், அவன் காரில் துரத்தி வருவதாகவும் சொல்லி, இரவு 2 மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினாள் . என் மனைவி கூட அவள் மீது இரக்கப்பட்டாள். இவை எல்லாமே அவளுடைய திட்டமிட்ட நாடகம் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை!

"தொடர்ந்து இது போல் நளினா எனக்கு நெருக்கடி கொடுத்து வந்ததால், ஒரு கட்டத்தில் நான் அவள் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டேன். என் குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன்தான் நான் இதைச் செய்தேன் என்று அறியாத சில பத்திரிகைகள் நான் என் குடும்பத்துக்கு துரோகம் செய்து விட்டதாக எழுதின. நான் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

"திருமணத்துக்குப் பிறகுதான் நளினாவின் உண்மையான தோற்றம் எனக்குத் தெரிய வந்தது. அவளுக்குத் திரையுலகில் பலருடனும் தொடர்பு இருந்தது. அவர்களில் எவரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லை. என்னை ஒரு கவசமாக வைத்துக்கொண்டு, நளினா காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தாள் என்பதுதான் உண்மை. நான் இதைப்பற்றி அவளிடம் நேரடியாகக் கேட்டபோது, 'உங்களைப்  போன்ற அப்பாவிகள் என் போன்ற பட்டாம்பூச்சிகளுக்குக் காவல் இருப்பதற்காகத்தான் பிறந்தவர்கள்' என்று வாய் கூசாமல் சொன்னாள்.

"பல மாதங்கள்  அவளுடைய ஆட்டங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொண்டே இருந்தேன். அவளைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரம் வரும். ஆனால் சீரியஸாக அவளைக் கொலை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. படப்பிடிப்பில் அந்தக் கடிதத்தைப் பார்த்ததும்தான் அந்த எண்ணம் உதித்தது. நளினா தூக்க மாத்திரையைப் பயன்படுத்துபவள் என்பதால், அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டதாகக் காட்டி விட்டால் நான் நிம்மதியாக இருக்கலாமே என்று நினைத்தேன். மிஸ்டர் ஆனந்த் சொன்னபடி வேலைக்காரியை நளினா கோபித்துக்கொண்டு வீட்டுக்கு அனுப்பியதாகச் சொல்லச் சொன்னது நான்தான். நான் செய்த கொலையை நியாயப்படுத்துவதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. என் மனக்குமுறலை எல்லாம் என் நண்பர் டைரக்டர் ராஜுவிடம் நான் சொல்லிப் புலம்பியிருக்கிறேன். நீங்கள் அவரிடம் விசாரித்துக்கொள்ளலாம். அஃப் கோர்ஸ், நளினாவைக் கொலை செய்ததைப்  பற்றி அவரிடம் சொல்லவில்லை. அவளுடைய நடத்தை, அவள்   என்னைப் பயன்படுத்திக்  கொண்டது, என்னுடைய கோபம், ஆத்திரம், இயலாமை இவற்றையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்."

"ஓகே. நான் சொன்னபடி என் அறிக்கையை நாளை கொடுத்து விடுகிறேன்" என்றார் ஆனந்த்.

'மிஸ்டர் ஆனந்த்! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நளினா பற்றி ரத்னசபாபதி சொன்ன விஷயங்கள் என் காதுக்கும் வந்தவைதான். அவற்றை அப்போது நான் நம்பவில்லை. ரத்னசபாபதி சொன்னதை நான் நம்புகிறேன். அவருக்கு நளினாவைக் கொல்ல வேறு நோக்கம் இருக்க முடியாது. அவருக்கும் நளினவுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லக்கூடியதில்லை. அதனால் நளினாவின் சொத்துக்களுக்காகவோ, பணத்துக்காகவோ அவர் இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது. இவரைக் கைது செய்து இவர் மீது வழக்குத் தொடர்ந்தால், நளினாவைப் பற்றிய பல கசப்பான உண்மைகள் வெளியே வரும். என் தங்கைக்கு மக்களிடையே ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது. அவளை ஒரு கண்ணியமான நடிகை என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவள் பெயர் களங்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவளது திருமண வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பத்திரிகைகளிலும் கோர்ட்டிலும் சீரழிக்கப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. அதனால்..."

" 'நளினாவின் மரணம் கொலை என்பதற்கான எந்த வலுவான ஆதாரமும் எனக்குக் கிடைக்கவில்லை' என்று அறிக்கை கொடுத்து விடுகிறேன். உண்மையும் அதுதானே! உண்மையில் போலீசுக்கு நான் எந்த ரிப்போர்ட்டும் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள்தான் என்னை இந்த வழக்கை விசாரிக்கச் சொன்னீர்கள். உங்களுக்குத்தான் நான் அறிக்கை கொடுக்க வேண்டும். ஆனால் நான் இந்த வழக்கில் ஈடுபட்டிப்பது போலீசுக்குத் தெரியும். அவர்கள் உங்களிடம் என் அறிக்கையைக் கேட்டால் நீங்கள் அதைக் கொடுத்து விடலாம்."

ரத்னசபாபதி நம்ப முடியாமல் ஆனந்த்தைப் பார்த்த்தார். "நீங்கள் உண்மையைத்தான் சொல்கிறீர்களா? என்னைப்பற்றி எதுவும் குறிப்பிடப் போவதில்லையா?"

"இல்லை. ஆனால் பரமசிவம் என்ற அப்பாவி பலியாகி இருக்கிறான். அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"

"நளினாவின் கணவன் என்ற முறையில் பரமசிவன் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லி அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கிறேன். அவன் குடும்பத்துக்கு ஆகும் செலவு, அவன் குழந்தையின் படிப்பு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சில டிரஸ்டுகள் வைத்திருக்கிறேன். அவற்றின் மூலம் பரமசிவத்தின் குடும்பத்துக்கு என்னால் உதவி செய்ய முடியும்." என்றார் ரத்னசபாபதி.

ராம்கிக்கு மட்டும் ஆனந்தின் முடிவு ஏமாற்றத்தை அளித்தது!

(*சீமா நடித்து, ஐ.வி.சசியின் இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம்.)

(1982ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)


Monday, August 15, 2016

19. ஓரிரு சம்பவங்கள்

 பாலகிருஷ்ணன் காலையில் கண் விழித்ததும் வழக்கம் போல் நேர்ப்பார்வையில் விழும்படி மாட்டப்பட்டிருந்த அம்பாளின் படத்தைப் பார்த்தார். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். சொல்லி வைத்தாற்போல் மணி 6. கடந்த பல வருடங்களாக இந்த 6 மணி சந்திப்பு தவறாமல் நடந்து வருகிறது. 

கடிகாரத்துக்குக் கீழே மாட்டப்பட்டிருந்த காலண்டரின் மீது பார்வை தன்னிச்சையாகப் படிந்தது. தேதி 24. இருபத்து நாலு...ஏதோ நெருடுகிற மாதிரி ஒரு உணர்வு. அது என்னவென்று புரிந்து கொள்ளும் முன்பே அவர் படுக்கையிலிருந்து எழுந்து விட்டார். நேராக வாசற்கதவை நோக்கி நடந்... நின்றார். கதவுக்கடியில் பேப்பர் இல்லை.

ஐந்தரை மணிக்கெல்லாம் பேப்பர் வந்து விடுமே! இன்று என்ன? சற்றுமுன் இலேசாகத் தலைகாட்டிய உள்ளுணர்வு இப்போது மனக்கதவை இடித்துத் திறந்து கொண்டு வெளிப்பட்டது. மை காட்! இன்று 24ஆம் தேதி. இன்று பந்த்!

அவரை திடீரென்று ஒரு சோர்வு பற்றியது. இன்று அவரது நேர அட்டவணைக்கும் கதைவடைப்புதான். சாப்பாடு ஒரு பிரச்னை. முதலில் காப்பி போட்டுக் குடிக்கலாம். பிறகு யோசிக்கலா...ஓ! மை குட்னெஸ்! இன்று பால் கூட வரவில்லை. வராது. பால் வழங்கும் அரசு நிறுவனம் இன்று பால் வழங்கப் போவதில்லை என்று நேற்றே அறிவித்து விட்டது. சென்ற முறை நடந்த பந்த்தின்போது நடந்த வன்முறைகளில் அவர்கள் லாரிகள் சேதமாகி விட்டனவாம்.

அந்தப் பகுதியில் பால்காரர்கள் என்று யாரும் வருவதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வசதிகளைத் தருகின்றனவோ இல்லையோ, பழைய அமைப்புகளைத் தரை மட்டமாகி விடுகின்றன. 

அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போட்டு டிகாக் ஷன் தயாரித்துச் சர்க்கரை போட்டுக் குடித்தார். கசப்பாக இருந்தாலும் காப்பியின் மணம் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. 

பேப்பர் இல்லாததால் மீண்டும் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டார். மனதில் குருட்டு யோசனைகள் பல திசைகளிலும் ஓடின.

'வயதான காலத்தில் தனியே இருப்பது ஒரு கொடுமைதான். ஆனால் நான் தனியே இல்லை. என் மகளுடைய  குடும்பத்துடன் இருக்கிறேன். மகள்,  குடும்பத்துடன் அரசாங்கத் செலவில் உல்லாசப் பயணம் போய் விட்டாள். மாப்பிள்ளையின் விடுமுறைப் பயணச் சலுகையில் (எல்.டி.சி) மாமனாரையும் அழைத்துச் செல்ல விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. ஒரே மகளைப் பெற்று மாப்பிளையுடன் வாழும் மாமனார்களுக்குச்  சலுகை காட்டி இருக்கலாம் அரசாங்க விதிமுறைகள்! ஆனால் அப்படி இருந்தாலும் என்னால் போயிருக்க முடியுமா? டாக்டர் எனக்கு இருப்பதாகச் சொல்லும் வியாதிகளின் பட்டியல் அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை விட நீளமாக இருக்கிறதே!'

பேத்தியின் நினைவு வந்தது.

