Monday, August 15, 2016

19. ஓரிரு சம்பவங்கள்

 பாலகிருஷ்ணன் காலையில் கண் விழித்ததும் வழக்கம் போல் நேர்ப்பார்வையில் விழும்படி மாட்டப்பட்டிருந்த அம்பாளின் படத்தைப் பார்த்தார். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். சொல்லி வைத்தாற்போல் மணி 6. கடந்த பல வருடங்களாக இந்த 6 மணி சந்திப்பு தவறாமல் நடந்து வருகிறது. 

கடிகாரத்துக்குக் கீழே மாட்டப்பட்டிருந்த காலண்டரின் மீது பார்வை தன்னிச்சையாகப் படிந்தது. தேதி 24. இருபத்து நாலு...ஏதோ நெருடுகிற மாதிரி ஒரு உணர்வு. அது என்னவென்று புரிந்து கொள்ளும் முன்பே அவர் படுக்கையிலிருந்து எழுந்து விட்டார். நேராக வாசற்கதவை நோக்கி நடந்... நின்றார். கதவுக்கடியில் பேப்பர் இல்லை.

ஐந்தரை மணிக்கெல்லாம் பேப்பர் வந்து விடுமே! இன்று என்ன? சற்றுமுன் இலேசாகத் தலைகாட்டிய உள்ளுணர்வு இப்போது மனக்கதவை இடித்துத் திறந்து கொண்டு வெளிப்பட்டது. மை காட்! இன்று 24ஆம் தேதி. இன்று பந்த்!

அவரை திடீரென்று ஒரு சோர்வு பற்றியது. இன்று அவரது நேர அட்டவணைக்கும் கதைவடைப்புதான். சாப்பாடு ஒரு பிரச்னை. முதலில் காப்பி போட்டுக் குடிக்கலாம். பிறகு யோசிக்கலா...ஓ! மை குட்னெஸ்! இன்று பால் கூட வரவில்லை. வராது. பால் வழங்கும் அரசு நிறுவனம் இன்று பால் வழங்கப் போவதில்லை என்று நேற்றே அறிவித்து விட்டது. சென்ற முறை நடந்த பந்த்தின்போது நடந்த வன்முறைகளில் அவர்கள் லாரிகள் சேதமாகி விட்டனவாம்.

அந்தப் பகுதியில் பால்காரர்கள் என்று யாரும் வருவதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வசதிகளைத் தருகின்றனவோ இல்லையோ, பழைய அமைப்புகளைத் தரை மட்டமாகி விடுகின்றன. 

அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போட்டு டிகாக் ஷன் தயாரித்துச் சர்க்கரை போட்டுக் குடித்தார். கசப்பாக இருந்தாலும் காப்பியின் மணம் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. 

பேப்பர் இல்லாததால் மீண்டும் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டார். மனதில் குருட்டு யோசனைகள் பல திசைகளிலும் ஓடின.

'வயதான காலத்தில் தனியே இருப்பது ஒரு கொடுமைதான். ஆனால் நான் தனியே இல்லை. என் மகளுடைய  குடும்பத்துடன் இருக்கிறேன். மகள்,  குடும்பத்துடன் அரசாங்கத் செலவில் உல்லாசப் பயணம் போய் விட்டாள். மாப்பிள்ளையின் விடுமுறைப் பயணச் சலுகையில் (எல்.டி.சி) மாமனாரையும் அழைத்துச் செல்ல விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. ஒரே மகளைப் பெற்று மாப்பிளையுடன் வாழும் மாமனார்களுக்குச்  சலுகை காட்டி இருக்கலாம் அரசாங்க விதிமுறைகள்! ஆனால் அப்படி இருந்தாலும் என்னால் போயிருக்க முடியுமா? டாக்டர் எனக்கு இருப்பதாகச் சொல்லும் வியாதிகளின் பட்டியல் அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை விட நீளமாக இருக்கிறதே!'

பேத்தியின் நினைவு வந்தது.

தீப்தி (என்ன ஒரு பெயர்! கேட்டால் மாடர்னாக இருக்க வேண்டும் என்பார்கள். நான் அழகாக மஹேஸ்வரி என்று வைக்கச் சொன்னேன் - அம்பாளின் பெயர்! கேட்கவில்லை.) இப்போது தீப்தி என்ன செய்து கொண்டிருப்பாள்? இப்போது அவர்கள் சிம்லாவில் இருப்பார்கள். குழந்தைக்குக் குளிர் தாங்குமோ என்னவோ! குழந்தைக்கு யார் கதை சொல்வார்கள்?

இன்று சாப்பாட்டுக்கு என்ன வழி? மகள்  ஊருக்குப் போனதிலிருந்து 'திருநெல்வேலி மெஸ்'ஸில்தான்  சாப்பிட்டு வருகிறார். (அது என்ன 'திருநெல்வேலி மெஸ்', 'திருநெல்வேலி அல்வா' என்கிற மாதிரி? இப்படியெல்லாம் ஏதாவது ஒரு ஊர்ப்பெயரை வைத்து ஏமாற்றுவது வழக்கமாகி விட்டது!) 

இன்று மெஸ் திறக்கிறானோ என்னவோ? திறக்காவிட்டால் கொலைப்பட்டினிதான். 'ஒரு சாதம் வடிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்' என்று சாவித்திரி எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் ஆண்பிள்ளைத் திமிரில் அதெல்லாம் அனாவசியம் என்று ஒதுக்கி விட்டார்.

