கனமான இரும்புக் கதவைத் திறந்து, அவன் உள்ளே அடி எடுத்து வைத்தான் - அவன் அம்மா சொன்னபடி ஞாபகமாக வலது காலை முதலில் எடுத்து வைத்தான்,
இது போன்ற காம்பவுண்ட் கேட் போட்ட வீடுகளுக்குள் நுழைவது என்றாலே
அவனுக்குத் தயக்கம்தான் .
சில சமயங்களில், கேட்டை.த் திறப்பதற்கு முன்பே, வராந்தாவில்
இருந்து யாராவது “யார் வேணும்?” என்று அதிகாரமாக விசாரிப்பார்கள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்வது அவனுக்கு மிகவும்
சங்கடமாக இருக்கும்
“ஒரு சிபாரிசுக்காகத் திரு ......ஐப் பார்க்க
வந்திருக்கிறேன்” என்று வெளியில் இருந்தபடியே, உள்ளே இருப்பவர்களுக்குத் தெளிவாகக்
கேட்கும்படி எப்படி பதில் சொல்ல முடியும்?
அதிலும், பெரும்பாலானவர்கள் கேள்வி கேட்டு விட்டு, பதிலைக்
கேட்டு அறிந்து கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் செவியில்
விழுவது மட்டுமின்றி, ஏறும்படியும் பதிலளிப்பது மிகவும் கடினமான காரியம்தான்.
கேள்வி கேட்பவர்கள், பெரும்பாலும், உள்ளே வருபவரைக் கூடியவரை தடுத்து
நிறுத்துவதுதான் தங்கள் நோக்கம் என்பது போல்தான் நடந்து கொள்வார்கள்.
அப்படியே அவர்கள் உணரும்படி பதிலளித்தாலும், அதற்குக்
கிடைக்கக் கூடிய வரவேற்பைப் பற்றி ஒருவித சந்தேகமும் இல்லை.
பத்துக்கு ஒன்பது சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியே
நிற்பவரை உள்ளே வர முடியாதவாறு, அங்கிருந்தபடியே ஏதாவது சொல்லித் திருப்பி அனுப்பி
விடுவார்கள். எதுவுமே சொல்லாமல், மௌனமாகத் தங்கள் அதிப்தியை வெளிப்படுத்துவதோடு
திருப்தி அடைபவர்கள் வெகு சிலர்தான்
பல சந்தர்ப்பங்களில், ‘நாய் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்பையும், அந்த அறிவிப்பை மெய்ப்பிக்கும் வண்ணம், கதவைத் திறந்ததுமே, பாய்ந்து வெளிப்பட்டுத்
தனது எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாய்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
வேறு சில சமயங்களில், இலேசாகத் திறந்தால் கூடக் கிரீச்சிட்டு, உள்ளே நுழைபவரைக் காட்டிக் கொடுக்கும் கதவுகள், உள்ளிருந்து யாரையாவது வெளிப்படச் செய்து, கதவை ஓசைப்படுத்தி, அந்த வீட்டின் அமைதியை பங்கப்படுத்தியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் தோரணைகளைச் சந்திக்க வைக்கும்.
இவ்வாறு, காம்பவுண்ட் கேட்கள், பெரும்பாலும், அவனைப் போன்ற
மனிதர்களுக்குப் பிரதிகூலமாகவே செயல்படுவதால், அவற்றை அவன் வெறுத்தான்.
ஆயினும், அவன் ஓரளவு தயக்கத்துடனும், தாழ்வு
மனப்பான்மையுடனுமே நுழைய வேண்டி வீடுகள் எல்லாவற்றிலும் அவனுடைய ‘எதிரி’ தவறாமல்
இடம் பெற்று அவனைச் சங்கடத்துக்கு உள்ளாக்காமல் இருப்பதே இல்லை
இப்போதும், ஒரு சிபாரிசுக்காக, ஒரு பெரிய பெரிய மனிதரைப் பார்ப்பதற்காகத்தான் அவன் அந்த வீட்டில் நுழைந்தான். அதிர்ஷ்டவசமாக, அந்த வீட்டில் நாய் இல்லை வராந்தாவில் நின்று கொண்டு, அவனை யாரும் கேள்வி கேட்கவில்லை. கதவுகள் கிரீச்சிட்டு அவனைச் சங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை.