தீப்தி (என்ன ஒரு பெயர்! கேட்டால் மாடர்னாக இருக்க வேண்டும் என்பார்கள். நான் அழகாக மஹேஸ்வரி என்று வைக்கச் சொன்னேன் - அம்பாளின் பெயர்! கேட்கவில்லை.) இப்போது தீப்தி என்ன செய்து கொண்டிருப்பாள்? இப்போது அவர்கள் சிம்லாவில் இருப்பார்கள். குழந்தைக்குக் குளிர் தாங்குமோ என்னவோ! குழந்தைக்கு யார் கதை சொல்வார்கள்?

இன்று சாப்பாட்டுக்கு என்ன வழி? மகள்  ஊருக்குப் போனதிலிருந்து 'திருநெல்வேலி மெஸ்'ஸில்தான்  சாப்பிட்டு வருகிறார். (அது என்ன 'திருநெல்வேலி மெஸ்', 'திருநெல்வேலி அல்வா' என்கிற மாதிரி? இப்படியெல்லாம் ஏதாவது ஒரு ஊர்ப்பெயரை வைத்து ஏமாற்றுவது வழக்கமாகி விட்டது!) 

இன்று மெஸ் திறக்கிறானோ என்னவோ? திறக்காவிட்டால் கொலைப்பட்டினிதான். 'ஒரு சாதம் வடிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்' என்று சாவித்திரி எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் ஆண்பிள்ளைத் திமிரில் அதெல்லாம் அனாவசியம் என்று ஒதுக்கி விட்டார்.

ம்.  அவளும் போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது கூட கண்ணுக்குத் தெரியாமல் எங்காவது அந்தரத்தில் நின்று கொண்டு, "நான் எவ்வளவோ அடித்துக்கொண்டேன். கேட்டீர்களா?" என்று சொல்லிக் காட்டிக்கொண்டிருக்கிறாளோ என்னவோ!

பத்து மணிக்கு மெஸ்ஸுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

மாதங்கி பஸ்ஸிலிருந்து இறங்கியபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது.  பஸ்ஸை ஊருக்கு வெளியிலேயே எங்கேயோ நிறுத்தி விட்டார்கள். இன்று எதோ பந்த்தாம்! அதற்காக வெளியூரிலிருந்து வரும் பஸ்களை ஊருக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்த வேண்டுமா என்ன?

இதுபோல் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களை மூட்டைப்பூச்சிகள் நிறைந்த கட்டிலில் படுக்க வைத்து எழுந்து போக முடியாமல் இறுக்கமாகக் கட்டிப்போட வேண்டும் என்று நினைத்தாள். தனக்கு இப்படிப் புதுமையாக (கோணங்கித்தனமாக!) யோசனைகள்  தோன்றுவதை நினைத்தபோது உடனே சிரிப்பு வந்தது. மனச் சலிப்பைச் சற்றே குறைத்தது.

இங்கிருந்து அவள் அக்கா வீடு  இரண்டு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.நடந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை. பெட்டியை வேறு தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும். ஒரு ரிக் ஷாவுக்கோ, மாட்டு வண்டிக்கோ கூட வழி இல்லை.

மூட்டை முடிச்சுகளுடன் சகபயணிகள் தவித்துத் திணறியபடி நடக்கத்  தொடங்கியதைப் பார்த்ததும் அவள் ரத்தம் கொதித்தது. இதற்குக்  காரணமானவர்களைப் பிடித்துக்கட்டி.... (என்ன தண்டனை கொடுக்கலாம்?)

'பந்த்' என்று தெரிந்த பிறகு அவள் கிளம்பியிருக்கவே மாட்டாள். பொழுது விடிவதற்குள் வந்து சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியது தவறாகி விட்டது. வரும் வழியில் பஸ்ஸில் ஏதோ பழுது ஏற்பட்டதால் வெடித்ததால் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆகி, இப்படி வந்து மாட்டிக்கொள்ளும்படி ஆகி விட்டது.

ஒரு விதத்தில் பார்த்தால், இவ்வளவு தூரம் வந்து சேர்ந்ததே அதிர்ஷ்டம்தான். இடையில் எங்காவது மாட்டிக்கொண்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்?

அவள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு பந்த். வெளியே எங்கேயும் போக வேண்டாம். ஃபிரண்ட் வீடு என்ன வேண்டிக் கிடக்கு?"

ரமேஷ் சத்தம் போட்ட அப்பாவைப் பார்த்தான். 'எதற்கெடுத்தாலும் ஒரு சத்தம்! மெதுவாகவே ஆட்சேபிக்கத் தெரியாது இவருக்கு. வக்கீலாக இருந்திருந்தால், கோர்ட்டில் சத்தம் போட்டு நல்ல வக்கீல் என்று தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கலாம்!  தனியார் நிறுவன ஊழியராக இருந்து கொண்டு அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு வீட்டில் வந்து கத்தித் தீர்க்கிறார்!'

"இல்லை அப்பா, அடுத்த வரம் மாத்ஸ் டெஸ்ட் இருக்கு. அதுக்கு ரெண்டு பேருமா சேர்ந்து கணக்குப் போட்டுப் பாக்கப் போறோம்." 

'இப்படிக் கூசாமல் புளுகுவதைத் தவிர வேறு வழி இல்லை. விடுமுறை நாளும் அதுவுமாக  வீட்டில் இருந்தால், 'படி, படி' என்று பிடுங்கி எடுத்து விடுவாரே!'

"சரி, சரி. ஒழிஞ்சு போ. ஜாக்கிரதை!"

"பைக்கை எடுத்துக்கிட்டுப் போறேன்."

"பைக்கைத் தொட்டேன்னா காலை ஒடைச்சுடுவேன், ராஸ்கல்! புதுசா வாங்கின வண்டியைப் பாழ்  பண்ணலேன்னா ஒனக்கு மனசாகாதே!" 

"இல்லேப்பா, டவுன் பஸ் எல்லாம் ஓடலே."

"நடந்து போறது! கால் வணங்காதே! சரி, சரி, ஒழி!"

ஒழிந்தான்.

மெஸ் மூடித்தான் இருந்தது. அடைக்கப்பட்டிருந்த கதவுகள் தூரத்திலிருந்தே புலப்பட்டன. பாலகிருஷ்ணன் பலவந்தமாக இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த நம்பிக்கை நழுவிக் கீழே விழுந்தது.

இத்தனை தூரம் நடந்து வராமலாவது இருந்திருக்கலாம் என்று நொந்துகொண்டே அவர் திரும்பிப் போக யத்தனித்தபோது, மூடப்பட்ட மெஸ்ஸின் கதவுகளில் ஒன்று எதிர்பாராமல் கொஞ்சமாகத் திறந்து கொள்ள, மெஸ் முதலாளி நாராயணனின் முகம் மட்டும் வெளிப்பட்டது. 

எங்கே திறந்த கதவு மீண்டும் மூடிக்கொண்டு விடுமோ என்று பயந்தவராக, பாலகிருஷ்ணன் ஓட்டமும் நடையுமாக மெஸ்ஸை நோக்கி விரைந்தார். அவரைப் பார்த்து விட்ட நாராயணன் கையை அசைத்து அவரை வரவேற்றான். பாலகிருஷ்ணன் கதவுக்கு அருகே வந்ததும், அவர் கையைப் பிடித்து வேகமாக உள்ளே இழுத்தான். பாலகிருஷ்ணன் உள்ளே வந்ததும் கதவு மூடப்பட்டது.  

"என்ன இன்னைக்கு பந்த் இல்லையா?" என்றார் பாலகிருஷ்ணன் புதிய உற்சாகத்துடன். உள்ளிருந்து வந்த சுவையான சாப்பாட்டின் நறுமணமும், உள்ளே இருட்டில் இரண்டு மூன்று பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சியும் அவர் உற்சாகத்துக்குத்  தூபம் போட்டன.

"என்ன 'பந்த்தா' இருந்தா என்ன சார், உங்களையெல்லாம் கைவிட்டு விடுவேனா?" என்றான் நாராயணன். (ஒருநாள் வருமானத்தைத்தான் விட்டு விட முடியுமா என்ன?)

பாலகிருஷ்ணன் அம்பாளுக்கும், நாராயணனுக்கும் மனதுக்குள் நன்றி செலுத்தி விட்டுச் சாப்பிட உட்கார்ந்தார்.

மாதங்கி அந்தத் தெருமுனையில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள். இளைஞனா? - இல்லை! பையன். பதினைந்து அல்லது பதினாறு வயதுப் பையன். 

பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடப்பது அவளுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பாதி தூரம்தான் வந்திருக்கிறாள். இன்னும் பாதி  தூரம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் மலைப்பாக இருந்தது. பெட்டியைக் கீழே வைக்கச் சொல்லி மூளையிடமிருந்து உடனே உத்தரவு வராவிட்டால், உடம்பிலிருந்து கழன்று கொள்ளப் போவதாக அவளது இரண்டு கைகளும் மாற்றி மாற்றி மிரட்டிக் கொண்டிருந்தன. பெட்டியைக் கைக்குக் கை மாற்றிச் சமாளிக்கும் வேலை இனியும் நடக்காது போலிருக்கிறதே என்று அவள் மூளை கவலைப்படத்  தொடங்கியது.

'இந்தப் பையனிடம் லிஃப்ட் கேட்டால்  என்ன? என்னை விட ஐந்தாறு வயது இளையவனான இவன் பின்னால் பைக்கில் உட்கார்ந்து போவதில் ஒன்றும் தப்பில்லை.'

பைக் அருகில் வந்ததும் மாதங்கி அவனைக் கை காட்டி நிறுத்தினாள். அவன் சற்று வியப்புடன் பைக்கை நிறுத்தினான்.

"நான் தாண்டவராயன் தெருவுக்குப்  போகணும். என்னைக் கொஞ்சம் கொண்டு விட்டுடறியா?"  என்றாள் அவள் உரிமையுடன்.

"ஓ! உக்காருங்க!" என்றான் அவன் உற்சாகத்துடன்.