ம்.  அவளும் போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது கூட கண்ணுக்குத் தெரியாமல் எங்காவது அந்தரத்தில் நின்று கொண்டு, "நான் எவ்வளவோ அடித்துக்கொண்டேன். கேட்டீர்களா?" என்று சொல்லிக் காட்டிக்கொண்டிருக்கிறாளோ என்னவோ!

பத்து மணிக்கு மெஸ்ஸுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

மாதங்கி பஸ்ஸிலிருந்து இறங்கியபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது.  பஸ்ஸை ஊருக்கு வெளியிலேயே எங்கேயோ நிறுத்தி விட்டார்கள். இன்று எதோ பந்த்தாம்! அதற்காக வெளியூரிலிருந்து வரும் பஸ்களை ஊருக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்த வேண்டுமா என்ன?

இதுபோல் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களை மூட்டைப்பூச்சிகள் நிறைந்த கட்டிலில் படுக்க வைத்து எழுந்து போக முடியாமல் இறுக்கமாகக் கட்டிப்போட வேண்டும் என்று நினைத்தாள். தனக்கு இப்படிப் புதுமையாக (கோணங்கித்தனமாக!) யோசனைகள்  தோன்றுவதை நினைத்தபோது உடனே சிரிப்பு வந்தது. மனச் சலிப்பைச் சற்றே குறைத்தது.

இங்கிருந்து அவள் அக்கா வீடு  இரண்டு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.நடந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை. பெட்டியை வேறு தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும். ஒரு ரிக் ஷாவுக்கோ, மாட்டு வண்டிக்கோ கூட வழி இல்லை.

மூட்டை முடிச்சுகளுடன் சகபயணிகள் தவித்துத் திணறியபடி நடக்கத்  தொடங்கியதைப் பார்த்ததும் அவள் ரத்தம் கொதித்தது. இதற்குக்  காரணமானவர்களைப் பிடித்துக்கட்டி.... (என்ன தண்டனை கொடுக்கலாம்?)

'பந்த்' என்று தெரிந்த பிறகு அவள் கிளம்பியிருக்கவே மாட்டாள். பொழுது விடிவதற்குள் வந்து சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியது தவறாகி விட்டது. வரும் வழியில் பஸ்ஸில் ஏதோ பழுது ஏற்பட்டதால் வெடித்ததால் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆகி, இப்படி வந்து மாட்டிக்கொள்ளும்படி ஆகி விட்டது.

ஒரு விதத்தில் பார்த்தால், இவ்வளவு தூரம் வந்து சேர்ந்ததே அதிர்ஷ்டம்தான். இடையில் எங்காவது மாட்டிக்கொண்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்?

அவள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு பந்த். வெளியே எங்கேயும் போக வேண்டாம். ஃபிரண்ட் வீடு என்ன வேண்டிக் கிடக்கு?"

ரமேஷ் சத்தம் போட்ட அப்பாவைப் பார்த்தான். 'எதற்கெடுத்தாலும் ஒரு சத்தம்! மெதுவாகவே ஆட்சேபிக்கத் தெரியாது இவருக்கு. வக்கீலாக இருந்திருந்தால், கோர்ட்டில் சத்தம் போட்டு நல்ல வக்கீல் என்று தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கலாம்!  தனியார் நிறுவன ஊழியராக இருந்து கொண்டு அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு வீட்டில் வந்து கத்தித் தீர்க்கிறார்!'

"இல்லை அப்பா, அடுத்த வரம் மாத்ஸ் டெஸ்ட் இருக்கு. அதுக்கு ரெண்டு பேருமா சேர்ந்து கணக்குப் போட்டுப் பாக்கப் போறோம்." 

'இப்படிக் கூசாமல் புளுகுவதைத் தவிர வேறு வழி இல்லை. விடுமுறை நாளும் அதுவுமாக  வீட்டில் இருந்தால், 'படி, படி' என்று பிடுங்கி எடுத்து விடுவாரே!'

"சரி, சரி. ஒழிஞ்சு போ. ஜாக்கிரதை!"

"பைக்கை எடுத்துக்கிட்டுப் போறேன்."

"பைக்கைத் தொட்டேன்னா காலை ஒடைச்சுடுவேன், ராஸ்கல்! புதுசா வாங்கின வண்டியைப் பாழ்  பண்ணலேன்னா ஒனக்கு மனசாகாதே!" 

"இல்லேப்பா, டவுன் பஸ் எல்லாம் ஓடலே."

"நடந்து போறது! கால் வணங்காதே! சரி, சரி, ஒழி!"

ஒழிந்தான்.

மெஸ் மூடித்தான் இருந்தது. அடைக்கப்பட்டிருந்த கதவுகள் தூரத்திலிருந்தே புலப்பட்டன. பாலகிருஷ்ணன் பலவந்தமாக இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த நம்பிக்கை நழுவிக் கீழே விழுந்தது.

இத்தனை தூரம் நடந்து வராமலாவது இருந்திருக்கலாம் என்று நொந்துகொண்டே அவர் திரும்பிப் போக யத்தனித்தபோது, மூடப்பட்ட மெஸ்ஸின் கதவுகளில் ஒன்று எதிர்பாராமல் கொஞ்சமாகத் திறந்து கொள்ள, மெஸ் முதலாளி நாராயணனின் முகம் மட்டும் வெளிப்பட்டது. 

