Saturday, November 17, 2012

10. நாளைய செய்தி இன்றே!

பொதுவாகவே எதையும் உடனே நம்பி விடாதாவன் நான். எதையுமே தீர விசாரித்து விட்டுத்தான் நான் ஒரு முடிவுக்கு வருவேன்.

அதனால்தான் பிரபல மாஜிக் நிபுணர் சுரேந்திராவின் சில சாதனைகளை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தற்செயலாக அவரை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. நான் ஒரு பத்திரிகையாளன் என்று அறிந்ததும், என்னுடன் நெருக்கமாகப் பழகுவதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அந்தப் பார்ட்டிக்குப் பிறகும் எங்கள் தொடர்பு நீடித்தது. 

சில நாட்கள் பழக்கத்துக்குப் பிறகு, ஒருநாள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன். 

"உண்மையைச் சொல்லுங்கள் சுரேந்திரா. உங்கள் சாதனைகள் எல்லாம் மக்களைக் கவர்வதற்காக நீங்கள் செய்கிற சின்ன ஏமாற்று வேலைதானே?" ('சின்ன' என்ற பெயர்ச்சொல் சுரேந்திரா அதிகம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக என்னால் அனிச்சையாகச் சேர்க்கப்பட்டது!)

சுரேந்திராவின் முகம் சட்டென்று வாடி விட்டது. 

"ராகவ், நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று நான் எதிர்பர்க்கவில்லை. என்னுடைய 'மாஜிக் காட்சிகளில்' நான் செய்பவை எல்லாம் தந்திரங்கள்தான். அதைத் தவிர, தனிப்பட்ட முறையில் நான் ஒரு கிளார்வாயன்ட். நீங்கள் எதை ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார் வருத்தமும் கோபமும் கலந்த குரலில்.

" 'கிளார்வாயன்ட்' என்றால்...?"

"பின்னால் நடக்கப் போகும் சில விஷயங்களை மனதால் உணர்ந்து கூறும் ஆற்றல்" என்று 'கிளார்வாயன்ஸியை' வரையறுத்தார் சுரேந்திரா.

நான் பெரிதாகச் சிரித்து, "கடைசியில் நீங்கள் ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லையா?" என்றேன்.

"ஜோதிடக்கலை என்பது வேறு. அது ஒருவகை விஞ்ஞானம். அதற்கென்று சில விதிகள், வரைமுறைகள், சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன. ஜோதிடத்தை ஒரு பாடமாக, ஆர்வமுள்ளவர்கள்  யார் வேண்டுமானாலும் படித்து ஒரு ஜோதிடர் ஆக முடியும். மற்ற துறைகளில் இருப்பதுபோல் ஜோதிடத்திலும் மிகத் திறமையானவர்கள் என்று ஒரு சிலரே இருப்பார்கள். 

"ஆனால் 'வரும் பொருள் உரைத்தல்' என்று சொல்லக் கூடிய கிளார்வாயன்ஸி இவ்வுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் அளித்திருக்கும் ஒரு வரம். ஒருவருக்கு இயல்பாகவே அமைந்தாலொழிய இந்த ஆற்றலைப் பெறுவது என்பது பெரும்பாலும் இயலாத ஒரு செயல்.

"தற்காலத்தில், கிளார்வாயன்ஸியைக் கூடக் கற்பிக்கிறோம் என்று சிலர் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கற்றுக் கொடுக்க முனைபவர்களுக்கே இந்த ஆற்றல் இருக்கிறதா என்பது கேள்விவிக்குறிதான்!" என்று சுருக்கமாக(!) ஒரு விரிவுரை ஆற்றினார் சுரேந்திரா.

"உங்களுக்கு இந்த ஆற்றல் இருக்கிறது என்பதை எப்படிக் கண்டறிந்தீர்கள்?"

"சில நிகழ்ச்சிகள் அவை நடப்பதற்குச் சிறிது காலம் முன்பே என் மனதில் தோன்றியிருக்கின்றன என்ற உணர்வு எனக்குச் சிலமுறை ஏற்பட்டது. அதன் பிறகு என் மனதில் தோன்றும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். சிறிது காலம் கழித்து அவை உண்மையாகவே நிகழ்ந்தபோது என் ஆற்றலை உறுதிப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு என் ஆரூடங்களை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தேன்."

"குறிப்பாக நீங்கள் சொன்னபடி நடந்த சில விஷயங்கள்?"

"ராஜீவ் காந்தி மரணம், தேவ கவுடா பதவி இழந்தது..."

"மன்னியுங்கள். இது போன்ற பல அரசியல் நிகழ்வுகளை, பல்வகையான ஜோதிட முறைகளின்படி கண்டறிந்து சொன்னதாகக் கூறிக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்."

"சரி. நான் ஒரு பந்தயத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். இன்று தேதி பத்து. வரும் இருபதாம் தேதி 'ஹிந்து' பத்திரிகையின் தலைப்புச் செய்தி எதுவாக இருக்கும் என்பதை ஒரு பேப்பரில் எழுதி உங்கள் முன்பே ஒரு கவரில் போட்டு சீல் செய்து கொடுக்கிறேன். இருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையின் தலைப்புச் செய்தி எது என்று பார்த்து விட்டு, அதன் பிறகு இந்தக் கவரைத் திறந்து பார்த்து, இரண்டும் ஒன்றாக இருந்தால் அன்று இரவு செம்பியன் ஹோட்டலில் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுப்பீர்களா?"

பந்தயத்தை ஏற்றுக் கொண்டேன்.

"இருபதாம் தேதி நடக்கப் போகும், இந்தப் பேப்பரில் எழுதாத இன்னொரு நிகழ்வை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன்" என்றார் சுரேந்திரா

"என்ன அது?" என்றேன்

"இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் நீங்கள் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுக்கப் போகிறீர்கள்" என்றார் அவர் சிரித்தபடி.

அடுத்த சில நிமிடங்களில் அவர் கொடுத்த சீல் வைத்த கவருடன் வெளியேறினேன்.

ருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையில் மட்டுமல்ல எல்லா பத்திரிகைகளிலும் ஒரே செய்திதான் வந்திருந்தது. டில்லிக்கு அருகே 19ஆம் தேதி நள்ளிரவு நடந்த கோரமான ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான் அது.

இந்தச் செய்தியை சுரேந்திராவால் நிச்சயம் 'முன் உணர்ந்திருக்க' முடியாது என்ற நிச்சயத்துடன் நான் பாதுகாப்பாக வைத்திருந்த சுரேந்திராவின் 'ஆரூடம்' அடங்கிய சீல் வைத்த கவரைப் பிரித்துப் படித்தேன்.

என்னால் நம்ப முடியவில்லை. ரயில் விபத்து குறித்த செய்தியைத்தான் சுரேந்திரா எழுதியிருந்தார்!

சுரேந்திரா பந்தயத்தில் ஜெயித்து விட்டார். அவர் எழுதிக் கொடுத்த ஆரூடம் பலித்து விட்டது. 

ஆனால் அவர் வாயால் சொன்ன ஆரூடம் பலிக்கவில்லை. என்னால் அவருக்கு இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் விருந்து கொடுக்க முடியவில்லை - இரண்டு காரணங்களால்.

முதல் காரணம், முதல் நாள் இரவு நடந்த ஒரு தீ விபத்தில் செம்பியன் ஹோட்டல் பெரும் சேதம் அடைந்து தற்காலிகமாக முடப்பட்டு விட்டது.

இரண்டாவது காரணம், 19-ஆம் தேதி இரவு சுரேந்திரா மாரடைப்பால் இறந்து போய் விட்டார்.



No comments:

Post a Comment