வராந்தாவில் நின்றபடியே, அவன் அழைப்பு மணியை மெல்ல
அழுத்தினான். அது ஓசையை எழுப்பியதாகத் தோன்றவில்லை. அதனால், இன்னொரு முறை சற்று அழுத்தமாகவே
.பட்டனை அழுத்தினான். இப்போது, பஸ்ஸர் திடீரென்று காட்டுத்தனமாக அலறியது.
அவன் சட்டென்று கையை இழுத்துக் கொண்டான். ஆயினும், அந்த பட்டன்
எங்கோ சிக்கிக் கொண்டு அழுந்தியபடி இருந்ததால், வெளியே மீண்டு வர மறுத்தது.
அதன் ஓசை அவனுக்கே நாராசமாக இருந்தது. உள்ளே
இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதையும், தான் வந்த காரியத்தின் மீது அந்த
நாராசம் எப்படிப் பிரதிபலிக்கக் கூடும் என்பதையும் நினைத்துப் பார்த்தபோது, அவன்
உடல் திடீரென்று வியர்த்தது.
வியர்வையில் நனைந்து அழுக்காகி விடப் போகிறதே என்று அஞ்சியபடி,
அன்று காலைதான், கரி போட்ட இஸ்திரிப் பெட்டியில், அவன் அக்கா தன் கை நோக அழுத்திக்
கொடுத்த அவன் சட்டையின் கைகளை, தன் உடல் மீது படாதவாறு, இலேசாக இழுத்து, அந்தரத்தில்
நிலைக்க வைக்க முயன்றான்.
இஸ்திரிப் பெட்டி பற்றிய நினைவு வந்ததும், இஸ்திரி போட்டுக் கொடுத்த பிறகு, அவன் அக்கா சொன்னது நினைவுக்கு வந்தது.
‘இன்டர்வியூக்கு எங்காவது
போக வேண்டுமென்றால், டெ.ரிகாட்டன் சட்டை இருந்தால்தான் நல்லது, உனக்கு வேலை
கிடைத்ததும், முதலில் ஒரு செட் டெரிகாட்டன் டரஸ் வாங்கிக் கொள்’ என்று அவள்
சொன்னதும், அதற்கு, ‘வேலை கிடைத்த பின், ஏது இன்டர்வியூ? அப்புறம் டெரிகாட்டனுக்கு
என்ன அவசியம்?’ என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டதும், அடுத்த மாதம் ‘அரியர்ஸ்’
தொகை வந்தால், அதில் கண்டிப்பாக அவனுக்கு டெரிகாட்டன் டிரஸ் வாங்கி கொடுத்து விடுவதாக
அவன் தந்தை உறுதி கூறியதும், கண நேரத்தில் அவன் நினைவில் வந்து போயின.
அந்தக் கண நேரத்தில், அவன் மனதை விட்டு அகன்றிருந்த பஸ்ஸரின் நாராச ஒலி, புயல் காற்றில் அடித்துத் திறக்கும் ஜன்னலைப் போல், மீண்டும் அவன் மனதைக்
கிழித்துக் கொண்டு பிரவேசித்தது. அதைப் பொறுக்க முடியாமல், அவன் தன் முஷ்டியால்
அந்த பட்டன் மீது ஒருமுறை வேகமாகக் குத்தினான்.
அவனே எதிர்பாராத வண்ணம், பஸ்ஸர் ஒலி நின்றது, அதே சமயம், கதவு
திறக்கப்பட்டு, பூதாகரமான சரீரத்துடன் ஒரு பெண்மணி வெளிப்பட்டாள்.