எங்கே திறந்த கதவு மீண்டும் மூடிக்கொண்டு விடுமோ என்று பயந்தவராக, பாலகிருஷ்ணன் ஓட்டமும் நடையுமாக மெஸ்ஸை நோக்கி விரைந்தார். அவரைப் பார்த்து விட்ட நாராயணன் கையை அசைத்து அவரை வரவேற்றான். பாலகிருஷ்ணன் கதவுக்கு அருகே வந்ததும், அவர் கையைப் பிடித்து வேகமாக உள்ளே இழுத்தான். பாலகிருஷ்ணன் உள்ளே வந்ததும் கதவு மூடப்பட்டது.  

"என்ன இன்னைக்கு பந்த் இல்லையா?" என்றார் பாலகிருஷ்ணன் புதிய உற்சாகத்துடன். உள்ளிருந்து வந்த சுவையான சாப்பாட்டின் நறுமணமும், உள்ளே இருட்டில் இரண்டு மூன்று பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சியும் அவர் உற்சாகத்துக்குத்  தூபம் போட்டன.

"என்ன 'பந்த்தா' இருந்தா என்ன சார், உங்களையெல்லாம் கைவிட்டு விடுவேனா?" என்றான் நாராயணன். (ஒருநாள் வருமானத்தைத்தான் விட்டு விட முடியுமா என்ன?)

பாலகிருஷ்ணன் அம்பாளுக்கும், நாராயணனுக்கும் மனதுக்குள் நன்றி செலுத்தி விட்டுச் சாப்பிட உட்கார்ந்தார்.

மாதங்கி அந்தத் தெருமுனையில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள். இளைஞனா? - இல்லை! பையன். பதினைந்து அல்லது பதினாறு வயதுப் பையன். 

பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடப்பது அவளுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பாதி தூரம்தான் வந்திருக்கிறாள். இன்னும் பாதி  தூரம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் மலைப்பாக இருந்தது. பெட்டியைக் கீழே வைக்கச் சொல்லி மூளையிடமிருந்து உடனே உத்தரவு வராவிட்டால், உடம்பிலிருந்து கழன்று கொள்ளப் போவதாக அவளது இரண்டு கைகளும் மாற்றி மாற்றி மிரட்டிக் கொண்டிருந்தன. பெட்டியைக் கைக்குக் கை மாற்றிச் சமாளிக்கும் வேலை இனியும் நடக்காது போலிருக்கிறதே என்று அவள் மூளை கவலைப்படத்  தொடங்கியது.

'இந்தப் பையனிடம் லிஃப்ட் கேட்டால்  என்ன? என்னை விட ஐந்தாறு வயது இளையவனான இவன் பின்னால் பைக்கில் உட்கார்ந்து போவதில் ஒன்றும் தப்பில்லை.'

பைக் அருகில் வந்ததும் மாதங்கி அவனைக் கை காட்டி நிறுத்தினாள். அவன் சற்று வியப்புடன் பைக்கை நிறுத்தினான்.

"நான் தாண்டவராயன் தெருவுக்குப்  போகணும். என்னைக் கொஞ்சம் கொண்டு விட்டுடறியா?"  என்றாள் அவள் உரிமையுடன்.

"ஓ! உக்காருங்க!" என்றான் அவன் உற்சாகத்துடன்.

'உக்காருங்க அக்கா' என்று சொல்லியிருக்கலாம் என்று மாதங்கிக்குத் தோன்றியது. 

ற்ற நாட்களை விட இன்று சாப்பாடு நன்றாக இருப்பதாக பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது.

வழக்கம் போல் கப்பில் ரசம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தபோது வாசல் பக்கம் பெரிதாகக் கூச்சல் கேட்டது.

தொடர்ந்து படபடவென்று கதவு தட்டப்படும் சத்தம்.

ஆபத்தை உணர்ந்து உடல் விறைத்துக்கொள்கிற பூனை போல் நாராயணன் பரபரப்படைந்தான்.

"எல்லாரும் சட்டுனு கை கழுவிக்கங்க" என்று அவசரப்படுத்தி விட்டு, வாசல் கதவைத் திறக்கப் போனான்.

கப்பில் மீதி இருந்த ரசத்தைக் குடித்து விட்டு எழுந்திருப்பதா அல்லது உடனேயே எழுந்திருப்பதா என்று பாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, கதவை நாராயணன் இலேசாகத் திறக்க, வெளியே நின்று கதவைத்தட்டிக்கொண்டிருந்தவர்கள் பிடித்துத் தள்ளியதில் கதவு படாரென்று திறந்து கொண்டது. திமுதிமுவென்று நாலைந்து பேர் நாராயணனைத் தள்ளி விட்டு ஒடி வந்தனர். 

"ஏண்டா, ஊர் முழுக்க பந்த், நீ திருட்டுத்தனமா மெஸ்ஸா நடத்தறே?" என்று விசாரித்து விட்டு ஒருவன் தன் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் நாராயணன் தலையில் ஒன்று போட்டான். 

"டேய் சாப்பாட்டு ராமன்களா , வாங்கடா  வெளியே!" 

உள்ளே கூச்சலும் குழப்பமும் அதிகரித்து, மேசை நாற்காலிகள் சேதப்படுத்தபடத் தொடங்கியதும், பாலகிருஷ்ணன் கை கழுவும் எண்ணத்தைக் கை விட்டு, வாசலை நோக்கி ஓடினார்.