'உக்காருங்க அக்கா' என்று சொல்லியிருக்கலாம் என்று மாதங்கிக்குத் தோன்றியது. 

ற்ற நாட்களை விட இன்று சாப்பாடு நன்றாக இருப்பதாக பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது.

வழக்கம் போல் கப்பில் ரசம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தபோது வாசல் பக்கம் பெரிதாகக் கூச்சல் கேட்டது.

தொடர்ந்து படபடவென்று கதவு தட்டப்படும் சத்தம்.

ஆபத்தை உணர்ந்து உடல் விறைத்துக்கொள்கிற பூனை போல் நாராயணன் பரபரப்படைந்தான்.

"எல்லாரும் சட்டுனு கை கழுவிக்கங்க" என்று அவசரப்படுத்தி விட்டு, வாசல் கதவைத் திறக்கப் போனான்.

கப்பில் மீதி இருந்த ரசத்தைக் குடித்து விட்டு எழுந்திருப்பதா அல்லது உடனேயே எழுந்திருப்பதா என்று பாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, கதவை நாராயணன் இலேசாகத் திறக்க, வெளியே நின்று கதவைத்தட்டிக்கொண்டிருந்தவர்கள் பிடித்துத் தள்ளியதில் கதவு படாரென்று திறந்து கொண்டது. திமுதிமுவென்று நாலைந்து பேர் நாராயணனைத் தள்ளி விட்டு ஒடி வந்தனர். 

"ஏண்டா, ஊர் முழுக்க பந்த், நீ திருட்டுத்தனமா மெஸ்ஸா நடத்தறே?" என்று விசாரித்து விட்டு ஒருவன் தன் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் நாராயணன் தலையில் ஒன்று போட்டான். 

"டேய் சாப்பாட்டு ராமன்களா , வாங்கடா  வெளியே!" 

உள்ளே கூச்சலும் குழப்பமும் அதிகரித்து, மேசை நாற்காலிகள் சேதப்படுத்தபடத் தொடங்கியதும், பாலகிருஷ்ணன் கை கழுவும் எண்ணத்தைக் கை விட்டு, வாசலை நோக்கி ஓடினார்.

"அதோ முதலாளி ஓடறான் பாரு, பிடிங்கடா அவனை!" என்று யாரோ கூவ, "நான் முதலாளி இல்லை" என்று எழும்பாத குரலில் அவர் கூவ முயன்றபோதே பாலகிருஷ்ணனின் ரத்தக் கொதிப்பு ஏறியது.

"பிடிடா, பிடிடா" என்று யாரோ கூவ, ஒருவன் இலக்கின்றித் தன்  கையிலிருந்த கட்டையைச் சுழற்ற, அது பாலகிருஷ்ணன் கழுத்தைத் தாக்கியது. வாசற்படியின் மீது நின்றுக்கொண்டிருந்தபோது அவர் மீது விழுந்த அந்த அடி அவரை நிலை குலையச் செய்தது. கொஞ்சம் தடுமாறி, கொஞ்சம் இடறி, கொஞ்சம் சமாளித்து, கொஞ்சம் தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்தார். மெஸ்ஸுக்கு வெளியில் இருந்த பாதையின் சரிவில் உருண்டு சாலைக்குத் தள்ளப்பட்டார். 

சாலையில் போக்குவரத்து இல்லாத தைரியத்திலும், பின்னால் ஒரு இளம்பெண் உட்கார்ந்திருக்கும் உற்சாகத்திழும் கொஞ்சம் வேகமாகவே பைக்கை ஓட்டி வந்த ரமேஷ், அந்தக் குறுகிய தெருவில் திரும்பியபோது அவனுக்குச் சில அடிகள் முன்பு திடீரென்று ஒரு வயதானவர் ஒரு கட்டிடத்தின் வாசலிலிருந்து உருண்டு சாலையில் விழுவதைக் கவனித்ததும், சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தவன், பைக்கை ஒடித்துத் திரும்பிச் சாலையின் மையப்பகுதிக்குச் செல்ல முயன்றான்.

வேகத்தைக் குறைக்காமல், பதட்டத்தில் பைக்கை அவசரமாக ஒடித்துத் திருப்பியதில், வண்டி வளைந்து வளைந்து ஒடி சாலையின் எதிர்ச்சாரியில் இருந்த குப்பைத்தொட்டியின் மீது மோதி நின்றது. பின்னால் உட்கார்ந்திருந்த மாதங்கி வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள். அவள் தலை எதோ கடினமான பொருளின் மீது மோதிய நிலையில் கீழே விழு ந் தாள். 

ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோதே மெஸ்ஸிலிருந்து நாலைந்து பேர் கையில் கட்டைகளுடன் அவனை நோக்கி ஒடி வந்தனர். 

"ஏண்டா, பந்த் அன்னைக்குக் காதலியோடு ஊர் சுத்த வேண்டியிருக்கா  உனக்கு?" என்றபடியே ரமேஷின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் ஒருவன்.

"சார், அவங்க என் அக்கா மாதிரி சார்!" என்று அலறினான் ரமேஷ்.
     
நினைவு தப்பிக்கொண்டிருந்த மாதங்கிக்கு  இது காதில் விழுந்ததும் எதோ ஒரு திருப்தியில் அவள் உதடு விரிய, அந்த உணர்விலேயே மயங்கிப் போனாள்.

"சின்னப்பையன்கிட்ட என்னடா பேச்சு?" 

"அவன் வண்டியைக் கொளுத்தி விட்டுட்டாப்  போச்சு" என்றான் ஒரு கர்மவீரன். மற்றவர்கள் இந்த யோசனைக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தார்கள். 

"ஐயையோ! வேண்டாம் சார், விட்டுடுங்க!" என்று ரமேஷ் அலறியது வியர்த்தமாகியது. 

பைக்கின் மீது எழுந்த ஜ்வாலை ரமேஷின் வயிற்றுக்குள் பாய்ந்தபோது, மனதில் அவன் அப்பா வந்து '"கிளம்பும்போதே சொன்னேனே கேட்டியா?" என்றார். 
பாலகிருஷ்ணன் எங்கேயோ பறந்து கொண்டிருந்தார். அழுத்தம் மிகுந்து ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொள்ள, ரத்தத்தின் வேகம் இதயத்தை அழுத்தி நினைவுகளை வேகமாக வெளியே விரட்டிக்கொண்டிருந்தது. இறக்கப்போகிறோம் என்ற நிச்சயமான உண்மை அதிர்ச்சியையம் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. 

'நான் இப்போது செத்தால் எனக்கு கொள்ளி வைக்கக்கூட யாரும் இல்லை. என் மகள் ஊரில் இருந்தபோது இது நடந்திருக்கலாம். ஆனால் என் மகள்  ஊரில் இருந்திருந்தால் நான் என் இந்த மெஸ்ஸுக்கு வந்து மாட்டிக்கொண்டிருக்க...இப்போது நான் எங்கே இருக்கிறேன்? இந்தாப்பா..சூடா ஒரு கப் ரசம்! 

கடைசியாக அவருக்கு நினைவு இருந்தபோது அவர் பேத்தி தீப்தி அவரிடம் வந்து, "தாத்தா! பாம்பா மாறின ராஜகுமாரன் அப்புறம் என்ன ஆனான் தாத்தா?" என்று கேட்டாள்.

ன்று இரவு தொலைக்காட்சியில்  செய்தி படித்தபெண்மணி, "ஓரிரு சம்பவங்களைத் தவிர, பொதுவாக இன்று பந்த் அமைதியாகவே நடந்தது" என்று புன்னகை மாறாமல் அறிவித்தாள் . 

(1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டது)


Friday, August 5, 2016

18. கிண்டி வந்து விட்டது!


ராமரத்தினத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. எவ்வளவுதான் கோபமாயிருந்தாலும் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. முப்பது வருட தாம்பத்தியத்தில் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்தது இதுதான் முதல் தடவை.

இந்தத் தடவை மட்டும் ஏன் அவர் அவளை அடிக்க வேண்டும்? அப்படி அவள் என்ன சொல்லி விட்டாள்? 'உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு இந்த முப்பது வருடமாக நான் எதைக் கண்டேன்?' என்று எல்லா மனைவிமார்களும் மனப்பாடம் செய்வதுபோல் ஒப்பிக்கும் அதே நான்சென்ஸ்தானே?' ஆனால் அதை நான்சென்ஸ் என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர் ஏன் உணர்ச்சி வசப்பட்டார்?

சம்பவம் முழுவதும் அவர் கண்முன் நிழலாடியது.

அவள் அப்படிச் சொன்னதும் அவருக்குக் குபீரென்று கோபம் பொங்கி எழுந்தது. அவரை அறியாமலேயே அவரது கை அவள் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது. 

சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சி அடைந்த ருக்மிணி அழக்கூட மறந்தவளாக விழிகள் பிதுங்க விழித்தாள். 

அப்புறம்..அப்புறம்.. அதை நினைக்கவே அவருக்கு அவமானமாக இருந்தது.

"உன் மனதில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய், நாயே?"

சே! 'ருக்கு,' 'ருக்கு' என்று ஆசையாக அழைத்த அதே நாவால் 'நாயே' என்று அவளை அழைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது?

இனம் புரியாத ஒரு உணர்ச்சியில் அவர் தன் வாயில் அடக்கி வைத்திருந்த புகையிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினார் - தாம் ஓடும் ரயிலில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து.

"யாருப்பா அது புகையிலைச் சாத்தை வெளியில துப்பறது? அறிவு கெட்ட..."

அதற்குப்பின் வந்த வசை மொழியில் அவர் கவனம் நிலைக்கவில்லை.

ருக்கு, ருக்கு! என்னை மன்னித்து விடு. ஏதோ கோபத்தில்....

தன் செய்கையை உணர்ந்த மறு கணமே அவர் வாய் மூடி மௌனியானார்.