அவளுடைய உடையிலிருந்தும், பாவனைகளிலிருந்தும் அதிகார தோரணையை
வெளிப்படுத்தும் மூக்குக் கண்ணாடியிலிருந்தும், அவள்தான் அந்த இல்லத்தின் தலைவி என்பது
ஊகத்துக்கு அவசியம் இன்றித் தெரிந்தது
எலுமிச்சம் பழம் போன்ற உருண்டையான விழிகள் அந்தக் கருத்த
கண்ணாடிக்குள் இருந்து சுழன்று அவனை நோக்கி விழித்தன
“யாருப்பா நீ? அறிவு இருக்கா?”
இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து எப்படி பதில் சொல்வது என்று உடனடியாக
அவனுக்கு விளங்காததால், ஒரு கணம் மௌனமாக நின்றான்.
அந்தப் பெண்மணிக்கு திடீரென்று கோபம் வந்தது. அவன் ஏதோ
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்து விட்டது போல், அவனை அவள் ஒருவிதக் கடுமையான
இகழ்ச்சியுடன் பார்த்தாள் அவள்.
“நான் கேட்கிறது உனக்குக் காதில விழல? இந்த பஸ்ஸர்
அலறியதைக் கேட்டு உனக்கு காது செவிடாயிடுச்சா?”
திடீரென்று அவன் குரல் உயர்ந்தது.
“பஸ்ஸரை அழுத்தத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன்
அழுத்துகிறீர்கள்?...”
அதற்கு மேல் அவள் பேசியதை, அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை
‘யாராவது ஒரு எலக்ட்ரீஷியனை அமர்த்தி, இந்த பஸ்ஸரின்
சிகிச்சை சரி செய்யுங்கள்!’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது
“எங்கே வந்தே?” என்று அவள் கடைசியாக விஷயத்துக்கு வந்தாள்.
”திரு சிவ பாலசுப்பிரமணியனைப் பார்க்க வேண்டும்.”
அவள் புருவத்தை நெரித்தாள் – அந்தப் பெயரைக் கேள்விப்படாதது
போல். பிறகு, “யாரு?...ஓ...எஸ் பி எஸ் மணியா? அப்படிச் சொன்னால்தானே புரியும்?" என்றாள்.
அவனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான். கணவன்
பெயரைச் சொல்லாத பெண்கள் முன்பு இருந்தார்கள். இப்போது நாகரீகம் மாறி விட்டது. பெண்கள்
புருஷன் பெயரே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்!
உள்ளே போகத் திரும்பியவள், ஏதோ நினைவு வந்தது போல் திரும்பி,
“என்ன விஷயம்?” என்றாள்.
அவனுக்கு திடீரென்று சலிப்பு வந்தது. வேலை தேடி .சிபாரிசுக்கு
வந்திருப்பதாக ஒவ்வொருவரிடமும் பறையடித்து அறிவிக்க அவன் விரும்பவில்லை. என்ன ஆனாலும் ஆகட்டும் என்ற துணிவுடன், “அதை அவரிடம்தான்
சொல்ல வேண்டும்!” என்று அடக்கமாக, ஆனால் உறுதியுடன் அறிவித்தான்.
அவனிடமிருந்து அப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை அதிர்வால், அவள் மூக்கு மட்டும் திடீரென்று தனியாகச் சிவந்தது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது
ஏதோ சொல்வதற்கு அவள் உதடுகள் துடித்தன. ஆனால், என்ன சொல்வதென்று
தெரியாததாலோ என்னவோ, ஒரு நிமிடம் கழித்துப் பற்களை அழுத்திக் கொண்டு “உன் பெயர்
என்ன?” என்றாள்.
“பாலசுப்பிரமணியம்” என்றான் அவன். சட்டென்று ஏதோ நினைவு
வந்தவன் போல், “சுருக்கமாக, பி எஸ் மணி” என்றான்.