"அதோ முதலாளி ஓடறான் பாரு, பிடிங்கடா அவனை!" என்று யாரோ கூவ, "நான் முதலாளி இல்லை" என்று எழும்பாத குரலில் அவர் கூவ முயன்றபோதே பாலகிருஷ்ணனின் ரத்தக் கொதிப்பு ஏறியது.

"பிடிடா, பிடிடா" என்று யாரோ கூவ, ஒருவன் இலக்கின்றித் தன்  கையிலிருந்த கட்டையைச் சுழற்ற, அது பாலகிருஷ்ணன் கழுத்தைத் தாக்கியது. வாசற்படியின் மீது நின்றுக்கொண்டிருந்தபோது அவர் மீது விழுந்த அந்த அடி அவரை நிலை குலையச் செய்தது. கொஞ்சம் தடுமாறி, கொஞ்சம் இடறி, கொஞ்சம் சமாளித்து, கொஞ்சம் தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்தார். மெஸ்ஸுக்கு வெளியில் இருந்த பாதையின் சரிவில் உருண்டு சாலைக்குத் தள்ளப்பட்டார். 

சாலையில் போக்குவரத்து இல்லாத தைரியத்திலும், பின்னால் ஒரு இளம்பெண் உட்கார்ந்திருக்கும் உற்சாகத்திழும் கொஞ்சம் வேகமாகவே பைக்கை ஓட்டி வந்த ரமேஷ், அந்தக் குறுகிய தெருவில் திரும்பியபோது அவனுக்குச் சில அடிகள் முன்பு திடீரென்று ஒரு வயதானவர் ஒரு கட்டிடத்தின் வாசலிலிருந்து உருண்டு சாலையில் விழுவதைக் கவனித்ததும், சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தவன், பைக்கை ஒடித்துத் திரும்பிச் சாலையின் மையப்பகுதிக்குச் செல்ல முயன்றான்.

வேகத்தைக் குறைக்காமல், பதட்டத்தில் பைக்கை அவசரமாக ஒடித்துத் திருப்பியதில், வண்டி வளைந்து வளைந்து ஒடி சாலையின் எதிர்ச்சாரியில் இருந்த குப்பைத்தொட்டியின் மீது மோதி நின்றது. பின்னால் உட்கார்ந்திருந்த மாதங்கி வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள். அவள் தலை எதோ கடினமான பொருளின் மீது மோதிய நிலையில் கீழே விழு ந் தாள். 

ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோதே மெஸ்ஸிலிருந்து நாலைந்து பேர் கையில் கட்டைகளுடன் அவனை நோக்கி ஒடி வந்தனர். 

"ஏண்டா, பந்த் அன்னைக்குக் காதலியோடு ஊர் சுத்த வேண்டியிருக்கா  உனக்கு?" என்றபடியே ரமேஷின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் ஒருவன்.

"சார், அவங்க என் அக்கா மாதிரி சார்!" என்று அலறினான் ரமேஷ்.
     
நினைவு தப்பிக்கொண்டிருந்த மாதங்கிக்கு  இது காதில் விழுந்ததும் எதோ ஒரு திருப்தியில் அவள் உதடு விரிய, அந்த உணர்விலேயே மயங்கிப் போனாள்.

"சின்னப்பையன்கிட்ட என்னடா பேச்சு?" 

"அவன் வண்டியைக் கொளுத்தி விட்டுட்டாப்  போச்சு" என்றான் ஒரு கர்மவீரன். மற்றவர்கள் இந்த யோசனைக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தார்கள். 

"ஐயையோ! வேண்டாம் சார், விட்டுடுங்க!" என்று ரமேஷ் அலறியது வியர்த்தமாகியது. 

பைக்கின் மீது எழுந்த ஜ்வாலை ரமேஷின் வயிற்றுக்குள் பாய்ந்தபோது, மனதில் அவன் அப்பா வந்து '"கிளம்பும்போதே சொன்னேனே கேட்டியா?" என்றார். 
பாலகிருஷ்ணன் எங்கேயோ பறந்து கொண்டிருந்தார். அழுத்தம் மிகுந்து ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொள்ள, ரத்தத்தின் வேகம் இதயத்தை அழுத்தி நினைவுகளை வேகமாக வெளியே விரட்டிக்கொண்டிருந்தது. இறக்கப்போகிறோம் என்ற நிச்சயமான உண்மை அதிர்ச்சியையம் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. 

'நான் இப்போது செத்தால் எனக்கு கொள்ளி வைக்கக்கூட யாரும் இல்லை. என் மகள் ஊரில் இருந்தபோது இது நடந்திருக்கலாம். ஆனால் என் மகள்  ஊரில் இருந்திருந்தால் நான் என் இந்த மெஸ்ஸுக்கு வந்து மாட்டிக்கொண்டிருக்க...இப்போது நான் எங்கே இருக்கிறேன்? இந்தாப்பா..சூடா ஒரு கப் ரசம்! 

கடைசியாக அவருக்கு நினைவு இருந்தபோது அவர் பேத்தி தீப்தி அவரிடம் வந்து, "தாத்தா! பாம்பா மாறின ராஜகுமாரன் அப்புறம் என்ன ஆனான் தாத்தா?" என்று கேட்டாள்.

ன்று இரவு தொலைக்காட்சியில்  செய்தி படித்தபெண்மணி, "ஓரிரு சம்பவங்களைத் தவிர, பொதுவாக இன்று பந்த் அமைதியாகவே நடந்தது" என்று புன்னகை மாறாமல் அறிவித்தாள் . 

(1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டது)


Friday, August 5, 2016

18. கிண்டி வந்து விட்டது!