ருக்மிணி அவரைப் பார்த்த பார்வையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனையோ முறை அவள் அவரைக் கோபத்துடன் பார்த்திருக்கிறாள்.ஆனால் ஒரு முறை  கூட இது போல இகழ்ச்சியாகப் பார்த்ததில்லை.

"ஓ! உங்களுக்கு வெறி அந்த அளவுக்கு ஏறிடுச்சா? என்ன சொன்னீங்க? நாய்..நாய்.  ஆமாம். நான் நாய்தான். இந்த நாயோடத்தானே முப்பது வருஷம் குடித்தனம் நடத்தி  மூணு பெண்களையும் மூணு பிள்ளைகளையும் பாரபட்சம் இல்லாமல் பெத்து வச்சிருக்கீங்க? இப்பதான் நான் நாய்னு உங்களுக்குத் புரிஞ்சுதோ? ஏன் நாய்னா உங்களுக்கு பிடிக்காதோ? ஒருவேளை நான் குதிரையா இருந்திருந்தா உங்களுக்குத் பிடிச்சிருக்குமோ என்னவோ? பேசாம இந்த நாயை அடிச்சு விரட்டிட்டு ஒரு குதிரையைக் கல்யாணம் பண்ணிக்கங்களேன்!"

நாக்கைச்  சாட்டையாகச் சுழற்றி ஒவ்வொரு வார்த்தையாலும் அவரை விளாசி விட்டு அவள் விம்மி அழ ஆரம்பித்தாள்.  

ராமரத்தினம் கோபத்திலும் இயலாமையிலும்  துண்டை உதறி வீட்டுக் கிளம்பியவர்தான். 

நிறைய பேர் இறங்கினார்கள். அதை விட அதிகமான பேர் ஏறினார்கள். ரயில்பெட்டியில் நெரிசல் அதிகமாகியது.

ராமரத்தினம் நினைவுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வெளியே எட்டிப் பார்த்தார்.

எழும்பூர்.

ஏதோ ஒரு பிளாட்பாரத்திலிருந்து ஒரு ரயில் பெரிதாக ஊதிவிட்டுக் கிளம்பியது.

'ஒருவேளை, ருக்கு கோபித்துக்கொண்டு  ஊருக்குப் போயிருப்பாளோ?'

'சே  சே ! அவள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் இல்லை. அத்துடன் அவளிடம் பணம் எது?'

அன்று காலை சண்டையே  பண விவகாரத்தில்தான் ஆரம்பித்தது. அவர் அவளுடைய இரட்டை வடச் சங்கிலியைக் கேட்கப்போய்தான்  அவள் பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவுதான் நினைவிலிருந்து அகற்ற முயன்றாலும், அன்று காலை நடந்த நிகழ்ச்சிகள் அவர் மனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.

"எதுக்கு சங்கிலி?" அவள் குரலில் எவ்வளவு ஆக்ரோஷம்!

அவரும் கொஞ்சம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கலாம்!

"அதைப்பத்தி உனக்கென்ன? அடக்கமான பொண்ணா லட்சணமா கேட்டவுடன்  கழட்டிக் கொடுப்பாயா..."

"புருஷனுக்கு ஏத்தாப்பலத்தானே பொண்டாட்டியும் இருக்க முடியும்?"

"ஒனக்கு வாய் ரொம்ப நீளமாய்க்கிட்டே வருது!" 

"சிலருக்கு வாய் நீளம், சிலருக்குக்  கை நீளம். நீங்க பணம் கட்டற குதிரைகளுக்குக் கொஞ்சம் கால் நீளமாக இருந்திருக்கலாம்!"

"ஷட் அப்! யாரைப் பாத்துக்க கை நீளம் னு சொல்றே?"

"நான் உங்களைத்தான் சொன்னேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? போன வாரம் எனக்குத் தெரியாம பீரோவில் இருந்த வெள்ளி டம்ளரை எடுத்துக்கிட்டுப் போனீங்களே, அது ஞாபகம் வந்துடுச்சோ?"

அப்போதே அவர் கையை ஓங்கி இருக்க வேண்டியவர்தான். காரியம் ஆக வேண்டுமே என்பதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

"இதோ பார். நீ எனக்குச் சொந்தம். நீ பிறந்த வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வந்த பொருள்களும் எனக்குத்தான் சொந்தம். நான் உன்னைக் கேட்டுத்தான் எதையும் எடுத்துக்கிட்டுப் போகணும்னு அவசியம் இல்லை. இப்போ சங்கிலியைக் கழட்டிக் கோடு சீக்கிரம். நேரமாச்சு."

"நேரம் ஆனா  ஆகட்டுமே! நீங்க ஓடினா, அங்கே உங்க குதிரையும் ஓடிடுமோ? அது அசைஞ்சு அசைஞ்சு நடந்து கடைசியாத்தானே வரப்போகுது!"

"உஸ்ஸ் .. என் பொறுமையைச் சோதிக்காதே!"

சட்டென்று அவள் முகம் இறுகியது. "இங்க பாருங்க. உங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்குத் தயாரா நிக்கறாங்க. மூணாவது பொண்ணும் இன்னைக்குக் காலையிலே தயாராயிட்டா. இன்னிக்கு உங்க ஞாபகம் எல்லாம் இங்கே இருக்காதுங்கறதுனாலதான் இதை உங்க கிட்டே சொல்லலே. இன்னிக்கு நீங்க ரேசுக்குப் போக வேண்டாம், இன்னியிலிருந்து போக வேண்டாம்."

அவர் பொறுமை எல்லை கடந்தது. அவர் மனைவி நாசூக்காகத் தெரிவித்த தகவல் அவரிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சங்கிலியை எடு, சீக்கிரம்!"

"முடியாது."

"என்ன?"

அப்போதுதான் அவள் அதைச் சொன்னாள் . "உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு..."

"நான்சென்ஸ்."

"நான் எனக்குன்னு எதையும் கேக்கல. நம்ம பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நீங்க எதையும் சேர்த்து வைக்கல. இருந்ததையும் துடைச்சதுதான் மிச்சம். இந்தச் சங்கிலி ஒண்ணுதான் மிச்சம் இருக்கு. இதை மட்டும் வச்சிக்கிட்டு எதையும் செய்ய முடியாதுங்கறது எனக்குத் தெரியும். வெள்ளத்திலே அடிச்சுக்கிட்டுப் போனாலும் கையில புடிச்சுக்க சின்னக் கட்டையாவது இருந்தாத்தான்  ஒரு ஆறுதலும் நம்பிக்கையும் இருக்கும். அது மாதிரிதான் இந்தச் சங்கிலி. இதைக் குடுக்க மாட்டேன்."

இப்போது நினைத்துப் பார்த்தபோது ருக்மிணி தப்பாக எதுவுமே சொல்லவில்லை என்று தோன்றியது. மனைவி தனக்கு  உபதேசம் செய்வதாவது என்ற ஆண்பிள்ளைத் திமிரினாலும், அவள் நகையைக் கொடுக்க மறுத்த ஆத்திரத்தினாலும்தான் அவர் கையை ஓங்கி விட்டார்.

அவருக்குக் கை நீளம் என்று அவள் குத்திக் காட்டியது எவ்வளவு உண்மை - அவள் வேறொரு அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும்!

வண்டி மீண்டும் நின்றது. சேத்துப்பட்டு.  அடுத்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி.

கையிலிருந்த ரேஸ் டிப்ஸ் புத்தகத்தைப் பார்த்தார்.

ருக்மிணி சங்கிலியைக் கொடுக்க மறுத்து விட்டாலும், அவர் கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரம் கை கொடுத்தது. அது கூட ருக்மிணியின் அப்பா போட்டதுதான்!

பிராட்வேயில் அவர் வழக்கமாக அடகு வைக்கும் கடையில் அறுபது ரூபாய்தான்  கிடைத்தது. ரேஸ் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பதாகச் சொல்லிக்கொண்ட அவருடைய அலுவலக நண்பர் கேசவமூர்த்தியிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு  கோட்டை ஸ்டேஷனில் ரயில் ஏறி விட்டார்.

டிப்ஸ் புத்தகத்தை அவர் கண்கள் வெறுமையாக நோக்கிக்கொண்டிருந்தன. அதை அவர் பலமுறை படித்து மனப்பாடம் செய்தாகி விட்டது. 'ஹெலன் ஆஃப் டிராய்',' ப்ளூ மூன்' இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அவருடைய பிரச்னை.

இந்த இரண்டு குதிரைகளில் ஒன்று இன்று நிச்சயம் ஜெயிக்கும். அவர் இன்று ஜெயிக்காமல் விடப்போவதில்லை.

இத்தனை வருடங்களாக ஒருமுறை கூட அவர் பணம் கட்டிய குதிரை வெற்றி பெற்றதில்லை. இன்றுமா அப்படி ஆகி விடும்? 'முயற்சி வெற்றி பெறும்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!  'சூதாடக்கூடாது' என்று கூடத்தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.  ஆனால் இது சூதாட்டமா? சே! இதென்ன குழப்பம்!

டிப்ஸ் புத்தகத்தை மூடி வைத்தார். குதிரைகள் ஓடும் தோற்றமும், ருக்மிணியின் ஆக்ரோஷமான முகமும் ஒருங்கே அவர் கண் முன் நின்றன.

பாவம் ரூக்மிணி! அவளும்தான் இத்தனை வருடங்களாக எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள்! அவர் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் அவள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறாள் என்பது அவருக்கு ஒரு புரியாத புதிர்தான்.

காலையில் அவள் சொன்னதெல்லாம் மீண்டும் அவர் நினைவுக்கு வந்தது. மூன்று பெண்கள்! அவர்களுக்கு அவர் என்ன வழி செய்யப் போகிறார்?

திடீரென்று அந்தப் பிரச்னை அவர்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. இத்தனை நாள் - ஏன் இன்று காலை வரை, சற்று முன் வரை கூட அவரால் எப்படி இத்தனை அலட்சியமாக இருக்க முடிந்தது?

