Thursday, January 6, 2011

3. நோக்கம்

அழைப்பு மணிச் சத்தம் கேட்டு, சுந்தரம் கதவைத் திறந்தார். வாசலில் இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.

"வணக்கம். உங்கள் கார் விற்பனைக்கு இருப்பதாகப் பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தீர்களே?"

"ஆமாம். உள்ளே வாங்க." சுந்தரம் அவர்களை உள்ளே அழைத்து வந்து சோஃபாவில் உட்கார வைத்தார்.

"காரைப்  பாத்தீங்களா?"

"வாசலில் நிக்குதே, அதுவா?"

"ஆமாம்."

"அப்படியானா இன்னும் விற்பனை ஆகலையா?"

சுந்தரம் வியப்புடன், "இல்லை...ஏன் சந்தேகமாக் கேக்கறீங்க?" என்றார்.

"இல்லை, இல்லை. உங்க வீட்டு கார் ஷெட் காலியா இருந்ததைப் பார்த்தோம். அதனால, வாசல்ல நிக்கற கார் வேற யாரோடதோன்னு நெனச்சோம்."

"இப்போதான் வெளியே போயிட்டு வந்தேன். மறுபடி வெளியே போகணும். அதனால்தான் கார் வெளியே நிக்குது."

"ஒ அப்படியா?.... இதுவரைக்கும் நெறைய பேர் வந்து காரைப் பாத்துட்டுப் போயிருப்பாங்களே?"
"உம்...ஏழெட்டு  பேர் வந்து பாத்துட்டுப் போனாங்க..."

"ஏதாவது முடிவு ஆயிருக்கா?"

சுந்தரம் கொஞ்சம் எரிச்சல் அடைந்தவராக, "அதைப் பற்றி என்ன? உங்களால எவ்வளவு விலை கொடுக்க முடியும்னு சொல்லுங்க" என்றார்.

"அதில்லை...உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா...காரை எதுக்காக விக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்னு  நெனக்கறேன்." சுந்தரம் சிரமப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டார்.

"தப்பா நினைக்க வேண்டாம். இந்தக் காரை வித்துட்டு நீங்க வேற கார் வாங்கப் போறீங்களான்னு தெரிஞ்சுக்க விரும்பறோம்!"

"நீங்க என் காரை வாங்க வந்திருக்கீங்களா, அல்லது வேற காரை என்கிட்டே விக்கறதுக்காக வந்திருக்கீங்களா?"

"அதாவது சார்...காரை வித்ததுக்கு அப்புறம் உங்க கார் ஷெட் காலியாகத்தானே இருக்கப் போகுது? அதை எங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தீங்கன்னா, அதில ஒரு நர்சரி ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் ...அதுக்காகத்தான்.!"

(ஆனந்த விகடன்  6.1.1991 இதழில் பி.ஆர்.எஸ். என்ற என் சுருக்கமான பெயரில் வெளியானது.) 

No comments:

Post a Comment