ராமரத்தினத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. எவ்வளவுதான் கோபமாயிருந்தாலும் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. முப்பது வருட தாம்பத்தியத்தில் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்தது இதுதான் முதல் தடவை.

இந்தத் தடவை மட்டும் ஏன் அவர் அவளை அடிக்க வேண்டும்? அப்படி அவள் என்ன சொல்லி விட்டாள்? 'உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு இந்த முப்பது வருடமாக நான் எதைக் கண்டேன்?' என்று எல்லா மனைவிமார்களும் மனப்பாடம் செய்வதுபோல் ஒப்பிக்கும் அதே நான்சென்ஸ்தானே?' ஆனால் அதை நான்சென்ஸ் என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர் ஏன் உணர்ச்சி வசப்பட்டார்?

சம்பவம் முழுவதும் அவர் கண்முன் நிழலாடியது.

அவள் அப்படிச் சொன்னதும் அவருக்குக் குபீரென்று கோபம் பொங்கி எழுந்தது. அவரை அறியாமலேயே அவரது கை அவள் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது. 

சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சி அடைந்த ருக்மிணி அழக்கூட மறந்தவளாக விழிகள் பிதுங்க விழித்தாள். 

அப்புறம்..அப்புறம்.. அதை நினைக்கவே அவருக்கு அவமானமாக இருந்தது.

"உன் மனதில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய், நாயே?"

சே! 'ருக்கு,' 'ருக்கு' என்று ஆசையாக அழைத்த அதே நாவால் 'நாயே' என்று அவளை அழைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது?

இனம் புரியாத ஒரு உணர்ச்சியில் அவர் தன் வாயில் அடக்கி வைத்திருந்த புகையிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினார் - தாம் ஓடும் ரயிலில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து.

"யாருப்பா அது புகையிலைச் சாத்தை வெளியில துப்பறது? அறிவு கெட்ட..."

அதற்குப்பின் வந்த வசை மொழியில் அவர் கவனம் நிலைக்கவில்லை.

ருக்கு, ருக்கு! என்னை மன்னித்து விடு. ஏதோ கோபத்தில்....

தன் செய்கையை உணர்ந்த மறு கணமே அவர் வாய் மூடி மௌனியானார்.

ருக்மிணி அவரைப் பார்த்த பார்வையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனையோ முறை அவள் அவரைக் கோபத்துடன் பார்த்திருக்கிறாள்.ஆனால் ஒரு முறை  கூட இது போல இகழ்ச்சியாகப் பார்த்ததில்லை.

"ஓ! உங்களுக்கு வெறி அந்த அளவுக்கு ஏறிடுச்சா? என்ன சொன்னீங்க? நாய்..நாய்.  ஆமாம். நான் நாய்தான். இந்த நாயோடத்தானே முப்பது வருஷம் குடித்தனம் நடத்தி  மூணு பெண்களையும் மூணு பிள்ளைகளையும் பாரபட்சம் இல்லாமல் பெத்து வச்சிருக்கீங்க? இப்பதான் நான் நாய்னு உங்களுக்குத் புரிஞ்சுதோ? ஏன் நாய்னா உங்களுக்கு பிடிக்காதோ? ஒருவேளை நான் குதிரையா இருந்திருந்தா உங்களுக்குத் பிடிச்சிருக்குமோ என்னவோ? பேசாம இந்த நாயை அடிச்சு விரட்டிட்டு ஒரு குதிரையைக் கல்யாணம் பண்ணிக்கங்களேன்!"

நாக்கைச்  சாட்டையாகச் சுழற்றி ஒவ்வொரு வார்த்தையாலும் அவரை விளாசி விட்டு அவள் விம்மி அழ ஆரம்பித்தாள்.  

ராமரத்தினம் கோபத்திலும் இயலாமையிலும்  துண்டை உதறி வீட்டுக் கிளம்பியவர்தான். 

நிறைய பேர் இறங்கினார்கள். அதை விட அதிகமான பேர் ஏறினார்கள். ரயில்பெட்டியில் நெரிசல் அதிகமாகியது.

ராமரத்தினம் நினைவுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வெளியே எட்டிப் பார்த்தார்.

எழும்பூர்.

ஏதோ ஒரு பிளாட்பாரத்திலிருந்து ஒரு ரயில் பெரிதாக ஊதிவிட்டுக் கிளம்பியது.

'ஒருவேளை, ருக்கு கோபித்துக்கொண்டு  ஊருக்குப் போயிருப்பாளோ?'

'சே  சே ! அவள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் இல்லை. அத்துடன் அவளிடம் பணம் எது?'

அன்று காலை சண்டையே  பண விவகாரத்தில்தான் ஆரம்பித்தது. அவர் அவளுடைய இரட்டை வடச் சங்கிலியைக் கேட்கப்போய்தான்  அவள் பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவுதான் நினைவிலிருந்து அகற்ற முயன்றாலும், அன்று காலை நடந்த நிகழ்ச்சிகள் அவர் மனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.

"எதுக்கு சங்கிலி?" அவள் குரலில் எவ்வளவு ஆக்ரோஷம்!

அவரும் கொஞ்சம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கலாம்!

"அதைப்பத்தி உனக்கென்ன? அடக்கமான பொண்ணா லட்சணமா கேட்டவுடன்  கழட்டிக் கொடுப்பாயா..."

"புருஷனுக்கு ஏத்தாப்பலத்தானே பொண்டாட்டியும் இருக்க முடியும்?"