கடவுளே! இத்தனை வருடங்களாகக் குதிரைப் பந்தயம் ஆடியதில் ஒரு முறையாவது அவருக்கு ஜாக்பாட் விழுந்திருக்கக்கூடாதா?

இதுவரை ரேசுக்குப் போனதில் அவர் எத்தனை ரூபாய் தோற்றிருப்பார்? பத்தாயிரம் ரூபாய் இருக்குமா அல்லது ஒரு லட்சம் ரூபாயாய்க் கூட இருக்குமோ? அவரால் அனுமானிக்க முடியவில்லை.

எது எப்படியானாலும் இதுதான் அவர் விளையாடப்  போகிற கடைசி ரேஸ். இதில் அவர் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. 'ப்ளூமூன்' மீது சத்தியம். சே! சத்தியம் செய்யும்போது கூட ரேஸ் குதிரை நினைவுதானா? இப்படிக் குதிரைகள் நினைவாகவே இருந்தால் ரேஸ் பழக்கத்தை விடுவது எப்படி?

ஆனால் இதுவரை ஒருமுறை கூட அவர் இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று நினைத்ததில்லை. இன்று இந்த நினைவு வந்ததே ஒரு முன்னேற்றம்தான்.

சட்டென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

இன்றே இந்தப் பழக்கத்தை விட்டு விட்டால் என்ன? இன்று மட்டும் என் ரேசுக்குப் போக வேண்டும்?

ருக்மிணியின் கண்ணீர் வடிந்த முகம் அவர் நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தாவணி போட்டுக்கொண்டு நின்ற மூன்று 'குதிரைகளின்' ஏக்கமான முகங்கள்!

அவர் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

ஆமாம். அவர் இன்று ரேசுக்குப் போக போவதில்லை.

தன்னுடைய இந்த முடிவு ருக்மிணிக்குத் தெரிந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்!

ரயில் பாலத்தைத் தாண்டி நுங்கம்பாக்கம் ஸ்டேஷனை நெருங்கி வேகம் குறைந்தது.

ராமரத்தினத்தின் மனதில் எண்ண ஓட்டங்கள் அதிகரித்தன.
'கிண்டியில் இறங்கி குரோம்பேட்டைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு அடுத்த ரயிலில் குரோம்பேட்டை போய்விட வேண்டும்.'

குரோம்பேட்டையிலிருந்து பீச் ஸ்டேஷன் வரை ரிட்டர்ன் டிக்கட் வாங்கியிருப்பது நினைவு வந்தது.

'கிண்டியில் இறங்க வேண்டியதில்லை. இறங்கினால் சபலம் தட்டி ரேசுக்குப் போனாலும் போய் விடுவேன்! கிண்டியில் இறங்காமல் நேரே குரோம்பேட்டைக்குப் போய் விட வேண்டும்'.

ருக்மிணிக்கு மல்லிகைப்பூ மிகவும் பிடிக்கும் என்பது எங்கேயோ புத்தகத்தில் படித்த விஷயம் போல் நினைவுக்கு வந்தது.

 'குரோம்பேட்டை ஸ்டேஷனில் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு  போக வேண்டும். அதை நானே அவள் தலையில் வைத்து விட  வேண்டும். இத்தனை வருட மணவாழ்க்கையில் ஒருநாள் கூட நான் எனது அன்பை இதுபோன்ற செயல்களால் வெளிப்படுத்தியதில்லை. ருக்மிணி எவ்வளவு மகிழ்ந்து போவாள்!'

ந்திரனுக்குக் கால் கடுத்தது. இன்று பார்த்து ரயிலில் ஒரே நெரிசல். இந்த ஞாயிற்றுக்கிழமையில் ஏன்தான் ரேஸ் வைக்கிறார்களோ?

அவனுக்குப் பின்னே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் இரண்டு குதிரைகளில் எது ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தார்கள். குதிரைப் பந்தயத்தில் தோற்பதோடு இந்தப் பந்தயத்தில் வேறு தோற்க வேண்டுமா?

இன்று காலை முதலே அவனுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. எழுந்ததுமே  தலைவலி.பால்காரன் வரவில்லை என்று சொல்லி அம்மா காப்பிக்குக் கை விரித்து விட்டாள். இன்று பார்த்துத்தானா பாங்க் கிளார்க் வேலைக்கான தேர்வு வேறு இருக்க வேண்டும்?

ஒன்பது மணிக்குத் தேர்வு. ஏழரை மணிக்கே பழைய சோற்றைத் தின்று விட்டுக் கிளம்பி விட்டான்.  பையன் பாங்க் வேலைக்காகப் பரீட்சை எழுதப் போகிறானே, வாய்க்கு ருசியாக எதாவது சிற்றுண்டி செய்து கொடுக்க வேண்டும் என்று அம்மாவுக்குத் தோன்றவில்லை! தினமும் சுறுசுறுப்பாக இயங்கும் அம்மாவுக்கு கூட ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஒரு சோம்பல் வந்து விடுகிறது. தினமும் ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள், இன்று ஏழு மணிக்கு அவன் எழுப்பியபிறகுதான் எழுந்தாள்.

பல புத்தகங்களையும், கைடுகளையும் படித்து அவன் தன் மூளையில் ஏற்றிக்கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் எங்கே மறந்து விடுமோ என்ற பயத்தில் புத்தகத்தைப் படித்துக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, அவனைத் தேர்வு எழுத விடக்கூடாது என்று தீர்மானித்தவர் போல் ஒரு கார்க்காரர்  அவன் மீது மோதுவது போல் வர, ஒரு லாங் ஜம்ப் செய்து அவரது முயற்சியை முறியடித்தான்.

ரயில் நிலையத்தில் அவன் மாடிப்படியில் வேகமாக இறங்கிக்   கொண்டிருந்தபோதே அவன் போக வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அவன் மூச்சிரைக்க ஒடி வந்து அதில் தொற்றிக்கொண்டபோது, அவன் கையைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளிய முரட்டு ஆசாமி அவனது அவசரத்தைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் "ஏம்ப்பா! உன் அப்பாவுக்கு நீ ஒரே பையனா, இல்லை நீ போய் விட்டாலும் வேறு யாராவது இருப்பார்களா?" என்று எகத்தாளமாகப் பேசியதில் அவன் படபடப்பு* அதிகமாகி விட்டது.

போகும்போதுதான் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், வரும்போதும் அப்படித்தானா? தேர்வு எழுதிய பள்ளி வகுப்பறையின் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்ததில் உடல் முழுவதும் வலி எடுத்தது. (பாவம், பள்ளி மாணவர்கள் தினமும் ஆறு ஏழு  மணி நேரம் எப்படித்தான்இந்தக் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்திருக்கிறார்களோ?ஒருவேளை அந்த பெஞ்ச்சுகள் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும், வயதிலும், உருவிலும் சிறிய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்!

போதும் போதாதற்கு, தேர்வை அவ்வளவு நன்றாக எழுதவில்லையோ என்ற மனக்கிலேசமும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் ரயிலுக்காகபி பதினைந்து நிமிடங்கள் நின்றதால் ஏற்பட்ட கால்வலியும் சேர்ந்து கொள்ள, சற்று நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் சானடோரியத்தில் இறங்கி வீட்டுக்கு இருபது நிமிடங்கள் நடக்க முடியும்.

சந்திரன் பெட்டி முழுவதும் நோட்டமிட்டான். அவனுக்குக் கொஞ்சம் தள்ளி ஜன்னலோர சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர் கையில் ரேஸ் புத்தகத்துடன் அரைக்கண் மூடியபடி அமர்ந்திருந்தார். ரேஸில் தான் பணம் கட்டிய குதிரை ஜெயிப்பது போல் கனவு கண்டு கொண்டிருப்பார் போலும்! அவர் கிண்டியில் இறங்கி விடுவார். அப்போது காலியாகும் சீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவரது பெஞ்ச்சுக்கு அருகில் வந்து நின்றான். வண்டி சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது. கிண்டியில் இறங்க வேண்டிய சிலர் சீட்டிலிருந்து எழுந்து வாசல் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். நிறையே பேர் இறங்கப் போவதாகத் தோன்றியது. தான் முதலில் நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தால் அங்கேயே இடம் கிடைத்திருக்கும். இங்கே வந்திருக்கவே வேண்டாம்.

வண்டி கிண்டி ஸ்டேஷனை நெருங்கி விட்டது. ஆனால் அவர் இறங்க யத்தனித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தூங்கி விட்டாரோ? பாவம் ஸ்டேஷனை விட்டு விடப்  போகிறார்.

சந்திரன் அவர் அருகில் நின்று அவரை உலுக்கி எழுப்பினான். "சார் கிண்டி வந்து விட்டது. இறங்கவில்லையா?"

கனவிலிருந்து விழித்தவர் போல் ராமரத்தினம் கண் விழித்தார். "ஆமாம்..கிண்டி..ஓ!.." என்று முனகிக்கொண்டே சீட்டிலிருந்து எழுந்து அவசரமாக இறங்கி வாசலை நோக்கி விரைந்தார்.

காலியான சீட்டில் சந்திரன் உட்கார்ந்து கொண்டான். வண்டி கிண்டியிலிருந்து கிளம்பியபோது அவர் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்ததைப்  பார்த்தான்.

*இன்றய இளைஞர்களுக்கு 'டென்ஷன்' என்றால்தான் புரியும்!

(1973ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.)


Sunday, July 3, 2016

17. தாமதம்

மாலை வகுப்பு முடிந்து வெளியே வரும்போதே இருட்டத் தொடங்கியிருந்தது. நேரம் என்னவோ ஐந்தரை மணிதான். குளிருக்குப் பயந்து முன்னமே விடை பெற்றுக்கொண்டு விட்ட சூரியன்!

இரண்டு  மூன்று பேராகச் சேர்ந்து மற்றவர்கள் கலைய, அரவிந்தன் தனியாக நின்றான். தனியாக நின்றபோதுதான் தனியாக நிற்கும் மற்றொரு நபரைக் கவனித்தான்.அந்த ஆண்கள் கூட்டத்தில் எப்படியோ தனி ஆளாக இடம் பெற்றுவிட்ட ஒரே பெண் - பெண்மணி. அவள் - அவர்கள் பெயர் கூட .....ஆங் விமலா.

