Monday, February 9, 2015

12. அடுத்த மாதம்

ந்த பாங்க் சற்று உயரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட அரைமாடி உயரம். நீளமான படிக்கட்டுக்கள். உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டும் அளவுக்கு விஸ்தாரமாக, காற்றோட்டமாக இருந்தன. "இங்கே யாரும் உட்காரக் கூடாது" என்று ஒரு பலகை எச்சரித்தது. படிக்கட்டுகளுக்கு மேல் கண்ணாடிக் கத்வுகளுக்குள் தெரிந்த பாங்க் அலுவலகத்தைப் பார்த்து அவன் பெருமூச்சு விட்டான்.

அந்தப் படிகளில் ஏற வேண்டிய சிரமத்தை நினைத்து அல்ல. படிகளில் ஏறி, உள்ளே சென்று, மானேஜரைச் சந்தித்து அவன் பேச வேண்டிய விஷயத்தை நினைத்து. இதுவரை எட்டு பாங்க்குகளுக்குப் போய் வந்தாகி விட்டது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான சம்பாஷணைகள், ஒரே மாதிரியான ஆச்சரியம், ஒரே விதமான அனுதாபப் பார்வைகள், கைவிரிப்புகள், கண்ணியத் திரைக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும் கேலியான சிந்தனைகள். 'சுத்தப் பைத்தியக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே!'

இந்த பாங்க்கில் என்ன சொல்லப் போகிறார்களோ? இங்கே மட்டும் புதிதாக வேறென்ன சொல்லிவிடப் போகிறார்கள்?

அன்றைக்கு சனிக்கிழமை  என்பது அவனுக்கு நினைவில்லை. வேலைக்குப் போய்க்கொண்டிருந்தால் வார விடுமுறை தினத்தை முன் அறிவிக்கும் சனிக்கிழமை அவன் கவனத்தில் இருந்திருக்கும். எங்கோ வெளியே போய் விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த பியூன் நேரம் 11-05ஐ நெருங்கிவிட்டதைக் கண்டு பதைத்து அவசரமாக ஷட்டரை இறக்கித் தரைக்கு மேல் ஓரடி இடைவெளி விட்டு நிறுத்தினான். கதவை மூடுவதற்குள் ஒரு விநாடியில்  தன்னை முந்திக்கொண்டு குனிந்து கடைசி 'வாடிக்கையாளராக' உள்ளே நுழைந்து விட்ட இவனை எரிச்சலோடு பார்த்து ஒருமுறை சூள் கொட்டிவிட்டுப் போனான்.

கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின்னே திடீரென்று 'சுறுசுறுப்பு' உற்பத்தியாகியது. கவுண்ட்டர்கள் மூடப்பட்டும், பாஸ் புத்தகங்கள் விசிறியடிக்கப்பட்டும், லெட்ஜர்கள் படபடவென்று கதவுகளைப்போல் அறைந்து சாத்தப்பட்டும், இரண்டு மணி நேரக் 'கடின' உழைப்பின் ஆயாசங்கள் சோம்பல் முறிப்புகளிலும், கொட்டாவிகளிலும், 'அப்பாடா'க்களிலும் வெளிப்பட்டன. 'அக்கவுண்ட்டை'  'க்ளோஸ்' பண்ணி விட்டால் , பிறகு திங்கட்கிழமை காலை பத்து மணி வரை விடுதலை!

அவன் பரபரப்புடன் மானேஜரின் அறையை நோக்கிப் போனான், உள்ளே - நல்ல வேளையாக - மானேஜர் இருந்தார். அவருடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். மேஜை மீதிருந்த காப்பி முலாம் பூசிய கண்ணாடித் தம்ளர்களும், உரத்த சிரிப்புகளும் உள்ளே இருந்தவர்கள் மானேஜருக்கு நெருக்கமானவர்கள் என்று உணர்த்தின.

அவன் அறைக்கு வெளியே ஓரமாக நின்றான். பாங்க் மூடுகிற நேரத்துக்கு வந்திருக்கும் தன்னால்  மானேஜரைப் பார்க்க முடியுமா என்ற கவலை இலேசாக எழுந்தது. அவரைப் பார்த்தால் மட்டும்  என்ன பலன் கிடைத்து விடப் போகிறது என்ற ஆறுதலான சலிப்பு எழுந்து கவலையைத் தணித்தது.

மானேஜரின் நண்பர்கள் விடைபெற்று எழுந்தனர். அறை காலியாகி அடுத்தாற்போல் யாரும் வருவதற்கு முன் அவன் சடாரென்று உள்ளே நுழைந்தான். செய்து முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்துப் புருவத்தை நெரித்துக் கொண்டிருந்த மானேஜரின் முன் சென்று வணக்கம் தெரிவித்தான்.