"ஒனக்கு வாய் ரொம்ப நீளமாய்க்கிட்டே வருது!" 

"சிலருக்கு வாய் நீளம், சிலருக்குக்  கை நீளம். நீங்க பணம் கட்டற குதிரைகளுக்குக் கொஞ்சம் கால் நீளமாக இருந்திருக்கலாம்!"

"ஷட் அப்! யாரைப் பாத்துக்க கை நீளம் னு சொல்றே?"

"நான் உங்களைத்தான் சொன்னேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? போன வாரம் எனக்குத் தெரியாம பீரோவில் இருந்த வெள்ளி டம்ளரை எடுத்துக்கிட்டுப் போனீங்களே, அது ஞாபகம் வந்துடுச்சோ?"

அப்போதே அவர் கையை ஓங்கி இருக்க வேண்டியவர்தான். காரியம் ஆக வேண்டுமே என்பதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

"இதோ பார். நீ எனக்குச் சொந்தம். நீ பிறந்த வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வந்த பொருள்களும் எனக்குத்தான் சொந்தம். நான் உன்னைக் கேட்டுத்தான் எதையும் எடுத்துக்கிட்டுப் போகணும்னு அவசியம் இல்லை. இப்போ சங்கிலியைக் கழட்டிக் கோடு சீக்கிரம். நேரமாச்சு."

"நேரம் ஆனா  ஆகட்டுமே! நீங்க ஓடினா, அங்கே உங்க குதிரையும் ஓடிடுமோ? அது அசைஞ்சு அசைஞ்சு நடந்து கடைசியாத்தானே வரப்போகுது!"

"உஸ்ஸ் .. என் பொறுமையைச் சோதிக்காதே!"

சட்டென்று அவள் முகம் இறுகியது. "இங்க பாருங்க. உங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்குத் தயாரா நிக்கறாங்க. மூணாவது பொண்ணும் இன்னைக்குக் காலையிலே தயாராயிட்டா. இன்னிக்கு உங்க ஞாபகம் எல்லாம் இங்கே இருக்காதுங்கறதுனாலதான் இதை உங்க கிட்டே சொல்லலே. இன்னிக்கு நீங்க ரேசுக்குப் போக வேண்டாம், இன்னியிலிருந்து போக வேண்டாம்."

அவர் பொறுமை எல்லை கடந்தது. அவர் மனைவி நாசூக்காகத் தெரிவித்த தகவல் அவரிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சங்கிலியை எடு, சீக்கிரம்!"

"முடியாது."

"என்ன?"

அப்போதுதான் அவள் அதைச் சொன்னாள் . "உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு..."

"நான்சென்ஸ்."

"நான் எனக்குன்னு எதையும் கேக்கல. நம்ம பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நீங்க எதையும் சேர்த்து வைக்கல. இருந்ததையும் துடைச்சதுதான் மிச்சம். இந்தச் சங்கிலி ஒண்ணுதான் மிச்சம் இருக்கு. இதை மட்டும் வச்சிக்கிட்டு எதையும் செய்ய முடியாதுங்கறது எனக்குத் தெரியும். வெள்ளத்திலே அடிச்சுக்கிட்டுப் போனாலும் கையில புடிச்சுக்க சின்னக் கட்டையாவது இருந்தாத்தான்  ஒரு ஆறுதலும் நம்பிக்கையும் இருக்கும். அது மாதிரிதான் இந்தச் சங்கிலி. இதைக் குடுக்க மாட்டேன்."

இப்போது நினைத்துப் பார்த்தபோது ருக்மிணி தப்பாக எதுவுமே சொல்லவில்லை என்று தோன்றியது. மனைவி தனக்கு  உபதேசம் செய்வதாவது என்ற ஆண்பிள்ளைத் திமிரினாலும், அவள் நகையைக் கொடுக்க மறுத்த ஆத்திரத்தினாலும்தான் அவர் கையை ஓங்கி விட்டார்.

அவருக்குக் கை நீளம் என்று அவள் குத்திக் காட்டியது எவ்வளவு உண்மை - அவள் வேறொரு அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும்!

வண்டி மீண்டும் நின்றது. சேத்துப்பட்டு.  அடுத்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி.

கையிலிருந்த ரேஸ் டிப்ஸ் புத்தகத்தைப் பார்த்தார்.

ருக்மிணி சங்கிலியைக் கொடுக்க மறுத்து விட்டாலும், அவர் கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரம் கை கொடுத்தது. அது கூட ருக்மிணியின் அப்பா போட்டதுதான்!

பிராட்வேயில் அவர் வழக்கமாக அடகு வைக்கும் கடையில் அறுபது ரூபாய்தான்  கிடைத்தது. ரேஸ் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பதாகச் சொல்லிக்கொண்ட அவருடைய அலுவலக நண்பர் கேசவமூர்த்தியிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு  கோட்டை ஸ்டேஷனில் ரயில் ஏறி விட்டார்.

டிப்ஸ் புத்தகத்தை அவர் கண்கள் வெறுமையாக நோக்கிக்கொண்டிருந்தன. அதை அவர் பலமுறை படித்து மனப்பாடம் செய்தாகி விட்டது. 'ஹெலன் ஆஃப் டிராய்',' ப்ளூ மூன்' இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அவருடைய பிரச்னை.

இந்த இரண்டு குதிரைகளில் ஒன்று இன்று நிச்சயம் ஜெயிக்கும். அவர் இன்று ஜெயிக்காமல் விடப்போவதில்லை.