சற்றுத் தள்ளி வேறு புறம் பார்த்துக்கொண்டு நின்றவளை வலுவில் அணுகிப் பேசுவது குறித்துக் கொஞ்சம் தயக்கத்துடனேயே அவளை நெருங்கினான்.

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பியவள் முகத்தில் அனிச்சையாகத் தோன்றிய பய உணர்ச்சி கண நேர ரசாயன மாற்றத்தில் புன்னகையாக உருமாறியது.

"ஹலோ" என்றாள் அவள்.

"என்ன இப்படித் தனியாக...?"

"எல்லோரும் போய் விட்ட பிறகு மீதம் இருப்பவர்கள் தனியாகத்தானே இருக்க முடியும்?"

அவளது இயல்பான பேச்சினால் இறுக்கம் தளரப் பெற்றவனாக அவன் சிரித்தான்.

மேலே என்ன பேசுவது என்று யோசித்து விட்டு "எங்கே, ரூமுக்குத்தானே போகிறீர்கள்?" என்றான்.

அவள் பதில் சொல்லாமல் தலையாட்டினாள்.

"இந்த க்ரூப்பில் நீங்கள் தனியாக வந்து மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது." என்றான் அவன்.

"தனியாக எங்கே? அதுதான் இருபத்தைந்து பேர் இருக்கிறோமே!"

"ஐ மீன், இந்த க்ரூப்பில் நீங்கள் ஒருவர்தான் பெண்."

"ஆமாம். காலையில் வகுப்பைத் துவக்கும்போது கோர்ஸ் டைரக்டர் 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' என்று துவங்கி விட்டு, அப்புறம், 'ஐ மீன் லேடி அண்ட்  ஜெண்டில்மேன்' என்று மாற்றி, மீண்டும் 'ஐ மீன் ஜெண்டில்மென்' என்று திருத்திக் கொண்டு மீண்டும் 'ஐ மீன் லேடி அண்ட் ஜெண்டில்மென்' என்று மிகவும் சிரமப்பட்டு விளித்ததைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது" என்று அவள் சிரிக்காமல் சொன்னபோது அவன் குபீரென்று சிரித்து விட்டான்.

அப்போதுதான் தான் செய்ய வந்த வேலை நினைவுக்கு வந்தவனாக கடிகாரத்தைப் பார்த்தான்.

"நீங்கள் கடிகாரத்தைப் பார்ப்பதைப் பார்த்தால் அவசரமாக எங்கேயோ போகிறவரை நான் தடுத்து நிறுத்தி வைத்து விட்டிருப்பதாகத் தோன்றுகிறது." என்றாள் அவள்.

அவன் சட்டென்று மீண்டும் இறுக்கமாகி "அப்படி ஒன்றும் இல்லை. நான் கொஞ்சம் ஜி.பி.ஒ. வரை போக வேண்டியிருக்கிறது. என் மனைவிக்கு எழுதிய கடிதத்தை போஸ்ட் பண்ண வேண்டும். உணவு இடைவேளையின்போது பக்கத்தில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட மறந்து விட்டேன். இப்போது நேரமாகி விட்டதால் ஜி.பி.ஓவில் போஸ்ட் செய்தால்தான் இன்றைய தபாலில் போகும்" என்றான்.

"அதற்கு ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறீர்கள்? விளக்கம் கேட்க உங்கள் மனைவி கூடப் பக்கத்தில் இல்லையே! உங்களிடமிருந்து தினம் கடிதம் வராவிட்டால் உங்கள் மனைவி மிகவும் கவலைப் படுவார்களோ? உங்கள் மீது அவ்வளவு அன்பு போலிருக்கிறது!"

அவன் வெளியே தெரியாமல் மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.

ஆமாம். மிகவும் அன்புதான். அன்பு என்று சொன்னால் போதாது. அன்பு வெறி என்றுதான் சொல்ல வேண்டும்! ஆனால் இலக்குத் தெரியாத அன்பு. அன்பு என்பது செலுத்தப்படுபவர்களின் உள்ளத்தைத் தொட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாத அன்பு. உள்ளத்தைத் தொடுவதற்கு பதில் உள்ளத்தைத் துளைத்து அங்கே நிலை பெறும் யற்சியில் அம்பாக மாறி விடுகிற அன்பு!

அவனுடைய விருப்பங்கள், ஆர்வம், இலட்சியங்கள், மனப்போக்கு இவற்றைப் பிடிவாதமாகப் புரிந்து கொள்ள  மறுக்கும் அன்பு. அவனுக்கு மனம், அறிவு போன்றவை இருப்பதை அலட்சியம் செய்து வெளியே இருக்கும் கூட்டின் மீது பொழியப்படும் அன்பு. செலுத்தப்படும் நபரிடமிருந்து பிரதிபலிப்பாக அன்புக்குப் பதிலாக எரிச்சல், ஆத்திரம்,வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் ஆகியவற்றையே வெளிக்கொணரும் அன்பு!

"என்ன யோசனை? மனைவி ஞாபகத்தில் ஆழ்ந்து விட்டீர்களா?"

"ஆமாம். அவள் ஞாபகம்தான்." சுதாரித்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.

இது போன்று  யோசித்துக்  கொண்டிருக்கும்  சந்தர்ப்பங்களில் "என்ன யோசனை?" என்று கூடக் கேட்க மாட்டாள் அவன் மனைவி லக்ஷ்மி. "என்னங்க, உடம்பு சரியில்லையா? ஆஃபிசுக்கு லீவு போட்டுடுங்களேன்! டாக்டர் கிட்டே போயிட்டு வாங்க. உடம்பு விஷயத்தில் அலட்சியமா இருக்காதீங்க" என்று படபடவென்று அவன் பதிலை எதிர்பாராமலேயே பொரிந்து தள்ளி விடுவாள்.  எரிச்சல் தாங்காமல் 'இந்த இடத்தை விட்டு எங்காவது போனால் சரி' என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி விடுவான் அவன்.

"நீங்கள் ஜி.பி.ஒ. போவதாக இருந்தால் இந்தக் கடிதத்தையும் தபாலில் சேர்த்து விடுகிறீர்களா? - இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்று கைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் விமலா.

"ஒ! வித் ப்ளெஷர்" என்று அதை வாங்கிக் கொண்டவன் "யாருக்கு இந்தக் கடிதம்?" என்றான். கேட்ட பிறகுதான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

"ஏன் நீங்கள் உங்கள் மனைவிக்கு எழுதுவது போல நான் என் கணவருக்கு எழுதக் கூடாதா?" என்றாள் விமலா.

அவள் பேச்சிலும் சிரிப்பிலும் தளும்பிய குரும்பிலிருந்து அவள் உண்மையாகச் சொல்கிறாளா அல்லது விளையாட்டுக்காகச் சொல்கிறாளா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"நாளை வகுப்பில் சந்திக்கலாம்" என்று சொல்லி அவள் அவனிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

அவள் விடைபெற்றுச் சென்றவுடனேயே லக்ஷ்மியைப் பற்றிய நினைவுகள் அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

வெவ்வேறு அரசு அலுவலகங்களிலிருந்து இளநிலை அதிகாரிகள் இருபத்தைந்து பேரைத் தேர்ந்தெடுத்து நிர்வாக இயல் பயிற்சிக்காக ஹைதராபாதில் உள்ள ஒரு பிரபல பயிலகத்துக்கு இரண்டு வாரங்கள் அவர்களை அனுப்பி வைத்திருந்தது அரசு.

தங்கும் அறைகள், உணவகம் ஆகியவை கூடிய பயிலகத்தில்  முதல் நாள் வகுப்புகள் முடிந்ததும் துவங்கிய அவர்கள் சந்திப்பு தினமும் தொடர்ந்தது. வகுப்பில் போதிக்கப்பட்ட சித்தாத்தங்கள், வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி விவாதித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் ஒரு தினசரி நிகழ்ச்சியாக நடந்து வந்தது.

அவ்வப்போது விமலா அவனுடைய 'அன்பான மனைவி'யைப் பற்றி விசாரிப்பாள்.

"என்ன சார், உங்கள் மனைவியிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருக்கிறதா?"

"ஓ! இன்று கூட வந்தது. எண்ணெய்  தேய்த்துக் கொள்கிறீர்களா, அதற்கான வசதிகள் எல்லாம் அங்கே இருக்கிறதா?' என்று கேட்டு எழுதி இருக்கிறாள்...அது இருக்கட்டும், அன்று ஒரு கடிதம் கொடுத்து அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னீர்களே, அது உங்கள் கணவருக்குத்தானா?"

"என் அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"அதில்லை. அன்று நீங்கள் எதோ விளையாட்டுக்காகச் சொன்ன மாதிரி இருந்தது."

அவள் அவனைச் சில வினாடிகள் குறுகுறுப்புடன் பார்த்து விட்டு, "உங்கள் சந்தேகம் என்ன என்பது எனக்குப் புரிகிறது.  எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றாள். அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு மறைந்து விட்டாற்போலிருந்தது.

"ஓ!"

தனக்குக் கல்யாணம் ஆகி விட்டதை அவள் உறுதிப்படுத்தியது தனக்கு ஏன் இவ்வளவு ஏமாற்றத்தை அளிக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரியவில்லை.

"உங்கள் கணவரிடமிருந்து பதில் வந்ததா?"

"அதற்கெல்லாம் அவருக்கு நேரம் எது? அவர் சார்பில் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி எழுதினால் உண்டு!"

"ஓ! உங்கள் கணவர் மிகவும் பிஸியான மனிதர் என்று சொல்லுங்கள். என்ன செய்கிறார் அவர்?"

"அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே, பிஸியான மனிதர் என்று. பிஸினஸ்மேன்."