"எஸ்.. என்ன வேண்டும் உங்களுக்கு?"

அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். 'எப்படி ஆரம்பிப்பது?' என்று யோசிக்க ஆரம்பித்து, உடனேயே, தான் யோசித்து முடித்துப் பேசும் வரை காத்திருக்க அவருக்குப் பொறுமையோ, நேரமோ இருக்காது என்ற உணர்வினால் உந்தப்பட்டு அவசரமாகப் பேச ஆரம்பித்தான்.

"சார், என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பி.காம் படித்திருக்கிறேன். பாஸ் பண்ணி ஐந்து வருடம் ஆகி விட்டது. இத்தனை நாட்களாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்பா ஓய்வு பெற்று உடல் நிலை தளர்ந்து வீட்டில் இருக்கிறார்.அக்கா, தம்பி, தங்கைகள் என்று நாலு பேர் உண்டு....இருங்கள். சுய தொழில் ஆரம்பிக்க நான் கடன் கேட்கப் போவதில்லை. எனக்கு இப்போதுதான் ஒரு வேலை கிடைத்திருக்கிறது..."

"வெரி கிளாட்!" என்று இடை மறித்தார் மானேஜர். 'இதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தாயா? என்னிடம் ஏன் இதைச் சொல்ல வேண்டும்?' என்ற கேள்விகள் கண்ணியம் காரணமாக அவரது வாயிலிருந்து வெளிவராமல் கண்கள் வழியே வர முயன்றன.

"..ஒரு விசித்திரமான சூழ்நிலை. இத்தனை நாளாகக் குடும்பச் செலவுக்காக எங்கள் எல்லா உடைமைகளையும்  விற்று விட்டோம். இனி நாளைக்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்தபோதுதான் இந்த 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' வந்தது. நான் இந்த வேலயில் அடுத்த வாரம் சேர வேண்டும். அதன் பிறகு சம்பளம் வர ஒரு மாதமாகும். என் முதல் சம்பளம் என் கைக்கு வரும் வரையில் என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. எல்லோரிடமும் ஏற்கனவே கடன் வாங்கியாகி விட்டது. இனிமேல் வேறு யாரிடமும் போய்க் கடன் கேட்பதற்கும் வழியில்லை."

அவனுடைய கதையைக் கேட்பதில் அவருக்கு அக்கறை இல்லாவிட்டாலும், ஆர்வம் தூண்டப்பட்டவராக, அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"கணக்குப் போட்டுப் பார்த்தேன். என் முதல் சம்பளம் கைக்கு வரும் வரை எங்கள் குடும்பச் செலவுக்குக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது வேண்டும். அடமானம் வைப்பதற்கு எங்களிடம் ஒரு பொருளும் இல்லை. யாரிடமும் கடன் கேட்கவும் வழியில்லை. நினைத்துப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான, விலை போகக் கூடிய, கடைசித் துரும்பு வரை அடகு வைத்தோ விலைக்கு விற்றோ  இழந்த பிறகு, 'இனி எதுவுமே இல்லை' என்று சுத்தமாகத் துடைக்கப்பட்ட நிலைக்கு வந்த சமயம், நான் எப்போதோ முயற்சி செய்து மறந்து கூடப் போய்விட்ட இந்த வேலைக்கு ஆர்டர் வந்திருக்கிறது."

மானேஜர் பொறுமையைக் கொஞ்சம் இழந்தவராக இடை மறித்தார். "வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் மிஸ்டர்...உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?...எஸ்...   கிருஷ்ணமூர்த்தி! இந்த உலகத்தில் யாருமே, இல்லாமையால் அடியோடு நசித்துப்போய் விடுவதில்லை. ஏதாவது ஒரு உதவி அல்லது ஆதரவு அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். பல சமயங்களில் நமது கஷ்டங்கள் தீர்க்கப்படுவதற்குக் காரணமே மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்க நம்மைத் தயார்ப் படுவதற்குத்தானோ என்று கூடத் தோன்றும்.... எனிவே தட் இஸ் பிஸைட் த பாயின்ட்... அண்ட் பை தி வே இன்று சனிக்கிழமை எனக்குத் தலைமேல் வேலை இருக்கிறது. நீங்கள் இன்னும் விஷயத்தைச் சொல்லவேயில்லை."

"அதற்குத்தான் வருகிறேன் சார்" என்றான் அவன் அவசரமாக. யாராவது இடையூறாக வந்து விடுவார்களோ என்று அச்சத்துடன் ஒருமுறை கண்களைச் சுழற்றிப் பார்த்தான். "நான் சொன்ன மாதிரி, என் முதல் மாதச் சம்பளம் வரும் வரை என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு ஒரு வழியும் இல்லை. நானும் எல்லா விதத்திலும் முயன்று பார்த்து விட்டேன்...உங்கள் பாங்க்கிலிருந்து நீங்கள் எனக்கு ஐநூறு ரூபாய் கடன் கொடுத்து உதவ முடியுமா?"