தான் வந்த விஷயத்தை அவளிடம் சொல்லாமல் வெற்றிகரமாக மறுத்ததும்,
சிவபாலசுப்பிரமணியம் என்ற பெயரை அவள் அறியாத பெயர் போல் காட்டிக் கொண்டதற்குப் பணிவாக
பதிலடி கொடுத்து விட்ட திருப்தியும், அவன்
மனதில் உற்சாகத்தையும், பெருமித்ததையும் கிளர்ந்தெழச் செய்தன.
அவனுடைய கேலியை அவள் கவனிக்கவில்லை. “அப்பாயின்ட்மென்ட்
வைத்துக் கொள்ளாமல், அவர் யாரையும் பார்ப்பதில்லையே!” என்றாள்.
"இல்லை. நான் வருவது அவருக்கு ஃபோன் மூலமாக
அறிவிக்கப்பட்டிருக்கும்.”
அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுப்பதா வேண்டாமா என்று
தீர்மானம் செய்ய முடியாமல், அவள் சில விநாடிகள் தயங்கினாள்.
அதற்குள், உள்ளிருந்து, “யார் அங்கே?” என்று கேட்டபடியே, அவர்
- எஸ் பி எஸ் மணி வந்து விட்டார். அவருடைய மனைவி என்று அவன் ஊகித்த அந்தப் பெண்மணி, ஏதோ விடுதலை பெற்றது போல் சட்டென்று அகன்றாள்.
“நமஸ்காரம்” என்றான் அவன், “வணக்கம் என்று சொல்வதா, நமஸ்காரம்
என்று சொல்வதா என்று சற்று நேரம் தயங்கி விட்டு.
“உட்கார்” என்றார் அவர்.
அவருடைய உபசரிப்பில் அதிகார தோரணை பரவி இருந்தாலும், அவர் அவனை உட்காரச் சொன்னது அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது
அவர் ஏதாவது கேட்பார் என்று அவன் காத்திருந்தான். ஆனால்,
அவர் தன் முன் ஏதோ ஈயோ, வண்டோ உட்கார்ந்திருப்பது போன்ற உதாசீனத்துடன், அன்றைய
தினசரியின் பக்கங்களை அலட்சியத்துடன் புரட்டி மேய்ந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு, பத்திரிகையை டீபாய் மீது
எறிந்து விட்டு, “நியூஸ் பார்த்தாயா? வேலை கிடைக்காதவர்கள் ஒரு மகாநாடு நடத்துகிறார்கள். அதற்குத் தலைமை தாங்கப் போவது ஒரு மந்திரி. அவரும் வேறு வேலை எதுவும் இல்லாதவர்தானே?
எனவே, இது முழுக்க முழுக்க வேலை இல்லாதவர்களின் மாநாடாக அமைந்து விட்டது. எப்படி?”
என்று அவனிடம் மிகவும் சுவாதீனமாகச் சொல்லிச் சிரித்தார்
முதலில் அவர் காட்டிய உதாசீனமும், இப்போது காட்டும்
சுவாதீனமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல்,
அவனுடைய மன உணர்வுகளை முற்றிலும் மாறுபட்ட லயத்துடன் தீண்டி, அவனைத் திகைப்பில்
ஆழ்த்தின
அவன் இலேசாகப் புன்னகைத்தான்
“மிஸ்டர் கணபதி உங்களுக்கு ஃபோன் செய்திருப்பார் என்று
நினைக்கிறேன்” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான்
“ஃபோனா? எதுவும் வரவில்லையே! நீ எந்த கணபதியைச் சொல்கிறாய்?”
என்று அவர் புருவத்தைச் சுருக்கினார்.
அவன் விவரம் சொன்னான்.
“ஓ, அவனா? வடிகட்டின முட்டாளாயிற்றே அவன்!” என்று தனது அபிப்பிராயத்தை பகிரங்கமாக அறிவித்தார்
அவருடைய விமரிசனம் செல்லமானதா, அல்லது இகழ்ச்சியானதா என்பது
அவனுக்குப் புரியவில்லை. அதைப் பொருத்துதான் அவரது சிபாரிசின் வலுவும் அமைந்திருக்கும் என்று உணர்ந்ததால்,
அவன் இலேசாகக் கவலை கொள்ளத் தொடங்கினான்.