'பிஸினஸ்மேன்கள் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றினால் தேவலை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பின் அழுத்தம் அவள் கணவன் பலராமன் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியது.

'இதோ இந்த அந்நியன் இந்த ஐந்து நாட்களில் என்னிடம் பேசிய அளவுக்குக் கூட இந்த ஐந்து வருட தாம்பத்தியத்தில் மொத்தமாக என்னிடம் பேசியிருப்பாரா பலராம்? அவர் என்னிடம் பேசியதில் பெரும்பகுதி தொலைபேசிக் கம்பி வழியாகத்தான். குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு மனைவி எதற்கு? சமூக அந்தஸ்துக்காகவா?'

"என்ன மௌனமாகி விட்டிர்கள்? கணவரைப் பற்றிய நினைவுகளில் முழ்கி விட்டீர்களோ?" என்றான் அரவிந்தன் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி.

"ஆமாம். அவர் நினைவு வந்ததும் மௌனமும் வந்து விட்டது."

எதேச்சையாக வந்த பதிலில் தன்னை அறியாமலேயே புகுந்து விட்ட உண்மை அவளை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

 முதல் வார இறுதியில் வந்த விடுமுறை நாளில் இருவரும் வெளியே சென்றார்கள். கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூஸியம், பப்ளிக் கார்ட்னஸ், பிர்லா மந்திர், டாங்க்  பண்ட் என்று  பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற டூரிஸ்ட் பஸ்ஸில்  சென்றார்கள். பஸ்ஸில் தனித்தனியே உட்கார்ந்து வந்ததால் பேச அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

மியூசியத்தைச் சுற்றிப் பார்க்கும்போது விளையாட்டாகக் கேட்டாள்."இந்த இடத்துக்கு உங்கள் மனைவியுடன் வந்திருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?"

அவன் உடனே பதில் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று யோசிப்பது போல் தோன்றியது.

சில வினாடிகளுக்குப் பிறகு, "நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது" என்றான்.

அவன் என்ன சொல்ல விழைந்தான் என்று அவளுக்குப் புரியவில்லை.

கண்ணாடி அறை என்ற பகுதியில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கண்ணாடிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது அரவிந்தன் சொன்னான் "என் மனைவி என்னுடன் இந்த மியூசியத்துக்கு வந்திருந்தால் அவளுக்கு இந்த அறையைப் பார்ப்பதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கும்."

"ஏன், அலங்காரப் பிரியையா உங்கள் மனைவி?"

'அப்படி இல்லை. மற்ற இடங்களில் உள்ள கலைப்படைப்புகளை ரசிப்பதில் அவளுக்கு ஆர்வம் இருக்காது."

அவளுக்கு எதிலாவது ஆர்வம் இருக்குமா என்று கடந்த ஏழு வருடங்களாகத் தேடிய அழுத்தத்தின் சோர்வை அப்போது அவன் உணர்ந்தான்.

அவன் அப்படி ஒன்றும் பெரிய கலாரசிகனோ இலக்கிய ஆர்வலனோ இல்லை. ஆயினும் சராசரி ரசனை கூட இல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்கை நடத்துவதில் உள்ள சோர்வு - அப்பப்பா!

தன்னுடன் தன் கணவன் அதிகம் பேசுவதில்லை என்று அவன் மீது அவன் மனைவி லக்ஷ்மிக்கு ஒரு குறை உண்டு. எதைப்பற்றிப் பேசுவது? அவள் அழகைப் பற்றி, அவர்களுடைய குழந்தையைப் பற்றி, குடும்ப வரவு செலவு பற்றி, அண்டை வீட்டுச் செய்திகள் பற்றி..தினமும் எவ்வளவு நேரம் பேச முடியும்? அவன் அலுவலகத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசினால் அதைக் கேட்பதில் அவளுக்கு ஆர்வமோ அவன் சொல்வதைப் புரிந்துகொண்டு ரசிப்பதில் ஈடுபாடோ அவளிடம் கிடையாது. அப்புறம் ஏன் கணவன் தன்னிடம் அதிகம் பேசுவதில்லை என்று குறைப்பட்டுக்கொள்ள வேண்டும்? 

சராசரி மனிதர்களின் ஆர்வ மையமான சினிமா விஷயத்தில் கூட அவளது ரசனை மேலோட்டமாகக் கூட இல்லை. கதாநாயகியை வில்லன் துரத்தினால் "கடவுளே! அவளைக் காப்பாத்தேன்!" என்று தியேட்டரிலேயே வாய் விட்டு வேண்டிக்கொள்கிற குழந்தைத்தனம்!

"வாருங்கள். மணி பன்னிரண்டு ஆகப்போகிறது. மியூசிகல்  க்ளாக்கில்  மணி அடிப்பதைப்  பார்க்க வேண்டாமா?" என்று விமலா அவன் சிந்தனையைக் கலைத்தாள்.

ரண்டாவது வாரம் மிக வேகமாகவே பறந்தது.

கடைசி நாளுக்கு முதல் நாள்.

"ஆச்சரியம். என் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது" என்றாள் விமலா.

"என்னவென்று? உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராமா?"

"ஆன்  தி அதர் ஹேண்ட், என்னை வர வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்!"

"என்ன?"

"பயப்படாதீர்கள்! அவர் பிசினஸ் விஷயமாக நாளை இரவு இங்கே வருகிறாராம். நாளை மறு நாள் இரவு அவருடனேயே போகலாம் என்று எழுதியிருக்கிறார்."

"எதிர்பாராத சந்தர்ப்பம்தான்."

"ஆனால் நான் திட்டமிட்டபடி அவர் நாளை இரவே கிளம்புவதாக இருக்கிறேன். அவருக்கு ஒரு தந்தி கொடுத்து விட வேண்டியதுதான்."

"ஏன் அப்படி?" என்றான் அரவிந்தன் திகைப்புடன்.

"வாட் இஸ் தி யூஸ்? அவர் இங்கே தங்கப் போகிற 24 மணி நேரத்தில் 25 மணி நேரத்துக்கு எங்கேஜ்மென்ட் வைத்திருப்பார். என்னுடைய எங்கேஜ்மென்ட் எப்போதோ முடிந்து போன ஒன்றுதானே! இங்கே ஹோட்டல் அறையில் தனியாகக் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக ஊருக்குப் போய் வீட்டிலேயே உட்கார்ந்திருக்காலாம். அது பழகிப் போனதாகவாவது இருக்கும்."

ஏதோ சொல்ல நினைத்து வாய் திறந்து விட்டுப் பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் வாயை  மூடிக் கொண்டான் அரவிந்தன். அவன் முகத்தில் தெரிந்த பச்சாதாபத்தைப் பார்த்தபோதுதான் விமலாவுக்குத் தன் மனக்குமுறல்களைக் கொட்டி விட்டோமோ என்று தோன்றியது.

"ஐ ஆம் சாரி" என்றாள்.

"அது நான் சொல்ல வேண்டியது" என்றான் அரவிந்தன்.

கடைசி நாள் வகுப்புகள் முடிந்த பிறகு, ஊருக்குக் கிளம்புமுன் இன்னொரு முறை பிர்லா மந்திர போக வேண்டும் என்று விமலா விரும்பினாள். இருவரும் போனார்கள்.

அன்று கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் அமைதியாக இருந்தது. நிதானமாகப் படிகளில் ஏறிப் பிரகாரத்தில் நடந்தபோது அரவிந்தனைச் சட்டென்று ஒரு வெறுமை பற்றியது.

"விமலா!" முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.

"சொல்லுங்கள்."

"இந்த அழகான, அற்புதமான, ஆனந்தமான இடத்துக்கு நாம் இருவரும் இனி சேர்ந்து  வரப்போவதில்லை என்ற நினைவு எனக்குத் தாங்க முடியாததாக இருக்கிறது." என்றான் அவன்.

"ஆமாம்" என்றாள் அவள். "வர முடியாது என்பதில்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது."

"நிதானமாகப் பெருமாளைத்  திருப்தியுடன் சேவித்து விட்டு வெளியே வந்து படிகளில் சற்று நேரம் அமர்ந்து விட்டு விடுதிக்குத் திரும்பும் வரை இருவரும் பேசவில்லை.

விமலாதான் முதலில் ஊருக்குக் கிளம்பினாள். அரவிந்தன்தான் ஆட்டோ     ரிக் ஷாவை அழைத்து வந்து அவள் பெட்டியை அதில் வைத்தான். ஆட்டோ ரிக் ஷாவில்  ஏறுமுன் விமலா ஒருமுறை அரவிந்தனின் கண்களை நேராகப் பார்த்து, "நைஸ் மீட்டிங் யூ!" என்றாள்.

அரவிந்தன் பதில் சொல்லவில்லை.

இறுக்கத்தைத் தளர்த்த விரும்பியவளாக, "ஆனால் நீங்கள் அப்படி நினைக்கவில்லை போலிருக்கிறதே!" என்றாள் விமலா.

"இல்லை. இன்னும் ஏழெட்டு வருடங்களுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன்" என்றான் அரவிந்தன். பார்வை அவளை நோக்கி இருந்தாலும் அது எங்கோ தொலைவில் நிலை குத்தி இருந்தது.

விமலா ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

(1990ஆம் ஆண்டு எழுதப்பட்டது.) 







"






















Sunday, June 26, 2016

16. ஓடும் பஸ்ஸில்

 என்னுடைய 21ஆம் வயதில் தேன்மழை என்ற மாதபத்திரிகையின் நவம்பர் 1972 இதழில் என்னுடைய முதல் கதை புகைப்படத்துடன் பிரசுரமானது. 'பாரவி' என்ற என் புனைபெயரில் வெளியான 'ஓடும் பஸ்ஸில்' என்ற அந்த சிறுகதையின் ஸ்கேன் செய்யப்பட்ட வடிவில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.




Friday, June 10, 2016

15. நேர்முகத் தேர்வு - மறைமுக விடை


எவ்வளவு யோசித்தாலும் ராமானுஜத்தால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சக்திவேலா, சரவணனா?