இதைச் சொல்லி முடித்ததும், ஏதோ குற்றம் இழைத்து விட்டதுபோல் மானேஜரைப் பார்த்தான். அவரும் அவனைச் சற்று விசித்திரமாகப் பார்த்தார். "மிஸ்டர்! நீங்கள் படித்தவர். பாங்க்குகளைப் பற்றிய விவரங்கள், விதிமுறைகள்  உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இது போன்ற கடன்கள் எதுவும் எங்களால் கொடுக்க முடியாது. சிறிய அளவில் நீங்கள் ஏதாவது தொழில் தொடங்குவதாக இருந்தால்.."

"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று அவன் இடை மறித்தான். இவர் அவன் இதுவரை சந்தித்த மற்ற பாங்க் மானேஜர்களீடமிருந்து வேறுபட்டவராக இருக்கிறார். அவன் நிலைமையைப் புரிந்து கொண்டிருக்கிறார். கேலி செய்யவில்லை. பேச்சில் அலட்சியமோ கோபமோ இல்லை. அமைதியாகத் தமது நிலையை விளக்குகிறார். இதுவே அவனுக்குத் தெம்பூட்டியது.

"பிஸினஸில் ஒருவருக்கு லாபம் வருமா வராதா என்ற நிச்சயமற்ற நிலைமையில் கூட அவருக்குக் கடன் கொடுக்கிறீர்கள். இதோ என்னுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். உறுதியான வேலை. நிச்சயமான சம்பளம். இந்தச் சம்பளத்திலிருந்து என்னால் கண்டிப்பாக உங்கள் கடனை அடைக்க முடியும். இதை ஒரு உறுதிப்பாடாக எடுத்துக்கொண்டு நிங்கள் எனக்குக் கடன் கொடுத்து உதவக்கூடாதா?"

"நோ! நோ!..உங்களுக்குப் புரியவில்லை. பாங்க்கின் விதிமுறைகள் நீங்கள் சொல்கிற லாஜிக்குக்கு உட்பட்டவை இல்லை...பை தி வே, நான் உங்களை ஒன்று கேட்கலாமா? இந்த வேலை உங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?"

அவன் ஒரு சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்து விட்டுத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவரிடம் காட்டினான். "இதோ பார்த்தீர்களா? இது 'பினோபார்பிடான்' என்ற தூக்க மாத்திரைக்கான பிரிஸ்கிரிப்ஷன். என் அப்பாவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தது. இதை நாலைந்து கடைகளில் காட்டித் தேவையான அளவுக்குத் தூக்க மாத்திரைகளை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்போம். மாத்திரை வாங்கப் பணம் ஏது என்று கேட்காதீர்கள்! எனக்கு வேலை கிடைத்தால் திருப்பதி உண்டியலில் சேர்ப்பதாகப் பிரார்த்தித்துக்கொண்டு என் அம்மா அவ்வப்போது உண்டியலில் போட்டுச் சேர்த்து  வைத்திருக்கிற பணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஏன், இப்போது கூடப் பல பாங்க்குகளில் கடன் கேட்டுப் பார்த்து அவர்கள் எல்லோரும் கை விரித்த பிறகுதான் உங்களிடம் வந்திருக்கிறேன். இப்போது நீங்களும் இல்லையென்று சொல்லி விட்டால், இந்த பிரிஸ்கிரிப்ஷன் தான் எங்களைக் 'காப்பாற்றப்' போகிறது.

மானேஜரின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது. இவனிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ! ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்து விட்டு அப்புறம் சொன்னார். "மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி! நீங்கள் கேட்கிற உதவியை இந்த பாங்க்கின் மானேஜராக என்னால் செய்ய முடியாது. பட் ஐ வாட் டு ஹெல்ப் யூ.  இன்று சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு இந்த உதவியை என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். பாங்க்கில் கடன் வாங்கினால் எப்படித் திருப்பிச் செலுத்திவீர்களோ அது போல இந்தக் கடனையும் மாதத் தவணைகளில் கட்டி விடுங்கள்!"

அவன் அவரை நம்ப முடியாத பிரமிப்புடன் பார்த்தான். அளவு கடந்த வியப்பினாலும், எதிபாராத மகிழ்ச்சியினாலும் திடீரென்று வாயடைத்துப்போய்ப் பேச்சு வர மறுத்தது."சார்!...நான்..ஓ!..கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது...தாங்க் யூ ஸோ மச் சார் ரியலி சார் நீங்கள் ஒரு..."