இத்தனை வருடங்களாக ஒருமுறை கூட அவர் பணம் கட்டிய குதிரை வெற்றி பெற்றதில்லை. இன்றுமா அப்படி ஆகி விடும்? 'முயற்சி வெற்றி பெறும்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!  'சூதாடக்கூடாது' என்று கூடத்தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.  ஆனால் இது சூதாட்டமா? சே! இதென்ன குழப்பம்!

டிப்ஸ் புத்தகத்தை மூடி வைத்தார். குதிரைகள் ஓடும் தோற்றமும், ருக்மிணியின் ஆக்ரோஷமான முகமும் ஒருங்கே அவர் கண் முன் நின்றன.

பாவம் ரூக்மிணி! அவளும்தான் இத்தனை வருடங்களாக எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள்! அவர் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் அவள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறாள் என்பது அவருக்கு ஒரு புரியாத புதிர்தான்.

காலையில் அவள் சொன்னதெல்லாம் மீண்டும் அவர் நினைவுக்கு வந்தது. மூன்று பெண்கள்! அவர்களுக்கு அவர் என்ன வழி செய்யப் போகிறார்?

திடீரென்று அந்தப் பிரச்னை அவர்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. இத்தனை நாள் - ஏன் இன்று காலை வரை, சற்று முன் வரை கூட அவரால் எப்படி இத்தனை அலட்சியமாக இருக்க முடிந்தது?

கடவுளே! இத்தனை வருடங்களாகக் குதிரைப் பந்தயம் ஆடியதில் ஒரு முறையாவது அவருக்கு ஜாக்பாட் விழுந்திருக்கக்கூடாதா?

இதுவரை ரேசுக்குப் போனதில் அவர் எத்தனை ரூபாய் தோற்றிருப்பார்? பத்தாயிரம் ரூபாய் இருக்குமா அல்லது ஒரு லட்சம் ரூபாயாய்க் கூட இருக்குமோ? அவரால் அனுமானிக்க முடியவில்லை.

எது எப்படியானாலும் இதுதான் அவர் விளையாடப்  போகிற கடைசி ரேஸ். இதில் அவர் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. 'ப்ளூமூன்' மீது சத்தியம். சே! சத்தியம் செய்யும்போது கூட ரேஸ் குதிரை நினைவுதானா? இப்படிக் குதிரைகள் நினைவாகவே இருந்தால் ரேஸ் பழக்கத்தை விடுவது எப்படி?

ஆனால் இதுவரை ஒருமுறை கூட அவர் இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று நினைத்ததில்லை. இன்று இந்த நினைவு வந்ததே ஒரு முன்னேற்றம்தான்.

சட்டென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

இன்றே இந்தப் பழக்கத்தை விட்டு விட்டால் என்ன? இன்று மட்டும் என் ரேசுக்குப் போக வேண்டும்?

ருக்மிணியின் கண்ணீர் வடிந்த முகம் அவர் நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தாவணி போட்டுக்கொண்டு நின்ற மூன்று 'குதிரைகளின்' ஏக்கமான முகங்கள்!

அவர் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

ஆமாம். அவர் இன்று ரேசுக்குப் போக போவதில்லை.

தன்னுடைய இந்த முடிவு ருக்மிணிக்குத் தெரிந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்!

ரயில் பாலத்தைத் தாண்டி நுங்கம்பாக்கம் ஸ்டேஷனை நெருங்கி வேகம் குறைந்தது.

ராமரத்தினத்தின் மனதில் எண்ண ஓட்டங்கள் அதிகரித்தன.
'கிண்டியில் இறங்கி குரோம்பேட்டைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு அடுத்த ரயிலில் குரோம்பேட்டை போய்விட வேண்டும்.'

குரோம்பேட்டையிலிருந்து பீச் ஸ்டேஷன் வரை ரிட்டர்ன் டிக்கட் வாங்கியிருப்பது நினைவு வந்தது.

'கிண்டியில் இறங்க வேண்டியதில்லை. இறங்கினால் சபலம் தட்டி ரேசுக்குப் போனாலும் போய் விடுவேன்! கிண்டியில் இறங்காமல் நேரே குரோம்பேட்டைக்குப் போய் விட வேண்டும்'.

ருக்மிணிக்கு மல்லிகைப்பூ மிகவும் பிடிக்கும் என்பது எங்கேயோ புத்தகத்தில் படித்த விஷயம் போல் நினைவுக்கு வந்தது.

 'குரோம்பேட்டை ஸ்டேஷனில் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு  போக வேண்டும். அதை நானே அவள் தலையில் வைத்து விட  வேண்டும். இத்தனை வருட மணவாழ்க்கையில் ஒருநாள் கூட நான் எனது அன்பை இதுபோன்ற செயல்களால் வெளிப்படுத்தியதில்லை. ருக்மிணி எவ்வளவு மகிழ்ந்து போவாள்!'

ந்திரனுக்குக் கால் கடுத்தது. இன்று பார்த்து ரயிலில் ஒரே நெரிசல். இந்த ஞாயிற்றுக்கிழமையில் ஏன்தான் ரேஸ் வைக்கிறார்களோ?

அவனுக்குப் பின்னே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் இரண்டு குதிரைகளில் எது ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தார்கள். குதிரைப் பந்தயத்தில் தோற்பதோடு இந்தப் பந்தயத்தில் வேறு தோற்க வேண்டுமா?