சக்திவேல், சரவணன் இருவரும் ராமானுஜத்தின் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கான நேர்முகத்தேர்வில் இறுதிக்கட்டத்துக்கு வந்தவர்கள்.

ராமானுஜம் இருவரையும் இரண்டு முறை இண்டர்வியூ செய்து விட்டார். மதிப்பெண் போடுவதென்றால், ஒருவரை விட இன்னொருவருக்கு ஒரு மதிப்பெண் கூட அதிகமாகப் போட முடியாது,

இருவரும் இருவிதப் பின்னணியைக் கொண்டவர்கள்.

சக்திவேல் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படித்தவன். அனுபவம் சில வருடங்களே என்றாலும் குறுகிய காலத்திலேயே தன்  திறமையைச் சிறப்பாக வெளிக்காட்டியவன்.

சரவணன் விஞ்ஞானப் பட்டதாரி. எம்.பி.ஏ  இல்லை. ஆயினும் அவனது இயல்பான திறமையும், விரிவான அனுபவமும் பல எம்.பி.ஏக்களைப் பின்னுக்குத் தள்ளி அவனை இறுதித் தேர்வுக்குக் கொண்டு வந்து விட்டது.

இன்று எப்படியும் முடிவு செய்து விடலாம்  என்று நினைத்து இருவரையும் அழைத்துத் தனித் தனியே பேசிப் பார்த்தார்.

சக்திவேலிடம் பேசியபோது, 'இவன்தான் நமக்கு ஏற்றவன். இவனையே தேர்ந்தெடுத்து விடலாம்' என்று நினைத்தார். சரவணனிடம் பேசாமலேயே அவனைத் திருப்பி அனுப்பி விடலாம் என்று கூட நினைத்தார். ஆயினும் அழைத்து விட்டுப் பேசாமல் அனுப்பினால் முறையாக இருக்காது என்று நினைத்து அவனிடமும் பேசிப் பார்த்தார்.

சரவணனிடம் பேசியபோது இவ்வளவு அருமையான ஒரு நபரைத் தவற விட நினைத்தோமே என்று தோன்றியது.

இருவரையும் இண்டர்வியூ செய்தபிறகு இருவரையும் அரைமணி நேரம் காத்திருக்கச் சொன்னார். அரைமணி நேரம் கழித்து, பெண் பார்த்து விட்டுப் போகும் மாப்பிள்ளை வீட்டார் சொல்வது போல் தொலைபேசி மூலம் தகவல் சொல்வதாகத் தன உதவியாளர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி விட்டார்.

இருவருக்கும் ஏமாற்றம் - எரிச்சலும் கூட. 'என் இந்தக் கிழவன் இப்படி வதைக்கிறான்?' என்று சலித்துக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் போய்ச் சில நிமிடங்கள் ஆகியிருக்கும். நினைவு அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தது.

இருப்புக் கொள்ளாமல் ஜன்னலருகே போய்த் திரையை விலக்கி வெளியே பார்த்தார். கிழே தெரிந்த சாலையில் வழக்கம் போல் போக்குவரத்து அதிகமாக இருந்தது. சாலையைக் கடப்பதற்காகப பலர் காத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் சக்திவேலும், சரவணனும் கூட இருந்தனர்.

'சட்! மனதைத் திருப்பலாம் என்று வெளியே பார்த்தால், இங்கேயும் இந்த இருவருமா?' என்று சலித்துக்கொண்டே திரும்ப நினைத்தவர், எதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவராக அங்கேயே நின்றார்.

ஒரு சிலர் சாலையைக் கடக்க முயன்று போக்குவரத்தின் வேகம் கண்டு பின் வாங்கினர். அது பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்றாலும், வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு வழி விடாமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். சாலையைக் கடக்க முயலும் பாதசாரிகளை அச்சுறுத்துவதற்காகவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் வேகத்தை அதிகரித்தனர்.

சட்டென்று ஒரு நபர் முன்னால் அடி எடுத்து வைத்தார். மற்றவர்களைத் தன்னைப் பின் தொடருமாறு சைகை காட்டினார். வாகனங்களைக் கை காட்டி நிறுத்தும்படி சைகை காட்டியபடியே தயக்கமின்றி நடந்தார்.

மற்றவர்கள் அவரைப் பின் தொடர, வாகனங்கள்  வேகத்தைக் குறைத்தும், சடன் பிரேக் போட்டும் நின்றன. பாதசாரிகள் நிதானமாகச் சாலையைக் கடந்தனர்.

ராமானுஜத்துக்குத் தெளிவு பிறந்து விட்டது. ஒரு பிரச்னை எழும்போது, முனைப்புடனும், துணிவுடனும் செயல் பட்டு, மற்றவர்களை வழி நடத்தித் தன் தலைமைப் பண்பை வெளிப்படுத்திய சரவணன்தான் அவருடைய தேர்வு!

Sunday, February 7, 2016

14. மணமகளே வா!

அறைக்கதவு சத்தமில்லாமல் திறந்து மூடியது. கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான். பூமியில் கால் படாமல் நடந்து வரும் தேவதை போல் சத்தமில்லாமல்  நடந்து வந்தாள் அவள். பூரணமான முதல் இரவு அலங்காரம். மேடுபள்ளம் பார்த்து நடப்பதிலேயே கவனம் இருப்பதுபோல் தலை தொங்கி இருந்தது.

அவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். முகவாயை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். ஏராளமான பட்டுப்புடவைக்கு நடுவே இடையே கொஞ்சமாகத் தெரிந்த முகத்தின் சிவப்பு இரட்டிப்பாயிருந்தது. பெண்கள் நாணம் கொள்வது தங்கள் நிறத்தை மிகைப்படுத்தக் காட்டத்தானோ என்று நினைத்துக் கொண்டான்.

வெறியூட்டும் அழகு. ஆனால் இதை மெதுவாக, நிதானமாக, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். இரவு முழுவதும் எதற்காக இருக்கிறது?

"ஷீலா!"

"ம்..." துரத்திலிருந்து கேட்பதுபோல் அவள்  குரல் கேட்டது.

"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?"

அவள் பதில் சொல்லவில்லை. வெட்கமா? அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான்?' என்ற நினைப்பா? அல்லது 'என் அபிப்பிராயத்க்தை யார் கேட்டார்கள்?' என்று மனதுக்குள் குமுறலா?

அவன் சற்றும் எதிபாராத வகையில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களால் அவன் முகத்தில்...

ஓ! பாலசந்தர் பட நாயகி போல் மறைமுகமாக பதில் சொல்லி விட்டாள். 'தாங்க யூ!'

"எனக்கு ஒரு சந்தேகம்."

'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"முதல் இரவுக்கு இவ்வளவு அலங்காரங்கள் என்? அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன்?"

அவள் கைகளால் தன முகத்தை மூடிக் கொண்டாள். 'ரொம்பவும்தான் வெட்கப்பட வைக்கிறான்' என்று நினைத்துக் கொள்வாளோ?

மிக மென்மையான மஞ்சள் நிறக் கைகளையும், விரல்களையும் பார்த்தான். வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃ பிங்கர் என்று பெயர் வைத்தவன் ஒரு அருமையான கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது பிஞ்சு வெண்டைக் காய்களைப் படக் படக் என்று ஒடித்துத் தின்றிருக்கிறான். அது போல் இந்த விரல்களையும்...


அவள் விரல்களை இழுத்துத் தன் உதடுகளில் பதித்துக்கொள்ளத்தான் முடிந்தது.

பார்த்து ரசித்தது போதும். இனி..

அவள் சேலைத்தலைப்பை மெல்ல விலக்கினான். அவள்   மீண்டும் தன் கைகளில் முகத்தை மறைத்துக் கொண்டாள். நீல நிற ரவிக்கை அவனுக்கு நல்வரவு கூறியது. ஏராளமான இடையில் செழுமையான மடிப்புகள்.

முகத்தழகை மட்டுமே பார்த்து அவளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் எல்லா விதங்களிலுமே அவள்  ஒரு முதல் தர அழகிதான் என்ற உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான்.

இறுக்கமான கேசத்தை மடியில் பற்றி அதன் அடியைத் தேடி அலைந்தான். அவள் முதுகினுடே ஊர்ந்த விரல்கள் முதுகுக்குக் கிழே அவள் பின்னல் வந்து முடிவதைத் தொட்டு உணர்ந்தன.

இனியும் அவனுக்குப் பொறுமை இல்லை. தம்புராவின் உறையை நீக்கிச் சுருதி சேர்க்க வேண்டியதுதான்.

விடிகாலையில் அவன் கண் விழித்தபோது அவள் முகம் கழுவி உடை உடுத்தித் தன்னைச் சரி செய்து  கொண்டிருந்தாள். முகத்தில் இப்போது நாணம் இல்லை. இலேசாகக் களைப்பு தெரிந்தது.

"என்ன அதற்குள்?" என்று அவள் கையைப் பற்றினான்.

அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டாள். "பொழுது விடியப் போகிறது, தெரியும் இல்லையா? இப்போது மணி ஐந்தரை."

அவன் பெருமூச்சுடன் எழுந்தான்.கழற்றி வைத்திருந்த தன பாண்ட் பாக்கெட்டைத் துழாவியபடியே . "ரொம்ப நன்றி ஷீலா! உண்மையாகவே நேற்று இரவு எனக்கு முதல் இரவுதானோ என்று  தோன்றுகிறது. எப்படி உன்னால்  இவ்வளவு அருமையாக ..."

"ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு வகை. நீங்கள் முதல் இரவு மனைவி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அப்படி நடந்து கொண்டேன். உங்களைத் திருப்திப் படுத்துவதுதானே என் கடமை? வருகிறேன்" என்று கிளம்பினால், அவன் கொடுத்த நூரு ரூபாயைத் தன ரவிக்கைக்குள் திணித்தபடியே.

('ராணி' வார இதழ் 19/6/83இல், 'விஸ்வாமித்திரன்' என்ற புனைபெயரில் வெளியானது.)