அவரது சுவாதீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவன் சற்று
தைரியத்துடன், “ஏன் சார் அப்படிச் சொல்கிறீர்கள்? அவர் ரொம்ப நல்லவராயிற்றே!”
என்றான்.
அவர் ஹோஹோவென்று சிரித்தார்.
“உனக்கு சிபாரிசு பண்ணி இருப்பதால், அவன் நல்லவனாகி
விடுவானா? மை டியர் யங் மேன்! நல்லவனாக இருப்பது வேறு, முட்டாளாக இல்லாமல் இருப்பது வேறு. அண்ட், ஃபார் தட் மேட்டர், கணபதி முட்டாள் என்பதில் வேண்டுமானால் இரண்டு வித அபிப்பிராயங்கள்
இருக்கலாமே தவிர, அவன் ஒரு வடிகட்டின ராஸ்கல் என்பதில் இரண்டு வித
அபிப்பிராயங்கள் எப்போதுமே இருந்ததில்லை."
அவன் முகம் சுரத்திழந்து வருவதை ஒருவித ரசனையுடன் அவர்
கவனித்தார்
“சரி, விஷயத்துக்கு வருவோம். நீ வந்த விஷயத்தை கடகடவென்று
சொல், பார்க்கலாம்” என்றார் அவர்.
அவன் பெரிதும் ஆறுதல் அடைந்தவனாகத் தான் வந்த விஷயத்தை
விளக்கினான். “சார்! மாருதி அண்ட் கோவில் ஒரு கிளார்க் வேலை காலியாக இருக்கிறது.
நீங்கள் சொன்னால் அது கிடைக்கும் என்று மிஸ்டர் கணபதி சொன்னார்.”
“மாருதியா? அதில் எனக்கு யாரையும் தெரியாதே! சஞ்சய்
காந்தியைப் பிடிக்க வேண்டும். யாராவது எம்.பியைப் பிடித்தால்...”
“எக்ஸ்கியூஸ் மீ, சார்! நான் சொல்வது அந்த மாருதி இல்லை இங்கே மெட்ராஸில் இருக்கிற சிறிய கம்பெனி தான் சார் அது. மிஸ்டர் நாதன்தான் அதோட
புரொப்ரைட்டர்.”
“ஓ, யூமீன் தட் ரெட்ச்சட் ஒன்! நீ ஒருவன்தான் அதை கம்பெனி
என்று சொல்கிறாய். அது ஒரு ராட்டன் ஃபர்ம். என்னைக் கேட்டால், அங்கே வேலை
செய்வதை விடப் பிச்சைக்காரர் நல விடுதி எதிலாவது இருக்கலாம் என்பேன்!”
அவருடைய மனோபாவம் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை அவர் தமாஷ் பேர்வழியா
அல்லது நாசுக்காகத் தட்டிக் கழிக்கிறாரா?
“சார்! நான் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்திருக்கிறேன். எனக்கு ஏதாவது .ஒரு
வேலை இப்போது அவசியம் வேண்டும். வீட்டில் ரொம்ப கஷ்டம், சார். அக்காவுக்குக்
கல்யாணம் செய்ய வேண்டும். அப்பா பி.டபிள்யூ.டியில் கிளார்க். அடுத்த மாசம் ரிடயர் ஆகிறார், அப்புறம் நான்தான் குடும்பத்தைக் காப்பாத்தணும்.”
“த்ஸு, த்ஸு. வெரி பேட். இந்த ரிடயர்மென்ட் ஏஜை எல்லாம்
உயர்த்த வேண்டும். .ஃபிஃப்டி ஃபைவ் இஸ் ரிடிகுலஸ்லி லோ! விலைவாசி உயர்ந்தால், பஞ்சப்படியை
உயர்த்துகிறார்கள். ஆனால், சராசரி இந்தியனின் ஆயுள் உயர்ந்திருக்கும்போது,
ரிடயர்மென்ட் ஏஜை உயர்த்த வேண்டாமா? நான் கூட இன்னும் இரண்டு வருடத்தில் ரிடயர்
ஆகிறேன். ஆனால், இப்போதும் நான் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், யங்காகவும்,
ஹெல்த்தியாகவும் இருக்கேன், பார்த்தாயா?