அவருடைய வீட்டு விலாசத்தை வாங்கிக்கொன்டு அவன் விடை பெற்றுக்கொண்டான்.
வன் வேலைக்குப் போக ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. பாங்க் மானேஜர் கடனாகக் கொடுத்த பணத்தை வைத்து முதல் மாதச் செலவுகளைச் சமாளித்து விட்டான். கடன் தொகையான ஐநூறு ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஆறு மாதத் தவணைகளில் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தான்.

ஆனால் முதல் மாதம் அவனால் பணம் கொடுக்க முடியவில்லை. முதல் மாதச் செலவுகள் அதிகமாகி விட்டதால், வேறு சில சிறிய கடன்கள் சேர்ந்து விட்டன. பாங்க் மானேஜரை நேரில் பார்த்து விளக்கியபோது அவர் பெருந்தன்மையுடன் அவனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

இப்போது இரண்டாவது மாதச் சம்பளம் வந்து விட்டது. இந்த மாதமும் ஒரு சிக்கல். அவன் தனக்கு மிக அவசியமாகச் சில உடைகள் வாங்கும்படி நேர்ந்து விட்டதால் மறுபடி பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.

இந்த முறை அவரை நேரில் பார்த்துச் சொல்ல அவனுக்குச் சங்கடமாக இருந்தததால் தொலைபேசியில் தனது நிலையைச் சொல்லி வருந்தினான். அவருக்குச் சற்று  ஏமாற்றமாக இருந்தாலும் அவனைக் குறை கூறவில்லை.

மூன்றாவது மாதம் நிச்ச்யம் அவருக்குப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் இருந்தான். ஆனால் மீண்டும் சில பிரச்னைகள்! அவன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவச் செலவுகள் கணிசமான தொகையை விழுங்கி விட்டன. இந்த முறை அவரிடம் பேச அவனுக்குத் துணிவு வரவில்லை. ஒரு கடிதம் மட்டும் எழுதினான்.

ன்றைக்கு அவன் சற்றும் எதிர்பாராத விதமாக பாங்க் மானேஜர் அவன் வீட்டுக்கு  வந்து விட்டார்.

இப்போது அவர் கடன் கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒரு தவணை கூட அவன் திருப்பிச் செலுத்தவில்லை. மாதாமாதம் ஏதாவது செலவு வந்து குறுக்கிட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வருந்துவது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக அவன் அவருக்குக் கடிதம் கூட எழுதவில்லை.

ஆனாலும் இப்போது கூட அடுத்த மாதம் அவருக்குக் கண்டிப்பாகப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் அவரே வந்து விட்டார்.

"வாருங்கள் சார். உட்காருங்கள்" என்று அவன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு அவரை வரவேற்றான்.

காப்பி கொடுத்து உபசரித்த பிறகு அவன் தயக்கத்துடன் ஆரம்பித்தான்.  :ஐ ஆம் ஸோ சாரி!"

அவர் அவனைப் பேச அனுமதிக்காமல், "மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி! ரேடியோ, சோஃபா செட் எல்லாம் எப்போது வாங்கினீர்கள்?"  என்றார்.

ரேடியோ போன மாதம், சோஃபா செட் அதற்கு முந்தின மாதம். எல்லாம் தவணைதான் சார். இந்தத் தவணைத் தொகைகளே நிறைய ஆகி விடுவதால்தான் உங்கள் பணம் அப்படியே நிற்கிறது... அடுத்த மாதம்...கண்டிப்பாக.."

"அதாவது அடுத்த மாதம் நீங்கள் தவணை முறையில் டெலிவிஷன் வாங்காமல் இருந்தால்!"

அவன் மௌனமாக இருந்தான்.

சற்று நேரம் கழித்து அவர் கேட்டார். "நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் என்னிடம் பாங்கிலிருந்து கடன் கொடுக்க முடியுமா என்று கேட்டுத்தானே வந்தீர்கள்? ஒருவேளை பாங்க் விதிமுறைகளின்படி கடன் கொடுப்பது சாத்தியமாக இருந்து நான் பாங்க்கிலிருந்தே உங்களுக்குக் கடன் கொடுத்திருந்தால், பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளைக் கட்டாமல் இருந்திருப்பீர்களா?"

அவன் மௌனமாக இருந்தான்.

அவர் விடவில்லை. "அப்போது வேறு என்ன செலவு இருந்தாலும் பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளை ஒழுங்காகக் கட்டியிருப்பிர்கள் இல்லையா?"

அவன் அதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாமல் 'ம்ம்ம்.' என்று முனகினான்.

அதற்குப் பிறகு சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.