இன்று காலை முதலே அவனுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. எழுந்ததுமே  தலைவலி.பால்காரன் வரவில்லை என்று சொல்லி அம்மா காப்பிக்குக் கை விரித்து விட்டாள். இன்று பார்த்துத்தானா பாங்க் கிளார்க் வேலைக்கான தேர்வு வேறு இருக்க வேண்டும்?

ஒன்பது மணிக்குத் தேர்வு. ஏழரை மணிக்கே பழைய சோற்றைத் தின்று விட்டுக் கிளம்பி விட்டான்.  பையன் பாங்க் வேலைக்காகப் பரீட்சை எழுதப் போகிறானே, வாய்க்கு ருசியாக எதாவது சிற்றுண்டி செய்து கொடுக்க வேண்டும் என்று அம்மாவுக்குத் தோன்றவில்லை! தினமும் சுறுசுறுப்பாக இயங்கும் அம்மாவுக்கு கூட ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஒரு சோம்பல் வந்து விடுகிறது. தினமும் ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள், இன்று ஏழு மணிக்கு அவன் எழுப்பியபிறகுதான் எழுந்தாள்.

பல புத்தகங்களையும், கைடுகளையும் படித்து அவன் தன் மூளையில் ஏற்றிக்கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் எங்கே மறந்து விடுமோ என்ற பயத்தில் புத்தகத்தைப் படித்துக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, அவனைத் தேர்வு எழுத விடக்கூடாது என்று தீர்மானித்தவர் போல் ஒரு கார்க்காரர்  அவன் மீது மோதுவது போல் வர, ஒரு லாங் ஜம்ப் செய்து அவரது முயற்சியை முறியடித்தான்.

ரயில் நிலையத்தில் அவன் மாடிப்படியில் வேகமாக இறங்கிக்   கொண்டிருந்தபோதே அவன் போக வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அவன் மூச்சிரைக்க ஒடி வந்து அதில் தொற்றிக்கொண்டபோது, அவன் கையைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளிய முரட்டு ஆசாமி அவனது அவசரத்தைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் "ஏம்ப்பா! உன் அப்பாவுக்கு நீ ஒரே பையனா, இல்லை நீ போய் விட்டாலும் வேறு யாராவது இருப்பார்களா?" என்று எகத்தாளமாகப் பேசியதில் அவன் படபடப்பு* அதிகமாகி விட்டது.

போகும்போதுதான் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், வரும்போதும் அப்படித்தானா? தேர்வு எழுதிய பள்ளி வகுப்பறையின் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்ததில் உடல் முழுவதும் வலி எடுத்தது. (பாவம், பள்ளி மாணவர்கள் தினமும் ஆறு ஏழு  மணி நேரம் எப்படித்தான்இந்தக் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்திருக்கிறார்களோ?ஒருவேளை அந்த பெஞ்ச்சுகள் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும், வயதிலும், உருவிலும் சிறிய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்!

போதும் போதாதற்கு, தேர்வை அவ்வளவு நன்றாக எழுதவில்லையோ என்ற மனக்கிலேசமும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் ரயிலுக்காகபி பதினைந்து நிமிடங்கள் நின்றதால் ஏற்பட்ட கால்வலியும் சேர்ந்து கொள்ள, சற்று நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் சானடோரியத்தில் இறங்கி வீட்டுக்கு இருபது நிமிடங்கள் நடக்க முடியும்.

சந்திரன் பெட்டி முழுவதும் நோட்டமிட்டான். அவனுக்குக் கொஞ்சம் தள்ளி ஜன்னலோர சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர் கையில் ரேஸ் புத்தகத்துடன் அரைக்கண் மூடியபடி அமர்ந்திருந்தார். ரேஸில் தான் பணம் கட்டிய குதிரை ஜெயிப்பது போல் கனவு கண்டு கொண்டிருப்பார் போலும்! அவர் கிண்டியில் இறங்கி விடுவார். அப்போது காலியாகும் சீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவரது பெஞ்ச்சுக்கு அருகில் வந்து நின்றான். வண்டி சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது. கிண்டியில் இறங்க வேண்டிய சிலர் சீட்டிலிருந்து எழுந்து வாசல் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். நிறையே பேர் இறங்கப் போவதாகத் தோன்றியது. தான் முதலில் நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தால் அங்கேயே இடம் கிடைத்திருக்கும். இங்கே வந்திருக்கவே வேண்டாம்.

வண்டி கிண்டி ஸ்டேஷனை நெருங்கி விட்டது. ஆனால் அவர் இறங்க யத்தனித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தூங்கி விட்டாரோ? பாவம் ஸ்டேஷனை விட்டு விடப்  போகிறார்.

சந்திரன் அவர் அருகில் நின்று அவரை உலுக்கி எழுப்பினான். "சார் கிண்டி வந்து விட்டது. இறங்கவில்லையா?"

கனவிலிருந்து விழித்தவர் போல் ராமரத்தினம் கண் விழித்தார். "ஆமாம்..கிண்டி..ஓ!.." என்று முனகிக்கொண்டே சீட்டிலிருந்து எழுந்து அவசரமாக இறங்கி வாசலை நோக்கி விரைந்தார்.

காலியான சீட்டில் சந்திரன் உட்கார்ந்து கொண்டான். வண்டி கிண்டியிலிருந்து கிளம்பியபோது அவர் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்ததைப்  பார்த்தான்.

*இன்றய இளைஞர்களுக்கு 'டென்ஷன்' என்றால்தான் புரியும்!

(1973ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.)