நான் எதற்கு ரிடயர் ஆக வேண்டும். பை தி வே, நீங்கள் – மாணவர்களைச் சொல்கிறேன் –
எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிறீர்களே, இந்த ரிடயர்மென்ட் ஏஜை வைத்ததும்
போராட்டம் நடத்த கூடாதா?”
அவருக்கு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது. “சார், நான் மாணவன் இல்லையே! வேலை தேடி அலையும் இளைஞன்!”
“ஓ, ஐ ஃபர்காட்!” என்றார் அவர், வருந்தும் குரலில். “ஆல்ரைட்! நீ என்ன ஃபர்ம்னு சொன்ன? மாருதி அண் கோ! கே ஆர் நாதன்தானே? ரைட்டோ!" என்றார்.
இன்னமும் அவரிடம் நிறையப் பேசித் தனது நிலையை விரிவாக விளக்கி,
அவரிடம் பரிதாபத்தை வரவழைத்து, காரியத்தைச் சாதித்து கொள்ள வேண்டும் என்று அவனுக்குத்
தோன்றியது. ஆனால், என்ன பேசுவது என்று புரியவில்லை, அவர் வேறு “ரைட்’ கொடுத்து
விட்டார்
“நான் வரட்டுமா, சார்?”
அவன் எழுந்தான். அவர் கவனிக்கவில்லை. ஏதோ யோசித்துக்
கொண்டிருந்தார்.
“சார்!”
“ஓ, நீயா? நீ இன்னும் போகவில்லை? நான் ரைட்டோ சொல்லி அரை
மணி நேரம் ஆகி விட்டது!”
திடீரென்று அவர் சீறியது ஏன் என்பது அவனுக்குப் புரியவில்லை
”அவரிடம் சொல்கிறீர்களா, சார்?” என்று அவன் மீண்டும் ஞாபகப்படுத்தினான்
”நான் முன்பே சொல்லியாகி விட்டது.”
“சார்!”
“உன் கேள்விக்கு முன்பே பதில் சொல்லியாகி விட்டது என்று
சொன்னேன், யூ ஸ்டுபிட் யங் மேன்!”
‘ஸ்டுபிட் ஃபூல் என்று சொல்ல வந்து, கண நேர மனமாற்றத்தால்,
வார்த்தையை அவர் மாற்றியதாக அவனுக்குத் தோன்றியது
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவன் கடைசியாக கேட்டான்: “இந்த
வேலை கிடைக்குமா, சார்?”
அவர் அவன் முகத்தைப் பார்த்தார். திடீரென்று அவர் கண்களில்
பரிதாபம் சுரந்தது போல் தெரிந்தது. சட்டென்று எழுந்து, அவன் தோளில் தட்டினார்.
“டோன்ட் ஒர்ரி! காட் இஸ் கிரேட். தினமும் தபால்காரரை எதிர்பார்! நல்ல செய்தி
கண்டிப்பாக வரும்” என்றார், ஆறுதலாக.
அவன் மனதில் இருந்த ஏமாற்றம் அத்தனையும் திடீரென்று
வெளியேறி, அதில் உற்சாகம் புகுந்து கொண்டது, அவன் கையில் அவர் அப்பாயின்மென்ட் ஆர்டரே
கொடுத்து விட்டது போல். ’பின்னே அவர் சொன்னதற்கு வேறு என்ன அர்த்தம்?’
“வருகிறேன், சார்! தாங்க் யூ வெரி மச், சார்!” என்று
திரும்பத் திரும்ப அவரை வணங்கிக் கொண்டே, அவன் வெளியேறினான்.
அவன் கேட்டைத் திறந்தபோது, “காப்பி சாப்பிடுகிறாயா?” என்று
அவர் விசாரித்தார். அவன் பணிவுடன் மறுத்து விட்டு, அவர் பெருந்தன்மையை வியந்தபடி, வெளியே
நடந்தான்.
அவன் வெளியேறியதும், அவர் உள்ளே திரும்பி, டெலிஃபோனிடம்
வந்தார்
“ஹலோ!”
“ஹலோ , மாருதியா?”
“ஆமாம், சார். நீங்க?”
“நாதன் இருக்கிறானா?”
“பேசுவது யார் என்று...”
“அந்த முட்டாளைக் கூப்பிடு!”
அவர் பொறுமையின்றிக் கத்தினார்
“ஹலோ, நாதன் ஹியர்!” என்று ஐந்து வினாடிகளுக்குப் பிறகு,
எரிச்சலுடன் பதில் வந்தது
“ஏண்டா, முட்டாள்! மேஜை மேல் இருக்கும் ஃபோனை துரை
எடுத்துப் பேச மாட்டாரோ? அதற்கென்று ஒரு ஆளா?”
“யார் சார் பேசறது? ஓ, நீங்களா? குட் மார்னிங், சார்!
சௌக்கியமா?”
“உன் பிசினஸ் ஒழுங்காக நடக்கும் வரை, யார் சௌக்கியமாக
இருந்தாலும் இல்லாவிட்டாலும் உனக்கு என்ன?”
“அது சரி. என்ன சார், விஷயம்? அபூர்வமாக ஃபோன்
செய்கிறீர்களே!”
“உன் கம்பெனியில் ஒரு வேகன்சி இருக்கிறதாமே! என்னிடம் ஏன்
சொல்லவில்லை?”
‘அவரிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று நாதன் யோசிப்பது போல்,
அரை நிமிடம் மௌனம் நிலவியது
“அதற்கு என்ன, சார்?” உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது...”
“எவ்வளவு சம்பளம் கொடுப்பாய்?”
“அதெல்லாம் வழக்கம் போல் தான், சார்! ஆரம்பத்தில் 120 ரூபாய் கொடுப்போம்.
அப்புறம் திறமையைப் பொருத்து, உயர்த்திக் கொடுப்போம். உங்களுக்குத் தெரிந்தவர்கள்
யாராவது இருக்கிறார்களா?”
“உன் கஞ்சத்தனத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, 150
ரூபாய் கொடுப்பாயா?”
“பையன் யார், சார்?”
“நம் பையன்தான்.”
“உங்கள் பையன்... அவன் ஏதோ பி.காம், இல்லை? இதற்கு எஸ்.எஸ்.எல்.சி
போதுமே!”
“ஏன், பி.காம் என்றால் கசக்கிறதா? என் பையன் பி.காம்தான். இன்னும் பாஸ் செய்யவில்லை இன்னும் இரண்டு
அட்டெம்ப்ட் ஆவது ஆகும். அதுவரையில் வீட்டில் சும்மா இருப்பானேன் என்றுதான்.
நாளைக்கு அனுப்பட்டுமா?”
“நாளைக்கா?”
“என்னடா தயக்கம்? என் பேச்சுக்கு அவ்வளவுதான் மதிப்பா? நாளைக்குக்
காலை 10 மணிக்கு அங்கே
வருவான். ஓகே? சரி வச்சுடு.”
“யாரோடு பேசினீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவரது
மனைவி
”உன் உதவாக்கரைப் பிள்ளைக்கு வேலை கேட்டுத்தான் பேசினேன்!”
என்றார் அவர், சலிப்புடன்.
“கிடைத்து விட்டதா? யார் சிபாரிசு?”
அவர் ஒரு நிமிடம் யோசித்தபின், ”சிபாரிசா? சற்று முன்,
இங்கே ஒரு பையன் வந்தானே, அவன் சிபாரிசுதான்!” என்று சொல்லிச் சிரித்தார்.
முந்தைய பதிவு: அவமானம் யாருக்கு?
No comments:
Post a Comment